Showing posts with label தமிழ்வாசல் மாத இதழ். Show all posts
Showing posts with label தமிழ்வாசல் மாத இதழ். Show all posts

Tuesday, 29 November 2016

நழுவும் நங்கூரம்!

காலை வரை தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் போலிருந்தது சுமதிக்கு. இப்பவும் கூட அவள் மனம் அதை ஏற்கத் துணியவில்லை.  ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல இருப்பதில்லையே! அப்படித்தான் அவள் விசயத்திலும் இருந்தது. மனம் முழுக்க வெறுமை சூழ்ந்தவளாய் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தாள். சோபாவின் ஓரத்தில் இருந்த சிறு அலங்கார மேசையின் மீது சட்டமிடப்பட்ட பலகையில் இளங்கோவும் அவளும் காதலர்களாக இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படமும், திருமணத்தன்று எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒரு சேர இருந்தது. அந்த மேசையைச் சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதைக் கையில் எடுத்துப் பார்த்து துடைத்து வைத்தது தான் என்றாலும் இன்று அதை எடுத்த போது அவளை அறியாமலயே கைகள் மெலிதாக நடுங்கத் தொடங்கியது, பெருமழைக்கு முன் விழும் சிறு துளி போல அவளின் கண்களிலிருந்து விழுந்த சிறு துளிகள் கையை நனைத்தது.