Sunday, 30 September 2012

இஸ்லாம் கற்று தரும் வாழ்வியல்



என் சிற்றறிவிற்கு எட்டும் அளவில் இஸ்லாம் மதம் தரும் வாழ்க்கை நெறிகளைப்பற்றி படித்த பின்பு மாற்று மதத்திற்கான நூல் என்ற ஒரே காரணத்திற்காக தூக்கி எறிந்து விடக்கூடாது. அதில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை அறிவியலும், நடைமுறையும் கலந்து குழப்பமற்ற நிலையில், எந்த மதத்தவரும் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் தர வேண்டும் என எண்ணியதன் விளைவே இந்நூல். “இந்து என்கிற என் சுய மத அடையாளத்திற்குள் நின்று கொண்டு தேடியதன் வெளிப்பாடே இந்நூல்


Thursday, 27 September 2012

துரத்தும் நிஜங்கள்


துப்பறியும் நாவலின் இலக்கணச் சால்வழி பிசகாது நகரும் இக்கதை, வாசக எதிர்பார்ப்புகளை ஏமாற்றவில்லை. மிக கவனமாக சஸ்பென்ஸ் கடைசிவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. கதையோட்டமும், பாத்திர நகர்த்தலும் அலுப்புத்தட்டாத வகையில் அமையப் பெற்றுள்ளது. முற்றிலும் புதிதான  ஒரு தளத்திலிருந்து வாசகர்களைச் சந்திக்கும் கோபி சரபோஜியின் துரத்தும் நிஜங்கள் என்ற இந்நாவல்எழுதவல்லார் எதையும் எழுதவல்லார் என்று எழுத்தாளர் சங்கத்தலைவர் வாசவன் அடிக்கடி சொல்வதை மெய்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
டாக்டர். ஹிமானா சையத்
     எழுத்தாளர் & பதிப்பாளர்



இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள்


மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வு அவன் ஆழ் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் செயல் வடிவமாக்கி புகழ் அடைகின்றனர். பலர் இது நம்மால் முடியாது என்று ஒதுங்கி வாழ்க்கையில் பின்தங்கி விடுகின்றனர். இதற்கான காரணங்கள் என்ன என்பதை வாழ்க்கையில் முன்னேறிய மற்றும் லட்சியங்களில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை படிப்பினையைக் கொண்டும், சம்பந்தப்பட்டவர்களின் அறிவுரைகளைக் கொண்டும் இந்நூலில் ஒரு செய்தி கோர்வையாகத் தொகுத்து விளக்கி உள்ளார் ஆசிரியர். தற்கால இளைஞர்களின் மன நிலைக்கு ஒப்ப அவர்கள் சாதனையாளர்களாக உருவாக நல்ல அறிவுரைகளை இந்நூல் கூறுகிறது.
                                                                                     துக்ளக்


                                                                                    

Saturday, 22 September 2012

சுயமிழந்த கண்மாய்கள்

வெட்கமின்றி நீரையெல்லாம்
அம்மணத்தால் அலசிக் கழுவும்
சாண் பிள்ளைகள்

அம்மாவின் சேலைத்துணியை
வலையாய் சுமந்து
கெரண்டைக்கால் நீரில்
தாவித் திரியும் கருவாச்சி தேவதைகள்

காற்று கூட
விதேசியாய் வேண்டாமென
கரையில் வந்துறங்கும்
தலைமுறை கண்டவர்கள்

இரை வரத்துக்காக
ஒரு காலூன்றி மறுகால் மடக்கி
தவம் கிடக்கும் வள்ளுவக் கொக்குகள்

புறம் சென்று பொழுது சாய
அகம் திரும்புகையில்
தன்னழகு காண
கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்

கரை மீது நின்று
கள்ளிக் குச்சியும்
கரகரத்த குரலுமாய்
வீடு வந்து சேர் - என
எச்சரிக்கும் அம்மாக்கள்

இப்படியான
தன் சுயத்தை
நகரம் நுகர்ந்த
நம்மைப் போலவே
புறம் தள்ளி கிடக்கிறது
நம்மூர் கண்மாய்களும்.

நன்றி ; திண்ணை