திரைப்படங்களில், வாழ்த்து அட்டைகளில், அலங்கார வளைவுகளில் இடம் பெற்றிருக்கும் ஈபிள் கோபுரம் அதன் உயரம் போலவே சுவராசியமான பல தகவல்களைக் கொண்டது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இக்கோபுரம் அமைந்திருக்கும் இடத்தின் பெயர் ”சாம்ப் – டி – மார்”. இவ்விடம் ஒரு அணிவகுப்பு மைதானமாகும்.
1789 – 1799 ல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான “எக்ஸ் பொசிசன் யுனிவர்செல்” எனும் உலகக் கண்காட்சி விழாவிற்கான நுழைவாயிலாக 1889 ல் இக்கோபுரம் கட்டப்பட்டது. இதைக் கட்டிய பொறியாளரின் பெயர் ”அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈபிள்”. அவர் பெயராலயே அது “ஈபிள் கோபுரம்” என்றழைக்கப்பட்டது.
இக்கோபுரம் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் மற்றொரு நகரான பார்சிலோனாவில் அமைப்பதாக இருந்தது. ஆனால், கோபுரத்தின் உயரம், வடிவமைப்பு, அதை அமைக்கும் விதம் ஆகியவைகளைச் சுட்டிக் காட்டி பார்சிலோனா நகராட்சி அனுமதி தர மறுத்து விட்டது. அதன் பின்னரே பாரீஸ் நகரம் தேர்வு செய்யப்பட்டது.
