எப்பொழுதும் தனக்கே உரித்தான ஒரு வித ஒலியை எழுப்பிக் கொண்டே இருப்பவைகள் புறாக்கள். அவைகள் மசூதிகளில், தேவாலயங்களில், ஆலயங்களில் தனக்குக் கிடைத்த இடங்களில் அமரும் போது அமைதி காக்கின்றன. எங்கெல்லாம் அமைதி காக்கப்பட வேண்டுமென அவைகளுக்கு எவரும் போதித்திருக்கவில்லை. நமக்கோ ஆண்டாண்டு காலமாய் எவரோ ஒருவர் போதித்துக் கொண்டே இருக்கிறார். நாம் காது கொடுப்பதில்லை, அமைதியை மீட்க வேண்டிய இடத்தில் முட்டிக் கொள்கிறோம். முழங்கி நிற்கிறோம். முரண்டு பிடிக்கிறோம். புறாக்கள் முரல் நீங்கி இரை எடுக்கும் மதமற்ற இறைமையை நாம் முரல் கொண்டு இறைமையை இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தலைப்புக் கவிதைக்குச் சென்றடையும் வழிகள் எங்கும் நிரவி இருக்கும் ஏனைய கவிதைகள் நாம் வாழும் எளிய வாழ்வின் ஊடாக நம்மில் ஆழ்ந்திருக்கும் காதலையும், காமத்தின் உச்சத்தை நெறிப்படுத்தலையும், எதார்த்தத்தையும் முன் நிறுத்தி ”முரல் நீங்கிய புறா”வாய் உரையாடுகின்றன. பகடி செய்கின்றன. மீண்டும் ஒரு திறனாய்வுக்கு உட்படுத்துகின்றன. புது எழுத்து வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு சம்பத்ஜியின் இரண்டாவது தொகுப்பு.
வாசம் தரும் ரோஜாக்களை வாங்க அதன் வாசம் நுகர்ந்த படியே பருவ வித்தியாசமின்றி பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரம் வாசத்திற்குப் பதில் நாற்றத்தின் நாற்றங்கால்களாய் இருக்கக்கூடிய கட்டணக்கழிவறைக்கு மூக்கைப் பிடித்த படி பேரம் பேசாமல் போய் வருகிறோம். வாழ்தலில் இருக்கும் முரணை நம் எதார்த்த நிகழ்விலிருந்து ஆரம்பித்து வைக்கிறார்.