சுபா செந்தில்குமாரின் ”கடலெனும் வசீகர மீன்தொட்டி” சமீபத்தில் வாங்கிய, வாசித்துக் கொண்டிருக்கின்ற கவிதை நூல்களில் ஒன்று. தலைப்பு மட்டுமல்ல இதில் இருக்கும் கவிதைகளும் வசீகரமானவை. வாழ்வியலின் கூறுகளை அதன் அகத்திலும், புறத்திலுமாய் நின்று நம்மோடு கலந்துரையாடுபவைகள். அச்சு, இணைய இதழ்களிலும், முகநூல் பக்கத்திலும் இவரின் கவிதைகளை அவ்வப்போது வாசித்திருந்த போதும் தொகுப்பில் வாசிக்கும் போது அது வாழ்வின் அத்தனை இழைகளிலும் பின்னலிட்டு செல்லும் உணர்வைத் தருகின்றன.
அனுபவித்த / கேள்விபட்ட / கண்டுனர்ந்த நிகழ்வை தனக்கான மொழி நடையில் முழு சித்திரமாக்கித் தரும் சுபாவின் கவிதைகள் நமக்கான அருகாமையை இன்னும் சுருங்க வைக்கின்றன. தொகுப்பில் இருக்கும் அப்படியான பல கவிதைகளுள் ஒன்று “பொருள்வயிற் பிரிதல்” எனும் கவிதை.