படைப்பாளி தரும் படைப்பை பட்டி, டிங்கரிங் பார்த்து செழுமைப்படுத்துவதற்கான அனுமதியை அவரிடம் வாங்கி நூலாக்குவது ஒரு வித அவஸ்தை என்றால் அதை விட பெரிய அவஸ்தை அதற்கான வெளியீட்டு விழாவை நடத்துவது! ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கே நாக்குத் தள்ளி விடும் சூழலில் நண்பரும், கவிஞருமான ஏகலைவன் பதினைந்து புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அலைபேசியில் பேசுந்தோறும் அது பற்றிய முன்னெடுப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தவர் தீபாவளித் திருநாளன்று மகனோடு மத்தாப்பு கொழுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அழைத்தார். மேடையில் வெளியீடு காணும் நூல்களில் ஒன்றின் முதல் பிரதியை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியுமா? எனக் கேட்டார். அந்த அளவுக்கு நம்ம ஒர்த்தா? என உச்சந்தலையில் ஒரு மத்தாப்பு எரிந்தது. பிகுவெல்லாம் பண்ண வேண்டாம் என மனசு எச்சரிக்க மறுதலிக்காது ஒப்புக் கொண்டேன்.
