Sunday 30 January 2022

துரோகச் சுவடுகள் – வாழ்தலின் விழிப்பு

துரோகத்திற்கும், நம்பிக்கைக்குமான இடைவெளியில் நிற்கும் ஒருவன் எதன் பக்கம் சாய்கிறான் என்பதே அவனுடைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அந்த தீர்மானித்தல் துரோகம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளும் போது அது எதிரில் இருப்பவர், பாதிக்கப்பட இருப்பவர் உள்ளிட்ட எவர் பற்றியும், எது குறித்தும் கவலை கொள்வதில்லை. துரோக எண்ணத்தில் தீவிரம் கொண்டு இயங்கும் ஒருவரின் செயலானது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல வரலாற்றிலும் சுவடுகளாகப் பதிந்து விடுகிறது என்பதை விளக்கும் நூல் துரோகச் சுவடுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழியாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் வெ. இறையன்பு.

துரோகங்களின் வகைகள், அது எங்கிருந்து, யாரால், எப்பொழுது கட்டவிழ்க்கப்படுகிறது என்பதையெல்லாம் வாசிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. குறிஞ்சி மலரைத் தேட வேண்டுமானால் பல நூறு நெறிஞ்சி மலர்களை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்தலை அத்தனை ஐயப்பாடுகளால் நகர்த்த வேண்டிய காலத்தில் தான் கி.பி. தொடங்கி இன்று வரை இருந்து வருகிறோம் என்பதற்கு துரோகச் சுவடுகளே சாட்சியாய் இருக்கிறது.

Friday 28 January 2022

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு வாசகப் போட்டி

மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு வாசகப் போட்டியில் மகள்இலக்கியா” - வின் பங்களிப்பு -


 

Wednesday 26 January 2022

பிறந்தநாள் வாழ்த்துகள் வீடே........

நேற்றைய வழக்கமான உரையாடலின் போது, நம்ம வீடு பற்றி ஏதேனும் நினைவுகள் இருக்கா? என்று மகள் கேட்டாள்.

அந்த மாதிரியெல்லாம் ஏதும் இல்லையே என்றேன்.

எப்படி இல்லாமல் இருக்கும்? நம்ம குடியிருக்குற வீட்டைப் பற்றி ஏதாவது நினைவுகள் இருக்கனும் டாடி. யோசிச்சுப் பாருங்கஎன்றாள்.

நேற்றிரவு முழுக்க அது சார்ந்த நினைவோடைகளை புரட்டிக் கொண்டே இருந்தேன்.

ஒரு ஆசிரியராய் பணியாற்றிக் கொண்டு போதிய வருமானம் கொண்டிருந்த போதும் சொந்த வீடு குறித்து என் பெற்றோருக்கு எந்த விருப்பமும் எனக்கு நினைவு தெரிந்த வரையில் இருக்கவில்லை. குடியிருந்த வாடகை வீடுகள் பெரும்பாலும் வசதியாகவே இருந்தன. காலம் மெல்ல தன் தோலுரிக்க ஆரம்பித்தது. ஒரு பெரும் இழ(ற)ப்பு நிகழ்ந்த பின் உறவுகள் சார்ந்து வாழ்தல் மன நெருக்கடியைத் தவிர்க்கும் என நினைத்தாலும் அந்த உறவுகளை எங்களால் நெருங்க இயல வில்லை.

கபடவேடதாரி – ஒரு வரி கதையும் ஒருநூறு மிகு புனைவும்!

Bynge ல் தொடராக வெளியாகி - எழுத்து பிரசுரம் வழியாக நூலாகி இருக்கும் கபடவேடதாரி யின் ஆசிரியர் பா.ராகவன்.

கபடவேடதாரியில் கதை என்று பார்த்தால்,தன்னைத் தண்டித்த கூட்டத்தைப் பலி வாங்கக் கிளம்புகிற ஒருவன் அதற்காக என்னவெல்லாம் செய்கிறான்? அவன் நினைத்தபடி நடந்ததா? என்ற ஒன்லைன் மட்டுமே! அந்த ஒன்லைனை ஐம்பது அத்தியாயங்களுக்கும் புனைவை துணைக்கு வைத்துக் கொண்டு சுவராசியமாக நகர்த்தி இருக்கிறார்.

காதல், அழுகை, ஏமாற்றம், காமம், கலாச்சாரம், சித்தாந்தம், அரசியல், நகைச்சுவை என எல்லா தளங்களையும் தொட்டு  நிற்கும் நாவலின் களத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கி இருக்கும் பிரமாண்ட பின்புலம் தரும் இரசனையும், காட்சிப்படுத்தலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை எட்டிப் பார்க்க வைக்கின்றன. படைப்புகளில் நாலும் இருக்க வேண்டும். அதுவும், நறுக்குன்னு இருக்க வேண்டும் என என் தமிழ் பேராசிரியர் சொன்னது நினவுக்கு வரும் விதமாக புனைவெழுத்தில் அடித்து ஆடி இருக்கிறார்.

Saturday 22 January 2022

முரண்பாட்டை முன்வைத்தல் - முன்னெடுப்பின் அவசியம்!

இன்றைய கல்வி முறையில் பாடத்திட்டங்கள் சார்ந்து நிலவும் முரண்களையும், அதை கற்பிப்பதில் ஆசிரியர்களும், கற்பதில் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், சமூகம் சார்ந்த நடைமுறை நிகழ்வுகளிலிருந்து வரலாறு, அறிவியல் பாடங்கள் விலகி நிற்பதையும், ஆங்கிலவழிக் கல்வி மூலம் தனியார் பள்ளிகளின் எழுச்சியையும், அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சியையும் பற்றி இந்நூல் பேசுகிறது.  லேனிங் ப்ஃரம் கான்பிளிக்ட் என்ற தலைப்பில் கிருஷ்ணகுமார் எழுதியதை ஜே.ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

முரண்பாட்டை முன்வைத்தல்என்ற முதல் தலைப்பில் பிரதமர் இந்திரா படுகொலையின் தொடர்ச்சியாக சீக்கியர்கள் மீது நிகழ்ந்த வன்முறை சார்ந்த அரசின் செயல்பாடுகள், காந்தி படுகொலைக்கான காரணத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பாடநூல்களில் பூசும் மதச் சாயங்கள் குறித்தான முரண்களை முன் வைக்கிறார். பொய்யான அல்லது நிலவும் சூழல், அரசியல் நிலைப்பாடு, சமூக நலன் கருதி மறைத்தோ, மேம்போக்காகவோ எழுதப்பட்ட பாடநூல்கள் மூலமாக மாணவர்களின் மனதில் நிஜத்திற்கு எதிரான கருத்துகளே வந்து அமர்வதாய் எச்சரிக்கிறார். வரலாற்றில் மிகையான தகவல்களை மட்டும் தந்து முரண்பாடுகளைத் தவிர்க்கும் பழைய கல்விமுறை மாணவர்களுக்கு எத்தகைய அறிவைத் தருகிறது? மாணவர்களுக்கு இந்த தேசத்தின் நிர்மானத்தை அது எப்படி புரிந்து கொள்ள வைக்கிறது?  என்பதன் வழியாக இளம் தலைமுறையினரின் அறிவுத் தேவையை நிறைவு செய்ய பழைய பாடத்திட்ட முறைகள் தடையாக நிற்கும் அவலத்தை முன் வைக்கிறார்.  நம்மால் இவைகளைத் துளியும் மறுக்க இயலவில்லை.

Tuesday 18 January 2022

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் – 1 – ஊக்க மருந்து!

மற்றவர்களின் வாழ்வியல் செய்திகளை தன் எழுத்துகளில் அரங்கேற்றாமல் தன் அனுபவங்கள் வழியாக மட்டுமே சொல்ல வேண்டிய தகவல்களை வாசிக்கின்றவர்களுக்கு நேரடியாக கடத்தும் தனக்கே உரிய ட்ரேட் மார்க்கோடு லேனா தமிழ்வாணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கல்கண்டில் தொடராக வந்து மணிமேகலைப் பிரசுரம் வழி வந்திருக்கும் இந்நூலில் 60 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் நமக்கே நமக்கானது என்பது நூலின் சிறப்பு.

பக்கம் பக்கமாக வழங்கப்படும் அறிவுரைகளால் பயன் ஏதுமில்லை. அது வழங்கப்படும் அறிவுரைகளின் அடர்த்தியை நீர்த்துப் போக வைத்து விடும் என்ற எதார்த்தத்தின் சாயலைத் தனதாக்கி குறுகத் தரித்த வார்த்தைகளில் ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது.

ஒரு பக்கக் கட்டுரைகளின் வழி ஒரு நூறு தகவல்களை, செய்திகளை மட்டுமல்லாது அதன் மூலமாக வாழ்தலுக்கான வழிமுறிகளையும், நமக்கு நாமே சுத்திகரிப்பு செய்து கொள்ள வேண்டிய விசயங்களையும், திருத்தங்களையும் சுட்டிக் காட்டுகிறார். சுடர் தரும் விளக்கில் இருந்து பயன் பெற வேண்டியது நம் கையில் தான் இருக்கிறது. பெறுகிறவர்கள் பிரகாசிப்பார்கள்.

Monday 17 January 2022

நான் கேட்பது பிச்சையல்ல. உதவி!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்று விட்டு தேநீர் அருந்துவதற்காக கடைக்குச் சென்றிருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் பப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கான டீ அருகில் இருந்தது. சப்ளையர் அவர் அருகில் ஒரு பார்சல் கவரை வைத்துவிட்டு பில்லைக் கொடுத்தார். இருவரும் ஒரே நேரத்தில் கடையில் இருந்து வெளியானோம். என் இரு சக்கரவாகனத்திற்கு அருகில் அவரும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அவருக்கு பின்னால் ஒரு சிறு சாக்கு பையைக் கையில் கோர்த்தபடி ஒரு பெரியவர் கைகூப்பியபடி நின்றார். வாய் திறந்து அவர் ஏதும் கேட்கவில்லை.

Sunday 16 January 2022

NO 1 - சேல்ஸ்மேன் – விற்பனையாளருக்கான வழிகாட்டி

இதனை இவனிடம் விற்க முடியும் என்றாய்ந்து

   அதனை அவன் கண் விற்றல் –

என்பதே விற்பனையாளனாக இருக்கும் ஒருவரின் வெற்றி சூட்சுமம். இந்த சூட்சுமத்தில் சூரனாக இருப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதனால் தான் வெற்றிகரமான விற்பனையாளராக சிலரால் மட்டுமே இருக்க முடிகிறது. அப்படியென்றால், மற்றவர்களால் அப்படி ஆக முடியாதா? என்ற எதிர் கேள்விக்கான பதில் “முடியும்”. அதற்கான வழிகளை இந்நூலாசிரியர் சோம. வள்ளியப்பன் தன் அனுபவக் குறிப்புகளோடும், நடைமுறை நிகழ்வுகளோடும், வெற்றிகரமான விற்பனையாளர்களின் அணுகுமுறைகளோடும் விளக்கி இருக்கிறார்.

ஒரு விற்பனை பிரதிநிதி (சேல்ஸ்மேன்) வாடிக்கையாளரிடம் விற்பனையை ஆரம்பிப்பதற்கு முன் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்? வாடிக்கையாளரை எவ்வாறு அணுக வேண்டும்? அவரை வாய்ப்புள்ள வாடிக்கையாளாரக எப்படி மாற்றலாம்? பொருளை வாங்க வைக்க எவ்வாறு தூண்ட வேண்டும்? தூண்டலுக்கான உரையாடலை எந்த நேரத்தில் துண்டித்துக் கொள்ள வேண்டும்? என்பன போன்ற அடிப்படையான விசயங்களை நூல் முழுக்கக் கற்றுத் தருகிறார்.

Friday 14 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 50

அத்தியாயம் – 50 

(சம்ஹார மூர்த்தி)

வெளிப்பட்ட எல்லா அத்தியாயங்களிலும் வசவுகளுக்கும், நக்கலுக்கும், நையாண்டிக்கும், ஏமாற்றத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்து அழுது புலம்பிய கோவிந்தசாமி இந்த அத்தியாயத்தில் விஸ்வரூபம் எடுத்து சங்கி என்றால் சாணக்கியத்தனம் என சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு இன்னொரு சாட்சியாகி இருக்கிறான். கடவுளை விட, பிரமனை விட தானே உயர்ந்தவன். தன் படைப்புகள் அனைத்தும் தோன்றின் புகழோடு தோன்றுபவை என காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு திரிந்த சூனியனை அவன் உருவாக்கிய பாத்திரங்களே குழப்பியடிக்கின்றன. ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடிக்க வச்சுராதீங்கடா என வடிவேலுவைப் போல புலம்ப ஆரம்பிக்கிறான்.

தனக்கு கிடைக்க இருந்த பதவிக்கு வேட்டு வைத்த கோவிந்தசாமியின் உச்சகட்ட ஆக்‌ஷனில் சாகரிகாவும், தன் படைப்புகளின் அடாவடிகளால் சூனியனியும் திகைத்துப் போகின்றனர். சூனியனுக்கான கிரிடிட்டை சாகரிகா கேட்டதும் அந்த திகைப்பும் கரைந்து போய்விடுகிறது.  ஒருவழியாக எல்லா குழப்பங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு சாகரிகா கோவிந்தசாமி ரசிகர் வட்ட சமஸ்தானத்திற்குள் நுழைய வருபவர்களை கோவிந்தசாமியின் நிழல் வரவேற்கிறது. நிழலும், நிஜமும் இணைந்து அனைவருக்கும் வேட்டு வைக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டு வாசித்தால் கோவிந்தசாமி நம் நினைப்பை பொய்யாக்கி விடுகிறான். அடியோடு அழிப்பது என முடிவெடுத்தபின் நிழலுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

Wednesday 12 January 2022

கட்டப்பொம்மனும் கலெக்டர் ஜாக்சனும் - திருப்பம் தந்த சந்திப்பு!

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பியவனாகவும், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி நின்ற கொள்ளைக்காரனாகவும் இருவேறு அடையாளங்களாக நமக்கு கட்டப்பொம்மனின் வரலாறு வாசிக்கக் கிடைக்கிறது. இவ்விரு அடையாளங்களும் சமகால வரலாற்றாசிரியர்களால் முன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது சுவராசியம்! கட்டப்பொம்மனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வராலாற்றாய்வாளர்கள் இரு கிளைகளாக பிரிந்து நின்றனர். நிற்கின்றனர். அந்த வகையில் கட்டப்பொம்மனை முதல் எதிர்ப்புக்குரலுக்குச் சொந்தக்காரனாக ஏற்று வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் செ. திவான்.

பிறப்பின் அறிமுகத்தில் தொடங்கி கயத்தாறு கட்டை புளிய மரத்தில் முடியும் வரையிலான இத்தொகுப்பின் தன் ஏற்புரைக்கு இன்னும் வலிமை சேர்க்க ஏதுவாக கட்டப்பொம்மனின் புகழ் பரப்பிய முன்னோடிகளை நூலின் முன் பக்கங்களிலேயே ஆசிரியர் வரிசைப்படுத்தி விடுகிறார்.

Monday 10 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 49

அத்தியாயம் – 49

 (நூறாயிரம் நான்கள்)

வழக்கம் போல சூனியன் தன் புகழை நீட்டி முழங்குவதில் அத்தியாயம் நகர்கிறது. இதுவரையிலும் வெண்பலகையில் போரிட்டுக் கொண்டிருந்தவர்கள் நேரடியாக சந்தித்துக் கொண்டு களமாடினால் அது இன்னொரு சுவராசியம் என நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கோவிந்தசாமியின் செயல்பாடுகள் குறித்து தன் கதாபாத்திரம் வழி அறியும் சூனியன் குழம்பிப் போகிறான். அவனின் படைப்புகள் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன. தான் திட்டமிட்ட படி எதுவும் நடக்காததால் கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறான்.

சித்தாந்தங்களின் அடையாளத்தில் தன் படைப்புகள் பிரசவித்திருந்ததால் குழப்பம் விளைவிப்பவர்களை ஒழித்துக் கட்ட எல்லா சித்தாந்தவாதிகளும் கட்சிக்குள் குழப்பம் விளைப்போரை போட்டுத் தள்ள சொல்லும் யோசனையை சூனியனும் ஏற்கிறான். பூகம்பச்சங்கைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறான். அழிவுக்கான ஆயுதங்களாக அவனுடைய கதாபத்திரங்கள் இல்லாத்து ஏமாற்றம் என்ற போதும் பூகம்பச்சங்கு எதற்கு? என்ற விடை கிடைத்திருக்கிறது. சூனியன் எங்கு, எப்போது, எப்படி காவு வாங்கப் போகிறான்? அவனுடைய கணக்கில் கோவிந்தசாமியோடு வேறு யாரெல்லாம் இருப்பார்கள்? என்பதை அறிய கடைசி அத்தியாயத்திற்காக காத்திருப்போம்.