அசுரர்களின் அரசனான ரம்பா என்ற அசுரன் ஒருநாள் நதிக்கரையோரம் வந்து கொண்டிருந்தான். அந்நதியில் ஒரு பெண் எருமைமாடு குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். முற்பிறவியில் அழகிய இராஜகுமாரியாக இருந்து சாபத்தால் எருமையாக மாறியிருந்த அந்த பெண் எருமையின் மேல் மையல் கொண்டு தன்னை ஒரு ஆண் எருமையாக மாற்றிக்கொண்ட ரம்பா அதனுடன் கூடி மகிழ்ந்தான். உருவில் எருமை மாடுகளாக இருந்த அவ்விருவருக்கும் பிறந்தவன் மகிஷாசுரன். மற்றவர்களை துன்புறுத்திப் பார்ப்பதிலேயே சுகம் காணும் அசுரகுலத்தில் பிறந்திருந்த போதும் அவனுக்குள்ளும் நல்ல குணங்கள் இருந்தது. படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து மனிதனாலும், மிருகத்தினாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். வரம் பெற்றவுடன் அவனுக்குள் இருந்த பிறவி அசுரகுணம் வெளியே வர ஆரம்பித்தது.