19 ஆண்டு திருமண வாழ்வைக் கடந்து 20 ன்
ஆரம்பத்தில் அடி எடுத்து வைத்து திரும்பிப் பார்க்கையில் அவரவர் இயல்புகளிலிருந்து
ஏதோ ஒரு காரணங்களுக்காக எங்களை மாற்றிக் கொண்டே நகர்ந்திருக்கிறோம். நிறைய முரண்கள்
என்பதை முட்கரண்டியாய் பார்க்காமல் உணவை உண்பதற்கான ஒரு உபகரணமாக மட்டுமே பார்த்துக்
கொண்டோம். அதையே தோளுக்கு மேல் வளர்ந்த எங்கள் பிள்ளைகளுக்கும் உணர்த்தியிருந்தோம்.
அந்த உணர்தலை அவர்கள் அவ்வப்போது வார்த்தைகளில், இப்படியான தினங்களில், நிகழ்வுகளில்
அன்பின் பொருட்டான பொருட்களாய் மாற்றி கைகளில் தந்து விடுவார்கள். கூடவே, ”சண்டை போட்டுக்காதீங்க”
என்ற ஒற்றை அறிவுரையோடு!
இன்று திருமண நாள் என்ற பிரக்ஞை இன்றி விழித்தெழுந்ததும் மகளிடமிருந்து பின்னிரவு வேளையில் ”Happy anniversary dady.. 🤩🥰❤️❤️” என அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி கண்ணில் பட்டது. வீட்டில் இருந்த மகன் இரண்டு பைகளோடு வந்தான். ”திருமண நாள் வாழ்த்துகள் டாடி”. கிஃப்ட் இந்தாங்க. ஆனால், இப்ப ஓபன் செய்யாதீங்க, அம்மா வரவும் இரண்டு பேரும் சேர்ந்து இதை பிரிங்க என்றான். மணமகளுக்காக காத்திருக்கும் மணமகன் போல் காத்திருந்தேன். மாப்பிள்ளை தோழன் போல் மகன் என்னருகிலேயே அமர்ந்திருந்தான். வழக்கமான வேலைகளை முடித்து விட்டு மனைவி வந்தாள். பரிசுப்பொருட்களுக்குள் அவர்களின் அன்பை ஊடு பாவியும், எங்களை பதித்தும் கொடுத்திருந்தார்கள்.
ஒரு சிறு நோட்டு வாங்க வேண்டுமென்றால்
கூட நீங்களும் வர வேண்டும் என அழைப்பது பிள்ளைகள் வழக்கம். ஆனால், இன்று அவர்கள் அளித்த
பரிசுகளை எங்கு தேடி வாங்கினார்கள்? என்பது ஆச்சர்யமாய் இருந்தது. மகள் இம்முறை கல்லூரி
சென்று விட்டதால் கடந்த மாதம் விடுமுறையில் வந்த போதே பேசி முடிவு செய்து அவர்களின்
சிறுசேமிப்பின் கை இருப்பிற்குள் பரிசு பொதிகள் வழங்கும் பொறுப்பு மகனுக்கு வந்திருக்கிறது.
ஒரு வாரமாக பள்ளியில் இருந்து திரும்பும் போது காலதாமதத்திற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்வான்.
“ வேன் லேட்” என ஒரு நாள் சொன்ன போது அவன் பள்ளி சார்ந்த நிறுவனத்தில் எனக்கு பணி என்பதால் அது பொய் என தெரிந்தது. ஆயினும் நான் அவனிடம் எதுவும்
கேட்கவில்லை. காரணம் கேட்காத அந்த பொய்களின் நேரம் எங்களுக்கான திருமண நாள் பரிசுப்
பொதியாய் தினமும் உருமாறிக் கொண்டிருந்ததை காலையில் சொன்னான். கர்வம் கொள்ள இதை விடவும்
வேறு என்ன வேண்டும்?
எங்களின் எதார்த்த உரையாடல்களில் பிரக்ஞையின்றி
வெளிப்படுத்திய ஆசைகளையும், தேவைகளையும் கண்டுணர்ந்து
அவைகளை திருமண நாளில் கொடுத்த பிள்ளைகளின் அன்பில், உறவுகளின் வாழ்த்துகளில், தோழமைகளின்
கிண்டல்களில், அக்கறைகளில் புலர ஆரம்பித்திருக்கிறது 20 ஆம் ஆண்டின் தொடக்கம்.
No comments:
Post a Comment