சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பாக சிங்கப்பூர் மலேசிய படைப்புகளுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் கரிகாற்சோழன் விருது இம்முறை ஷாநவாஸ் அவர்களின் “அயல்பசி” நூலுக்குக் கிடைத்திருக்கிறது. இணையப் பக்கங்களில் இவருடைய கட்டுரைகளை வாசித்திருந்த போதும் நேரடித் தொடர்பில்லாமலே இருந்தேன். இவரோடு நட்பில் இருங்கள் என்ற குறிப்போடு ஷாநவாஸின் வலைப்பக்க முகவரியை நண்பர் இராமேஸ்வரம் ரஃபி அனுப்பி வைத்திருந்தார். அதன் பின் ஷாநவாஸை ஒரு இலக்கிய நிகழ்வில் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டாலும் அவருடன் தொடர் உரையாடலுக்கு வாய்ப்பில்லாமல் போனது. சில மாதங்கள் சென்றிருந்த நிலையில் வேலையிடத்தில் இருந்த போது வந்த அலைபேசி அழைப்பில், "நான் ஷாநவாஸ் பேசுகிறேன். நீங்க புத்தகம் எல்லாம் எழுதி இருக்குறீர்களா? தெரியாமல் போச்சே. இப்பதான் கேள்விப்பட்டேன்" எனச் சொன்ன போது "அடடா நம்ம எழுத்தும் பாய ஆரம்பிச்சிருக்கே" என நினைத்துக் கொண்டேன். அதன் பின் முகநூலில் இருக்கும் போதும், பேச நேரும் சமயங்களின் போதும் வாசகர் வட்டத்திற்கும், தன் உணவகத்திற்கும் வருமாறு அழைப்பு விடுத்த படியே இருந்தார். செல்வதற்கு நேரம் வாய்க்கவில்லை என்றெல்லாம் பொய் சொல்லத் தேவையில்லை.