Saturday 2 November 2019

நட்பாட்டம்

உங்க மகள் லவ் மேரேஜ் செய்துக்கிட்டாஎன்று வந்த அலைபேசி தகவலால் ராமசாமி தவிப்போடு உட்கார்ந்திருந்தார். அவரின் மகள் சென்னையில் தங்கி தேசிய வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தாள். அவளின் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருந்ததால்  காலையில் தகவல் வந்த அலைபேசிக்கு பலமுறை முயற்சித்துப் பார்த்தார். சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. நாளை காலை ட்ரெயினை பிடித்தால் பேருந்தில் செல்வதை விட சீக்கிரமாக சென்னைக்குச் சென்று விட முடியும் என்பதால் உடனடியாக அவர் கிளம்பவில்லை. அவரின் மனைவி பெருங்குரலெடுத்துப் புலம்பியதில்  தெருவுக்கே விசயம் தெரிந்து போனது. சிலர் இவர்கள் வீட்டு வாசல் வரை வந்து எட்டிப் பார்த்தனர். பலர் அவரவர் வீட்டு வாசலில் கூடி நின்று ராமசாமியின் வீட்டுக் கதையை பேசிக் கொண்டிருந்தனர்.

ராமசாமியை ஜாக்சன் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். ஜாக்சன் ராமசாமியின் எதிர்வீட்டுக்காரர். நடைப்பயிற்சியில் தொடங்கிய அவர்களின் நட்பு பின்னர் குடும்ப நட்பாய் மலர்ந்திருந்தது. ராமசாமியும், அவர் மனைவியும் சென்னை சென்ற பின்பும் கூட தெரு அவர்கள் வீட்டுக் கதையை விடவில்லை. பூச்சூடி அலங்காரம் செய்து உலாவ விட்டுக் கொண்டிருந்தது. இதெல்லாம் ராமசாமி சென்னையில் இருந்து திரும்பும் வரை தான்! அதன்பின் மொத்த சூழலுமே மாறிப் போனது.