சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் கலந்துரையாட கவிஞர். கலாப்ரியா வருகை தர இருப்பதையொட்டித் தொடர்ந்து மூன்று அமர்வுகளில் நவீனக்கவிதைகள் சார்ந்தும், அவரின் கவிதைகள் குறித்தும் கலந்துரையாடிச் சிலாகித்து இருந்தோம்.
அந்தக் கதகதப்பின் சுகத்தை இன்னும் இறுத்தி வைக்கும் முகமாகக் கடந்த சனிக்கிழமை (03-10-2015) கலாப்ரியோடு கலந்துரையாடலும், அதற்கடுத்த நாள் கவிதைப் பயிலரங்கு நிகழ்வும் அங் மோ கியோ நூலகத்தில் நடைபெற்றது.
சனிக்கிழமைப் பொழுது அத்தனைச் சிக்கலின்றி ஆரம்பித்தத்தில் அரைநாள் விடுப்போடு கலந்துரையாடலுக்குப் போக முடிந்தது. எந்த பந்தாவும் இல்லாமல் தோள் பையைத் தொங்க விட்ட படி எளிமையின் அடையாளமாய் அரங்கிற்குள் வந்தவரை இயல்பாய் அணுக முடிந்தது. ”என் வாழ்வும், கவிதையும்” என்ற தலைப்பில் தன் கவிதைப் பயணம் குறித்துப் பேசினார். தன்னைப் பற்றிப் பேசினார் என்பதை விட ஒவ்வொரு வரியிலும் வாசகர்கள் வாசிக்க வேண்டிய ஆளுமைகளின் படைப்புகளை அவர்களின் கவிதைகளோடு அடையாளம் காட்டினார் எனச் சொல்வதே சரியாக இருக்கும். அவரின் உரைக்குப் பின் கலந்துரையாடல் என்றதுமே ஹோட்டலுக்கு குழுவாகச் சாப்பிடச் சென்றால் யார் முதலில் ஆர்டர் பண்ணுவது? என்று வரும் பிதுக்கல் வாசகர்களிடம் வந்து நின்றது, ஸ்டார்ட்டிங் டிரபிளில் கலந்துரையாடல் சிக்கி நிற்க அதைத் தன் முதல் கேள்வி மூலம் அழகுநிலா அவர்கள் கிளியர் செய்து கொடுத்தார்.