திருப்பங்கள் நிறைந்த வாழ்வில் எல்லா நிகழ்வுகளும் இனிமையானதாக அமைந்து விடுவதில்லை. சில வாழ்க்கையைத் தலைப்பிரட்டையாகப் புரட்டிப் போட்டு விடுவதும் உண்டு. கால்களை நனைக்க விரும்பும் கடல் கொஞ்சம் மிரண்டு வந்தால் விலகி ஓடுவோமே அதுபோல வாழ்க்கையில் நம்மைக் கடந்தும், கடத்தியும் போகும் நிகழ்வுகள் கொஞ்சம் மிரட்சியாக அமையும் போது வாழ்வின் மீதான கேள்விக்குறிகளின் முனைகள் இன்னும் நீண்டு விடுகிறது. அப்படித் தன் முனைகளின் நீளத்தை எனக்குள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வை என்னுள் அந்த இரவுப்பொழுது நிகழ்த்திக் காட்டியது.
சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் ஒருநாள் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இடைநிறுத்தப் பேருந்திற்காக பேருந்து நிலையத்தின் இருக்கையில் மனைவியோடு காத்திருந்தேன். இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்ததால் சாலையில் வாகனங்கள் குறைவாகவே இருந்தன. பேருந்திற்காக சிலர் காத்திருந்தனர். ஓரிரண்டு இரவு நேரக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் சாத்தபட்டிருந்தது நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே சாலையின் மறுபக்கத்தில் இருந்த மின் கம்பத்தில் பெரிய சோடிய விளக்குகள் திசைக்கொன்றாய் வெளிச்சத்தை இறைத்துக் கொண்டிருந்தன.