பண்டைய பாரதத்தில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. அந்தப்புரத்தைத் தாண்டி ஆட்சியாளராக, படைத் தளபதியாக, போர்க்களச் சாரதியாக, அவைக்களப் புலவராக, தூதுவராக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெண்ணைப் பெண்ணாய் போற்றிய பாரதத்தின் இடைக்காலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களாலும், சாதியப் பிளவுகளாலும் மேலெழும்பிய ஆணாதிக்கத்தனத்தால் பெண்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் மீது பலவித கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை ஆகியவைகளை வீட்டிற்குள்ளேயே கொடுத்து ஒரு குறுகிய சட்டத்திற்குள் அடைக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தில் பெண்களைக் கொண்டாடிய சமூகம் அவர்களைப் பூட்டிவைத்து பீடு நடை போடும் குறை சமூகமாய் சுருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டக் களத்தில் நின்ற தலைவர்களில் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.