”காம்ரேட்” என்ற உச்சரிப்புக்கு ஒரு
வசீகரம் இருக்கும். தோழர்களுக்கு அது இன்னுமொரு படி மேல். அந்தப் பெயரில் ஒரு வரலாற்று
நாவல். பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதியதை வி.கே. பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1975 ல் வெளியான நூல். என் தந்தை எனக்கு வழங்கிய நூல்களில் இதுவும் ஒன்று. உச்சரிப்பின்
வசீகரமே என்னை வாசிக்கத் தூண்டியது. ”காம்ரேட்”, ”யஷ்பால்” இவ்விரண்டு வார்த்தைகளும்
நாவல் எதைப் பற்றி பேசும் என்பதை யூகித்து விட போதுமானது என்றாலும் அதைக் கடந்து வாசிக்கும்
போது வரலாற்றை முன் நோக்கி பார்க்க முடியும்.
பத்மலால் பாவரியா தானிய வாணிபம் செய்பவன். ஒழுக்கக் கேடுகள் நிறைந்தவன். காங்கிரஸ் பெரும் புள்ளி ஒருவரின் கைப்பாவையாகச் செயல்படும் ரவுடி. கல்லூரி செல்லும் நேரம் போக கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கட்சியின் புத்தகங்கள், பத்திரிக்கைகள் விற்பது என செயல்படுபவள் கீதா. எதிர்பாராத சந்திப்புகளால் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்படுகிறது. பாவரியா ஒழுக்கங்கெட்டவனாக இருந்த போதும் கீதாவிடம் கண்ணியமாகவே நடந்து கொள்கிறான். இயக்கத்தைப் பற்றிக் கூறி ஏதாவது நல்ல விசயத்திற்கு இவனை திருப்பி விடலாம் என கீதா நினைக்கிறாள். அதில் வெற்றி பெற்றாளா? என்பதே நாவல்.
