Thursday, 21 April 2016
Thursday, 25 February 2016
Monday, 15 February 2016
அவர் சாகமாட்டார்
வைத்திலிங்கம் என்ற மனிதரின் இறப்பிற்குப் பின்னே மூழ்கிக் கிடக்கும் ஒரு உண்மையை அந்த இறப்பு வீட்டில் நடைபெறும் சம்பவ விவரிப்புகளால் மெல்லிய நகைச்சுவை இழையோடச் சொல்லும் கதை ”அவர் சாகமாட்டார்”. இக்கதையின் ஆசிரியர் சே.வெ.சண்முகம். அவரின் சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.
”அவர் சாகமாட்டார்” என்றும், ”திருவாளர் வைத்திலிங்கம் காலமாகி விட்டார்” என்றும் அடுத்தடுத்துத் துவங்கும் வரிகளின் முரண் யுக்தி கதைக்குள் நம்மைத் தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. கதையின் முக்கியக் கதாபாத்திரத்தை முதலிலே சாகடித்து விடும் துணிச்சலான முயற்சியை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர் செய்து பார்த்திருப்பது வியப்பைத் தருகிறது.
Sunday, 7 February 2016
பங்பங்
அண்டை வீட்டாருடன் இருக்க வேண்டிய நட்பையும், மனித உறவுகளின் தேவை மற்றும் அவசியத்தையும் செல்லப் பிராணியான ஒரு நாயின் வழியாகப் பேசும் கதை “பங்பங்”. காலம் காலமாகப் போதிக்கப்பட்டும், நிகழ்த்திக் காட்டப்பட்டும் வந்த வாழ்வியல் முறையை சிங்கப்பூரின் வாழ்வியலோடு மீட்டுருவாக்கம் செய்யும் இக்கதை ”ஆறஞ்சு” சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இக்கதையின் ஆசிரியர் அழகுநிலா,
சாதாரண கதைக் கருவைக் கட்டமைத்திருக்கும் முறையால் நம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அண்டை வீட்டில் வசிப்பவர்களுடனான சிநேகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும் ஒற்றை வார்த்தைகளும், வெற்றுப் புன்னகைகளும் மட்டும் போதும் என நினைக்கும் வாழ்வியலின் எதார்த்தத்தை “சிங்கப்பூரில் இருந்து கொண்டு இதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா?” என்ற கேள்வியின் ஊடாக கவனப்படுத்துகிறார். படைப்பிலக்கியத்திற்கு மிகவும் அவசியமான கவனப்படுத்தலை இந்தக்கதை நிறைவாகவே செய்திருக்கிறது.
Wednesday, 23 December 2015
தையல் மிஷின்
ஜானகி என்ற பெண்ணிற்கும் அவளோடு முப்பத்தைந்து ஆண்டுகள் இணைந்து பயணித்த தையல் மிஷினுக்குமான உறவைச் சொல்லும் கதை. தையல்மிஷின் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் நூர்ஜஹான் சுலைமான்.
ஜானகியின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சற்றும் மிகைப்படுத்தாத வகையில் ”மிஷின் மக்கர் பண்னும் போது குழந்தையை அதட்டுவது போல செல்லமாக அதட்டிய படி தைக்க ஆரம்பிப்பாள்” போன்ற நுட்பமான அவதானிப்புகளோடு இழைத்திருப்பது கதையின் மிகப்பெரிய பலம்.
Friday, 11 December 2015
அம்மாவென்ற நான்
குடும்பம், குழந்தைகள் எனத் தன் வாழ்வின் பெருங்காலத்தைக் கடத்தி விட்ட ஒரு பெண் தன் உண்மையான அடையாளத் தேடலைத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து உணர்ந்த சூழலைப் பற்றிப் பேசும் கதை “அம்மாவென்ற நான்”. அப்பாவின் படகு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் கிருத்திகா.
வழக்கமான கதைக்கருவை தன்னுடைய மொழி நடையில் படைப்பாக்காமல் புதிய விசயத்தைக் கருவாக்கி இருக்கிறார். திருமணத்திற்குப் பின் ஒரு பெண் அடையும் மாற்றங்களுக்கு அவளுடைய பெயரும் தப்புவதில்லை. இன்னாரின் மனைவி, இன்னாரின் அப்பா, இன்னாரின் பாட்டி என யாரோ ஒருவரின் இணைப்பிலேயே அவளின் வாழ்நாள் முழுக்கக் கழிந்து விடும் துயரத்தைச் சிறுகதைக்குள் கொண்டு வந்து தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.



