Wednesday, 15 September 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 16

அத்தியாயம்-16

 (நான்காவது எதிரி)

சூனியன் கோவிந்தசாமியின் நிழலை தூங்கப் போட்டு விட்டு சென்று விட நிழல் தனியே செயல்படத் துவங்குகிறது. கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமியாக நாமம் சூட்டிக் கொள்ள நினைக்கும் நேரத்தில் ஒரு திருப்பமாய் கோவிந்தசாமியை சந்திக்கிறது. அப்போதும் கூட சாப்பாடு பற்றி தான் கோவிந்தசாமி பேசுகிறான்!

சூனியனை மோசக்காரன் எனக் கூறி எகிறும் கோவிந்தசாமியிடம் நிகழ்ந்தவைகளையும், செய்தவைகளையும் கூறி சூனியனுக்காக நிழல் வாதாடுகிறது. அந்த விவாதம் முற்றிப் போய் சூனியனோடு சேர்ந்து நீயும் எனக்கு எதிராக சதி செய்கிறாய் என நிழல் மீதும் குற்றம் சுமத்த நிழல் பொங்கி எழுகிறது.

Tuesday, 14 September 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 15

அத்தியாயம்-15

 (ஒளடதம்)

கோவிந்தசாமிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் கொடுத்து விட்டு தன் இகட்சியம் நோக்கி நகர சூனியன் நினைக்கிறான். அதற்கு சாகரிகாவின் தலைக்குள் இறங்கி கோவிந்தசாமி பற்றி பதிவாகி இருக்கும் முழு தகவல்களையும் சேகரிக்க முடிவு செய்கிறான். சாகரிகாவை நெருங்க சூனியன் நம்பும் மூன்று பலவீனங்களும், அது பற்றிய விளக்கங்களும் அற்புதம்.

நீலநகரத்தை தன் சமஸ்தானமாக்கிக் கொள்ள தனக்கு இருக்கும் சாதகமான அம்சங்களைப் பற்றி நினைத்து பரவசப்பட்டுக் கொள்ளும் சூனியன் கோவிந்தசாமியிடம் சாகரிகாவை ஒப்படைப்பது அல்லது நிழலிடம் சேர்த்து வைப்பது இரண்டும் ஒத்துவராத போது தன் பட்டத்துராணியாக்கிக் கொள்வது என நினைக்கிறான். யாருக்குத் தான் சாகரிகா? பெண்ணால் சாம்ராஜ்யங்கள் சரிந்தது போல அவளால் சூனியனின் சமஸ்தான இலக்கு தடம் மாறுமா? என்பதை அறியும் எதிர்பார்ப்பு கூடுகிறது.

Monday, 13 September 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 14

 அத்தியாயம்-14

 (நூற்றி இருபது வீரர்கள்)

பா.ரா.வோடு மீண்டும் சூனியனுக்கு பிணக்கு. ஆவேசத்தைக் கொட்டிவிட்டு அமைதிப்படும் சூனியன் போகிற போக்கில் எனது ஆனந்த தாண்டவத்தில் தரிசிப்பீர்கள் என் சொல்லிச் செல்வதில் பின்னொரு விறுவிறுப்பு காத்திருப்பது தெரிகிறது.

கோவிந்தசாமி சுயமாக செயல்பட ஆரம்பித்து விட்டதை அவனுடைய நிழலுக்குச் சொல்லும் சூனியன் அவன் பதிந்திருந்த மூன்று புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி கவிதையை வாசித்துக் காட்டுகிறான். வாசிப்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பேக் ஐ.டி.யை உருவாக்கி அதில் கவிதையை பதிவாக்கியிருப்பதிலும், கவிதையை ஜெய்ஸ்ரீராம் என முடித்திருப்பதிலும் கோவிந்தசாமி இன்னும் சங்கியாகவே நீடிக்கிறான்.

Sunday, 12 September 2021

உறுபசி – மானுட அவலத்தின் மிகுபசி!

சம்பத் என்கின்ற நண்பனின் இறப்பிற்குப் பிறகு அவனுடைய நண்பர்கள் தங்களின் நினைவடுக்குகளின் வழியே அவனை கண்டடையும் கதை உறுபசி நாவல். அவனுடைய வாழ்வின் ஊடாக தங்களுடைய இருப்பை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கின்றனர். இந்த ஒப்பீடு மெல்ல சம்பத்திடமிருந்து விலகி அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் அல்லது அவர்கள் மறைத்து வைத்திருக்கும் எண்ணங்களை அதன் கோர முகங்களோடு வெளிக் கொண்டு வருகிறது. அது அவர்களை விலகி, விலகி சேர வைக்கிறது. சம்பத் இறந்த பிறகு தங்களுக்குப் பரிச்சயமில்லாத கானல் காட்டிற்கு மூன்று நண்பர்களும் பயணம் மேற்கொள்வதில் நாவல் ஆரம்பிக்கிறது. சம்பத் தான் நாவலின் மையம். அவனின் இயல்பு, செயல்பாடு, காதல், கடவுள் மறுப்பு, காமம், வீழ்ச்சி, வாழ்வியலோடு பொருந்த இயலா நிலை ஆகியவைகள் அவனில் இருந்தே பல்வேறு பக்கங்களாய் கிளை விரிக்கிறது.