Sunday 30 May 2021

பழைய தாத்தா!


 

நீ மட்டும் வார......தாத்தா எங்கடா?

தாத்தா இன்னொரு பழைய தாத்தாவோடபேசிக்கிட்டு வாராங்க.

பழைய தாத்தான்னா?

அவங்களுக்கு நம்ம தாத்தாவ விட சின்ன மீசை, கொஞ்சமா வெள்ளை முடி, பயங்கர ஸ்லோவா நடக்குறாங்க. அப்ப அவங்க பழைய தாத்தா தானே!

Saturday 29 May 2021

கேள்விக்குறி – உணர வைத்தல்

நீண்ட மருத்துவ விடுப்பு தந்து கொண்டிருக்கும் ஓய்வின் சலிப்பும், வெளியில் செல்ல முடியாத தீநுண்மி கால முடக்கமும் ஒருவித வெறுமையை அப்ப வைத்திருந்தன.  இவைகள் அலை அலையாய் மனம் முழுக்க கேள்விகளை எழுப்பிய படியே இருந்தது. அந்தக் கேள்விகளின் மறுமுனை கோபமாய், ஆதங்கமாய், வெறுப்பாய், எரிச்சலாய் குடும்ப உறுப்பினர்கள் மீது விழுந்து கொண்டே இருந்தது. ஏனோ அவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கடந்து போன போது என்னுள் அது அளவில்லா குற்றவுணர்வைத் தந்தது.  கேள்விகளின் ஒரு முனையை மட்டும் பிடித்திருந்த நான் அதன் மறுமுனையைவும் என்னை நோக்கி திருப்பிக் கொண்டேன். அப்பொழுது, நாம ஏன் இப்படி இருக்கிறோம்? என்ற கேள்வி மனதில் எழுந்தது. அந்த கணம் நினைவில் வந்தது கேள்விக்குறிபுத்தகம்.

வாசித்து சில வருடங்கள் ஆன நிலையில் புத்தக அடுக்குகளில் தேடி எடுத்து மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். ஏன் இப்படி இருக்கீங்க? என்ற கேள்வியில் தொடங்கி தொகுப்பில் இருக்கும் 16 கேள்விகள் வழியாகவும் என்னை நானே ஊடுருவி பார்த்துக் கொண்டேன். இக்கேள்விகளில் சிலவற்றை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எதிர் கொண்டிருப்போம். வேறு சிலவற்றை மற்றவர்களிடம் கேட்டிருப்போம். எதிர் கொள்வதற்கும், கேட்பதற்கும்  பொதுவாய் பார்க்கும் போது பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியும். உற்று நோக்கினால் இரண்டும்  ஒன்றே என்பதை உணர முடியும். முனைகள் மட்டுமே வேறாக இருக்கும்!

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 6

அத்தியாயம் – 6 

இடப்பெயர்ச்சி

திரைப்படங்களில் அடுத்து வரப்போகும் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்ப்பதற்காக பருந்துப் பார்வையில் அவ்விடத்தை, மக்களைக் காட்டுவது வழக்கம். அப்படியாக நீலநகரம், அந்நகரவாசிகள் பற்றிய முன்னோட்டமே “இடப்பெயர்ச்சி”!

கோவிந்தசாமியின் நிழலோடு சூனியன் நகருக்குள் நுழைகிறான். சுங்கச்சாவடி, காவலர்கள், கார்கள் என்ற கடந்த அத்தியாய நகர்வுகளை வைத்து நாம் நீலநகரம் பற்றிய முன்முடிபு ஏதும் வைத்திருந்தால் அதை தூக்கி எறிந்து விடலாம். நகர அமைப்பு மட்டுமல்ல அங்கிருக்கும் கட்டிடங்களும் கூட வித்தியாசமாகவே அமைந்திருக்கிறது. அது நமக்கு மட்டும் தான்! சூனியனுக்கோ, தன் நகர கட்டிடக் கலையோடு ஒப்பிடும் போது நீலநிற கட்டிடக்கலையின் அமைப்பு கேவலமாய் தெரிகிறது.

Thursday 27 May 2021

பண நிர்வாகம் – ஆரம்ப அறிதல்!

பணம் – ஒரு மாயை. புரிந்தவனுக்கு நிம்மதி. புரியாதவனுக்கு ஏமாற்றம் – இது இந்நூலில் பணம் சார்ந்து இடம் பெற்றிருக்கும் ஒரு வாசகம்.  இந்த வாசகத்தின் ஊடாக பணம், சேமிப்பு, முதலீடு சார்ந்தும், அதன் எதிர்மறை விளைவுகள் சார்ந்தும் 87 பக்கங்களில் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் T.S.ஜயராம்.

சில்லறைகளில், கடன் அட்டைகளில், நம்முடைய கவனமின்மைகளில், அதீத ஆர்வக்கோளாறில், நம்பிக்கையில், தேவைகள் சார்ந்து எழுப்பப்படாத கேள்விகளில் என எங்கெல்லாம் நம்முடைய பணத்தை நம்மையறியாமலே இழக்கிறோம் என்பதை ஆசிரியர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறார். இதில் நாம் கவனம் செலுத்தினால் மாதந்தோறும் சில நூறு ரூபாய்களாவது நம் பாக்கெட்டில் மிஞ்சும்.

Tuesday 25 May 2021

சிகப்பு கோடுகள் – சித்தாந்த பார்வை

பத்துக் கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுதி. வா. ஸ்டாலினின் முதல் தொகுப்பு. முற்றாக மாறுபட்ட களம் என்றில்லாமலும், கண்டடைய வேண்டிய புள்ளியின் தூரம் இன்னும் நீண்டிருக்கும் நிலையிலும் உருக்கொண்டிருக்கும் இக்கதைகள் மண்ணும், மனமும் சார்ந்த விசயங்களை நம்முன் கதைமாந்தர்களாய் விரித்து வைக்கின்றன. ஒரு கதையானது வாசிப்பவனை கட்டுடைக்க வேண்டும், அப்படி உடைபடுபவன் மீண்டும் தன்னை கட்டமைத்துக் கொள்வதற்கான திறப்புகளையும் அக்கதையே அவனுக்குத் தரவேண்டும் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்ட, புனையப்பட்ட கதைகளின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது. இத்தொகுப்பில் இருக்கும் கதைகளில் சில அந்த அடிநாதத்தைத் தொட்டுச் செல்கிறது.

வெவ்வேறு களங்களில் கதைகள் விரவி நின்றபோதும் அவைகளின் மையமாக மூடநம்பிக்கைகள், நலிந்து போன சிறு வியாபாரிகள், சமூகப்புறக்கணிப்புகள், விழிப்புணர்வு, வர்ணாஸ்ரமம், விளிம்பு மனிதர்கள் எதிர்கொள்ளும் எள்ளல் ஆகியவைகள் அமைந்திருக்கின்றன. இவைகளின் நிகண்டுகளாக தன்னை முன் நிறுத்திக் கொள்பவன் படைப்பாளியாகிறான். தன் கன்னி முயற்சியோடு கதைத்தளத்திற்குள் வந்திருக்கும் ஸ்டாலினையும் அந்தவகையில் பார்க்க முடிகிறது.

Friday 14 May 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 5

அத்தியாயம் – 5

 கோவிந்தசாமியின் வம்ச சரித்திரம்

கோவிந்தசாமி ஏன் நீல நிற நகருக்கு வந்தான்? அவன் தலைக்குள் இறங்கிய சூனியன் அவன் மூலம் தன் உலகத்தை எப்படி ஆட்டுவிக்கப் போகிறான்? என்ற இரு கேள்விகள் கடந்த நான்கு அத்தியாயங்களையும் வாசித்த பின் தொக்கி நின்றது. முதல் கேள்விக்கான விடையாககோவிந்தசாமியின் வம்ச சரித்திரம்விரிகிறது.

தான் விரும்பிய படி தன் காதல் மனைவி இல்லை என்ற போதும் அதற்காக அவள் மீது கோபம் கொள்ளாத மூடனாக கோவிந்தசாமி இருக்கிறான். ஒருநாள் அவனுடைய பெயரை அவள் மாற்றிக் கொள்ளச் சொல்ல, பதறிப்போனவன் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் வம்ச சரித்திரத்தைச் சொல்கிறான். வாசிக்கின்ற நமக்கே அவன் மீது கழிவிரக்கம் வந்து விடுகிறது. கேட்ட சாகரிகாவுக்கு வராமலிருக்குமா என்ன? மூடனுக்கு இப்படி ஒரு முகவரி!

Thursday 13 May 2021

நேரம் நல்ல நேரம் – விழிப்புணர்வு

தன்னம்பிக்கை நூல்களுக்கான விற்பனை வரிசை என்பது எல்லா வருடங்களிலும் சீராகவே இருக்கும் என பதிப்பாளர்கள் சொல்லும் அளவுக்கு அவைகள் தரும் நம்பிக்கைகளும் தேவையாகவே இருக்கிறது. அந்த வகையில் நேரம் சார்ந்த விழிப்புணர்வைத் தரும் இந்நூல் சிறந்த நேர நிர்வாகியான லேனா தமிழ்வாணன்  அவர்களால் எழுதப்பட்டது என்பது இதன் சிறப்பு. மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

தமிழில் எழுதப்பட்டிருக்கும், எழுதப்படும் தன்னம்பிக்கை நூல்களில் பெரும்பாலானவைகள் இரண்டு வகையான டெம்ப்ளேட்டுகளை மட்டுமே கொண்டிருக்கும்.

முதல்வகை, ஜெயித்தவர்கள் – சாதித்தவர்களின் வாழ்விலிருந்து மேற்கோள்களைக் காட்டி அதன் வழியாக வாசிப்பவனுக்கு நம்பிக்கை தருவது. இரண்டாவது வகை, பிற உதாரணங்களை மேற்கோள் காட்டாமல் தன் சுய அனுபவ வார்த்தைகள் மூலம் வாசகனுக்கு நம்பிக்கை ஊட்டுவது. இதில், இரண்டாவது வகையைச் சேர்ந்தது இந்நூல். இந்த யுக்தி தான் லேனா தமிழ்வாணன் அவர்களுடைய படைப்பின் அடையாளம் எனலாம்.

Tuesday 11 May 2021

அறம் - கடிதம்

வணக்கம் அண்ணா.

கவிதை என்கிற வட்டத்தைத் தாண்டி கதைகள், கட்டுரைகள் பக்கம் வந்த போது நாளிதழ்கள் வெளியிடும் சிறப்பு மலர்கள் மூலமாக உங்களின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அந்த இதழ்களில் இருக்கும் பிற கதைகளைப் போல உங்கள் கதையில் மனம் ஒட்டாது. கடந்து விடுவேன். எனக்கிருந்த வாசிப்பு பயிற்சியின்மை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். உங்கள் கதைகளை அணுகுவது என்னளவில் சிரமமாக இருந்த சமயத்தில் நண்பர் ஒருவர் ஏழாம் உலகம் நாவலை தந்தார். சில பக்கங்கள் மட்டுமே கடந்த நிலையில் இன்றும் அந்நாவல் வாசிப்பிற்க்காக காத்திருக்கிறது. இந்த சூழலில் அறம் கதைகள் வந்தது. உங்களின் இணைய பக்கத்தில் வாசித்தேன்.