ரமா சுரேஷ் தமிழகத்தைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81”. க.சீ. சிவக்குமார் நினைவுப் பரிசை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. லஷ்மி சரவணக்குமாரின் மோக்லி பதிப்பகம் இத்தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறது.
படைப்பாளி நிகழ்வுகளை உருவாக்குவதில்லை. அவன் சந்திக்கும், பார்க்கும் மனிதர்களிடமிருந்து பெறும் நிகழ்வுகளைச் சித்திரமாக்கும் வேலையை மட்டுமே செய்கின்றான். அதற்குள் படைப்பாளி இட்டு நிரப்பும் கதாபாத்திரங்கள் வாசகனுக்குள் பாய்ச்சலையும், புகைச்சலையும் தரும் போது அந்தச் சித்திரம் தானாகவே உயிர் பெற்று எழுந்து கொள்கிறது. அதை சக வாசிப்பாளனுக்கும், இன்னொரு படைப்பாளிக்கும் வாசகன் அறியத் தருகின்றான். அப்படி வாய்க்கும் சந்தர்ப்பங்களே நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அதுவரை நாம் கண்டிராத, அமிழ்ந்து கிடக்கும் அன்பையும், வன்மங்களையும் கண்டடைய உதவுகின்றன. அதனால் தான் காலம் கடந்தும், மொழி கடந்தும் சிறுகதைகள் பீனிக்ஸாய் எழுந்து கொண்டே இருக்கின்றன. இத்தொகுப்பில் அப்படி உயிர்பித்து எழும் கதைகள் இருக்கின்றன.
