Friday 30 April 2021

துணையெழுத்து – தவற விட்ட மீச்சிறு தருணம்!

எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையை குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், பார்க்கும் மனிதர்கள் குறித்து அது புதிய கண்ணோட்டத்தை தந்து கொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல வாசித்த ஒவ்வொருவரும் இதை உணர்ந்திருக்க முடியும்.

Thursday 29 April 2021

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள் – அறிதலின் வாசல்

வரலாற்றின் எச்சங்களாய் நிற்பவைகளையே இன்றைய நினைவுகளின் மிச்சங்களாய் பாதுகாத்து வருகிறோம். அவைகள் நம் மண்ணின் தடயங்களாக நின்ற போதும் அதன் கீழ் இருப்பவைகளில் ஆயிரமாயிரம் புது தகவல்களும், மர்மங்களும், வியப்புகளும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அழகன்குளம், தேவிபட்டிணம், அரிக்கமேடு, கீழடி ஆய்வுகள் இதைத் தான் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆவணங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், சமகால வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவைகளில் சூழ் கொண்டு கிடக்கும் தகவல்கள் நம் மண்ணின் சிதைந்த அடையாளங்களை நமக்கு மீட்டெடுத்து தருகின்றன. மனதளவில் நம்மை கொண்டு செலுத்துகின்றன. அப்படி சேது சீமையின் (இன்றைய இராமநாதபுரம்) முந்தைய காலத்திற்கும், களத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் நூல் “மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்”. விகடன் பிரசுரம் வழி வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் ஜெகாதா. சமீபத்தில் வெளியான என்னுடைய “தமிழகப் பாளையங்களின் வரலாறு” நூலுக்காகத் தரவுகளைத் தேடிய சமயத்தில் இந்நூல் வாசிக்க கிடைத்தது.

கபடவேடதாரி – விமர்சனப் போட்டி 3

அத்தியாயம் 3

 (பூகம்பச் சங்கு)

எத்தனையோ சங்குகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பூகம்பச் சங்கு என்றொரு சங்கா? அது எப்படியிருக்கும்?அதன் பயன்பாடு என்ன? என்ற ஆவல் தலைப்பை வாசித்ததும் பற்றிக் கொள்கிறது. தன்னைப் பலிகொடுத்தலில் தான் தப்பித்தலுக்கான வழி இருக்கிறது என நம்பும் சூனியன் நீலநிற நகரத்தை அழிக்க தன்னை பயன்படுத்திக் கொள்ளும் படி சொல்கிறான். மரணக்கப்பலை அழிக்க கடவுள் அந்நகரை அனுப்பி இருக்கக்கூடும் என நினைக்கும் மீகாமன் சூனியனின் யோசனையை ஏற்கிறான். கொடுக்கப்பட்ட உத்தரவை மாற்ற வேண்டுமானால் அதற்கான உயர் அனுமதியை பெற வேண்டும் என்ற நடைமுறை சூனிய உலகத்திலும் இருக்கிறது! அதன்படி மீகாமன் நியாதிபதிகளிடம் அனுமதி பெறுகிறான்.

Wednesday 28 April 2021

வரலாறு ஒரு தேனாறு – பெரும் வறட்சி

 

கல்லூரி காலங்களில் நான் மிகுந்து வாசித்த தன்னம்பிக்கை எழுத்தாளர்களில் மெர்வின் குறிப்பிடத்தக்கவர். நிறைய தகவல்களோடு கட்டுரைகளை எழுதுவார். இன்றும் சில சந்தர்ப்பங்களில் அவருடைய நூல்களை எடுத்து வாசிப்பதுண்டு. நண்பர் மூலமாக அவருடைய சமீபத்திய நூல் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. நூலின் பெயர்  “வரலாறு ஒரு தேனாறு”.

அவரின் முந்தைய நூல்களை வாசித்திருந்தவன் என்ற முறையில் மனதில் இருந்த முன்முடிபோடு இந்த நூலையும் வாசிக்க ஆரம்பித்தேன். பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நூல் அவரின் சுயசரிதையா? அவர் உதவி செய்தவர்களின் பட்டியலா? அவருக்கு உதவி செய்தவர்களுக்கான நன்றி நவிலலா? தன் ஏமாற்றத்தையும், தன்னை ஏமாற்றியவர்களையும் (அதில் கூட சிலர் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை) பட்டியலிடுகிறாரா? தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறாரா? அவரின் புகைப்பட ஆல்பமா? என்று ஒரு முடிவுக்கு வராத வகைமையில் புத்தகம் இருக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கிறவனை எதிர்வினையாற்ற வைக்கலாம். அதுவே, எதிர்நின்று இத்தனை கேள்விகளை எழ வைத்தால் என்ன செய்வது?

Tuesday 27 April 2021

புகைப்பட ஆல்பம் - 31

மகள் - நான் - மகன்


 

தமிழகப் பாளையங்களின் வரலாறு

பாளையக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஆட்சி முறை எப்படி இருந்தது? வரி வசூலித்து, சட்டம் அளிக்கும் பொறுப்பில் இருந்த பாளையக்காரர்கள் வரிகட்ட மறுத்தது எப்படி? தமிழகப் பாளையங்கள் குறித்த விவரங்களை எல்லாம் திரட்டி, விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.  

தமிழகப் பாளையங்களின் வரலாறுஇரண்டு நூற்றாண்டு தமிழக வரலாறு என்றும் சொல்லலாம்.

- தினமணி - கலாரசிகன்.

Monday 26 April 2021

இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்

2003 ம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழக நூலகங்களுக்குத் தேர்வானதாலும், ஒரு இஸ்லாமிய நண்பர் அவருடைய திருமணத்திற்குத் தர மொத்தமாக 500 பிரதிகளை வாங்கிக் கொண்டதாலும் பொது விற்பனைக்கு இந்நூலை கொண்டுவர முடியாமல் போனது. அதன் பின்னர் நூலுக்கான தேவை இருந்த போதும் பதிப்பு சார்ந்த விபரங்கள் அப்போதைக்கு தெரியாமல் இருந்ததால் சுய முயற்சி செய்து பார்ப்பதில் தயக்கம் இருந்தது. ஒரு பதிப்பகம் அச்சு வடிவில் மீண்டும் கொண்டு வருவதற்கான விருப்பத்தைச் சொல்லி இருக்கிறது. கொரானா காலகட்டத்தில் சாத்தியமா? என்பது தெரியாத நிலையில் கிண்டிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் அதை மறு பிரசுரம் செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. நூலினை இங்கே சென்று வாங்க முடியும். கிண்டில் பதிப்பிற்காக எழுதப்பட்ட முன்னுரை அந்நூல் சார்ந்த புரிதலை உருவாக்கும் என நினைக்கிறேன்.

Saturday 24 April 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி -2

                                       அத்தியாயம் – 2 (மிதக்கும் நகரம்)

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான யுத்தமாக தண்டனைக்காக தன்னைக் கொண்டு செல்லும் மரணக் கப்பலில் இருந்து தப்பிக்க வேண்டுமென சூனியன் நினைக்கிறான். அதற்கான வாய்ப்புகளை தேடுகிறான். தன்னைப் போல நிலக்கடலை ஓட்டிற்குள் அடைபட்டு வரும் கைதிகளை புரட்சிக்குத் தூண்டலாமா? என மானிடர்களைப் போல திட்டமிடுகிறான். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதைப் போல சூனியனின் உடலில் காவலரால் பனிக்கத்திகள் இறக்கப்படுகின்றன. சாதாரண குளிரே தனக்கு ஒவ்வாது என்ற நிலையில் இரண்டு பனிக்கத்திகளை தன் உடல் தாங்கி நின்ற போதும் தன் பக்க நியாயத்தை நிலை நிறுத்த “தப்பித்தல்மட்டுமே அவனுக்கான ஒரே வழியாய் இருக்கிறது.

Friday 23 April 2021

எனக்கு வாசிப்பு எதைத் தந்தது ?

இன்றைய புத்தக தினத்தில் ஒரு படைப்பாளியாய் எங்கிருந்து கிளம்பி இருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளி, கல்லூரி நாட்களில் பாடப் புத்தகங்களே  வாழ்க்கையாக இருந்தது. யாரும் நுழைய அஞ்சும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று வைரமுத்து, மு. மேத்தா, கவிக்கோ உள்ளிட்டவர்களின் புதுக்கவிதைத்  தொகுப்புகளை எடுத்து வந்து வாசித்து அப்படியாக சிலவற்றை எழுதிப் பார்த்து புழங்காகிதப் பட்டுக் கொள்வதுண்டு. அந்த சமயத்தில் வாசித்த ஒரு கவிதை புத்தகம் ஒரு தூண்டலைத் தர நாமும் கவிதை எழுதியே தீர வேண்டும் என்ற வெறியோ, வேட்கையோ அடங்க மறுத்து பொங்கி நின்றது. அடுத்த ஒரு மாதத்திற்குள் எழுதி “விந்தை மனிதன்  என காந்தியின் அட்டைப் படத்தோடு ஒரு தொகுப்பைக் கொண்டு வந்து கல்லூரி நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கவிஞனாக முடி சூட்டிக் கொண்டேன். 1999 ல் இந்த அலப்பறை எல்லாம் முடிந்தும் இன்னும் கவிதை எழுதுவதும், புரிந்து கொள்வதும் பிடிபடவில்லை.

Thursday 22 April 2021

காம்கேர் C.E.O. உடன் ஒரு நேர்காணல்

COMPCARE SOFTWARE நிறுவனத்தின் C.E.O. உயர்திரு. காம்கேர். புவனேஸ்வரி அவர்கள் I.T. துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். தன் தொழில்நுட்பத் துறை சார்ந்த நூல்கள் உள்பட பலதரப்பட்ட துறைகள் சார்ந்து 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக உள்ளன. 

தன் கிரியா ஊக்கிகளை நம்மைப் போன்றவர்களும் இயங்குவதற்காக தன்னுடைய எழுத்து, பேச்சுகளின் வழியாக தரக்கூடியவர். நாள் தவறாது, நேரம் தவறாது 2019 ம் ஆண்டிலிருந்து இரண்டாண்டிற்கும் மேலாக தன் முகநூல் பக்கத்தில் அவர் எழுதி வரும் பத்திகளை வாசிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழும். அவைகளைத் தொகுத்து அவருக்கு அனுப்பி இருந்தேன். சில சமயங்களில் கேள்வியை விட அதற்காகச் சொல்லப்படும் பதிலால் அந்தக் கேள்வி அர்த்தமுள்ளதாகவும், அடர்த்தியானதாகவும் மாறிவிடும். அப்படி தனது பதில்களால் என் கேள்விகளை தனித்துக் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். 

என் கேள்விகளை அவர் நேர்காணல் போலக் கருதி மிக அழகாக தொகுத்து பதில் கொடுத்திருந்தார். தனக்குக் கிடைத்த அனுபவங்கள், தான் எதிர்கொண்ட, பார்த்த நிகழ்வுகளின் வழியாகவே அமையும் அவரின் பதில்களிலிருந்து நம் அன்றாட தேவைக்கான ஆக்சிஜனைப் பெற முடியும். நான் பெற்றிருக்கிறேன். அவரிடம் நான் கேட்டிருந்த கேள்விகள் - 

Tuesday 20 April 2021

தமிழகப் பாளையங்களின் வரலாறு

[தினமணி கலாரசிகனில்  "தமிழகப் பாளையங்களின் வரலாறுநூலுக்கான  அறிமுகமும் - விமர்சனமும்]

தமிழக வரலாற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது பாளையக்காரர்களின் வரலாறு. அவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களைப் போல அரசர்கள் அல்லர். நாயக்கர்களையும், மராட்டிய சரபோஜிகளையும் போல மன்னர்கள் அல்லர். மத வெறியால் நாடு பிடித்த நவாபுகளும் அல்லர். ஜமீந்தார்களை விட சற்று மேலான ஆளுமை உள்ள குறுநிலக்கிழார்கள். அவ்வளவே.

கிருஷ்ண தேவராயரின் விஜயநகரப் பேரரசால் உருவாக்கப்பட்டவர்கள் தான் பாளையக்காரர்கள். “பாலாறா” என்கிற தெலுங்கு சொல்லில் இருந்து “பாளையம்” என்கிற பெயர் உருவானது. “பாலாறா” என்றால் ராணுவ முகாம் என்று பொருள். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் ஆட்சிக்கு முன்பே தமிழ்கத்தில் பாளையங்கள் சிற்றரசர்களுக்கு உரிய அதிகாரத்துடன் இருந்தன என்றும் சிலர் கூறுகிறார்கள்.

“ஈரோடு மாவட்ட வரலாறு” நூலில் இடம் பெற்றுள்ள  அம்மைய நாயக்கனூர் ஜமீந்தார் வம்சாவளி ஆவணப்பதிவு தரும் செய்தி இது – “தளவாய் அரியநாத முதலியார் அவர்களும், விசுவநாத நாயக்கரும் இருவருமாக மதுராபுரிக்கு வந்து பாண்டியன் முன்னர் போர் புரிந்த கோட்டையைச் சுற்றி விசாலமாய் 72 கொத்தளங்களைக் கோட்டை போட்டு 72 கொத்தளத்துக்கும் 72 பாளையக்காரர்களையும் நேர்முகம் செய்கிறது”.

Sunday 11 April 2021

கபடவேடதாரி – விமர்சனப் போட்டி – 1

எழுத்தாளர் பா. ராகவன் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் “கபடவேடதாரி”.  இதில் ஒன்றும் புதுமை இல்லை. வாசகர்களுக்காக அறிவித்த போட்டி தான் புதுமை! வழமைக்கு மாறானது. நாவல் மொத்தம் 50 அத்தியாயங்கள். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் BYNGE APP ல் வெளிவரும் அத்தியாயத்தை படித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு விமர்சனம் எழுத வேண்டும். 50 அத்தியாயம் 50 விமர்சனம் என்பது விதிமுறை. ஒரு அத்தியாயத்திற்கு விமர்சனம் இல்லை என்றாலும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் அடைய வேண்டியிருக்கும். 

கொஞ்சம் சவாலானது என்ற போதும் பா.ரா. வின் எழுத்து நடையும், முதலிரண்டு அத்தியாயத்தின் நகர்வும் நாமும் ஒரு அட்டண்டென்ஸ் கொடுத்தால் என்ன? என்று நினைக்க வைத்தது. தவிர, ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு விட்டு முழு ஓய்வில் இருக்க வேண்டியிருந்ததால் முடியும் எனத் தோன்றியது. தோன்றியதை செய்து விடுவோமே என ஆரம்பித்து விட்டேன். வடிவேலு சொல்ற மாதிரி “ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் இருக்கு. உனக்கிட்ட ஃபினிசிங் சரியில்லையப்பாஎன்பது போல ஆகாமல் இருந்தாலே பெரிய விசயம் எனத் தோன்றுகிறது.

அத்தியாயம் – 1 (நான் ஒரு சூனியன்)

ஒரு பூரணத்தில் இருந்து இன்னொரு பூரணம் பிறப்பதாய் சொல்கிறது கீதை. அந்தப் பூரணத்தில் இருந்து பூரணத்தைப் பிரித்தால் பிறப்பவன் நான் என சூனியனைச் சுய அறிமுகம் செய்கிறார் பா. ரா. அந்த அசத்தல் அறிமுக வரிகளின் ஊடாக அவர்களின் உலகத்திற்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறார். அந்த உலகில் சிறை வைக்கப்படும் முறை, பறக்கும் தட்டு, விச நாக பற்கள், ஒளிச்சவரம், தண்டனை விதிக்கப்படும் விதம் பற்றிய விவரணைகளை வாசித்துக் கடக்கும் போதே அது நம் மனதினுள் சித்திரமாய் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காமிக்ஸ் நூல்கள் தூரிகையின் சலன ஓவியமாய் காட்டுவதை தன் சொற்களால் சித்திரமாக்கி விடுகிறார்.