Tuesday 31 December 2019

2019 ல் இருந்து 2020!

ஒரு வருடத்தைத் தின்று செரித்த நாட்களில் என்ன செய்திருக்கிறேன் என கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தது வருடத்தின் கடைசி தினக் குறிப்பேடு. அது தந்திருக்கும் மதிப்பீடுகள் ---------------------------------------------------------------------------------------------------------------------.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல் -  என்ற வள்ளுவ வாக்கிற்கேற்ப பிள்ளைகள் சார்ந்து அதிகம் செலவிட்டிருக்கிறேன். மகனின் ஓவியங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்புதல், அவர்களின் பள்ளிக்கூட புராஜெக்ட் வேலைகள், போட்டிகளுக்குத் தயார் செய்து அனுப்புதல் என வருடம் முழுக்க பெரும்பகுதி நேரங்கள் அவர்களுக்காகவே போயிருந்திருக்கிறது.

அச்சில்அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறுநூல் (நன்றி பாரதி புத்தகாலயம்), இரண்டு சிறுகதைகள் (நன்றிசிங்கப்பூர் தமிழ்முரசு, வாதினி தீபாவளி மலர்),  நான்கு கட்டுரைகள் ( நன்றிஉங்கள்நூலகம் மாத இதழ்,  தினமணிசிறுவர் மணி இதழ்)

இணையத்தில்   ஒரு நூல் விமர்சனம் (நன்றி  - பதாகை மின்னிதழ்) வந்திருக்கிறது.

பதிப்பாளர்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையில் நான்கு  நூல்களை அனுப்பி வைத்திருக்கிறேன். முடிவுகளுக்காக அவைகளைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.  

இந்த வருட மதிப்பீடுகள் அத்தனை உவப்பாய் இல்லை! இனித் தொடங்கப் போகும் வருடத்திலாவது ஏதேனும் உருப்படியாய் செய்ய வேண்டும். 

அனைவருக்கும் 2020புத்தாண்டு வாழ்த்துகள்.

Sunday 29 December 2019

வரை ஓவியமும் – வாழ்த்து வாசகமும்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நண்பர்கள், உறவினர்களின் இல்ல நிகழ்வுகளில் அதுவும் குறிப்பாக திருமணங்களில் பல வண்ணங்களில்வடிவங்களில்வகைகளில் சுவர்கடிகாரங்கள் அன்பளிப்பாய் வரும். அதற்கு பேட்டரி வாங்கிப் போட்டு மாள முடியாது என்பதால் பலரது வீடுகளிலும் அவைகள் பரண் ஏறிக் கிடக்கும். இவைகளை எல்லாம் பார்க்கும் பாக்கியம் கிட்டியதாலோ என்னவோ எதன் பொருட்டும்  எங்களிடமிருந்து சுவர்கடிகாரங்கள் எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டோம். அதற்குப் பதிலாக கடைகளில் வாழ்த்துமடல்களை வாங்கி அன்பளிப்பாய் கொடுத்து வந்தோம்ஒரு நண்பரின் திருமணத்தில் எங்களைப் போலவே வேறு சில நண்பர்களும், உறவினர்களும் அப்படியான வாழ்த்துகளை வாங்கித் தந்திருந்தனர்ஒரே மாதிரியான இந்த வாழ்த்துகளை நண்பர் என்ன செய்வார்? என்ற கேள்வி அன்றிரவு முழுக்க மண்டைக்குள் மணியடித்துக் கொண்டே இருந்தது.  நிச்சயம் அவைகளைப் பரண் ஏற்றுவார் என்றே தோன்றியது. அதனால், சுவர்கடிகாரங்கள் வரிசையில் கடைகளில் விற்கும் அன்பளிப்பு வாழ்த்துகளும் சேர்ந்தன.