Thursday 2 December 2021

உங்கள்ட்ட கூட இந்த பத்திரிக்கை இல்லைல?

முன்பொருமுறை என் திருமண நாளுக்கான வாழ்த்தை இதே பத்திரிக்கையை இணைத்து மணிமேகலைப் பிரசுரத்தின் அதிபர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் அனுப்பி இருந்தார். புத்தகங்களை சீர் செய்யும் முனைப்பில் அதை தவற விட்டேன். புத்தகங்களின் பக்கங்களுக்குள், பரண் ஏற்றிய பெட்டிகளில் அது அமிழ்ந்திருக்கும் என்பதால் தேடலை விட்டு வைத்திருந்தேன். நண்பர்களை இப்படியாக இழந்து வருபவனாகவே எப்பொழுதும் நான் இருந்து வருகிறேன். ஆனால், என் நண்பர்கள் அப்படி அல்ல.

என் திருமணநாள் சார்ந்த நிகழ்வை முகநூலில் பதிந்திருந்தேன். நண்பர்களால் வாழ்த்துப்பெட்டி நிரம்பி இருந்தது. அதில் என் நண்பன் தேவா 17 ஆண்டுகளுக்கு முன் என் திருமணத்திற்காக அவருக்கு நான் அனுப்பி இருந்த என் திருமண அழைப்பிதழை இணைத்து தன் வாழ்த்தை பகிர்ந்திருந்தார். வியப்பாய் இருந்தது. நண்பர்கள் என்னை எப்பொழுதும் நினைவோடையில் வைத்திருக்கிறார்கள் என மகளிடம் காட்டியதும் ஆச்சர்யத்தோடு பார்த்தவள் தனக்கே உரிய நக்கல் தொனியில் ”உங்கள்ட்ட கூட இந்த பத்திரிக்கை இல்லைல?” என்றாள்.

உன் உலகம் உறவுகளை விட நண்பர்களால், அவர்களின் நினைவுகளாலயே சூழ்ந்தும், நகர்ந்தும் வருகிறது என்பதை என் திருமண நாள் பதிவிற்கு வந்த இந்த வாழ்த்து மீண்டும் எனக்குச் சொன்னது.

 

No comments:

Post a Comment