சவுக்குக் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்தச் சார மேடையின் மீது நின்று கொண்டு ஒவ்வொரு செங்கலாய் கொத்தனார் வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். அறுபது வயதைக் கடந்து விட்ட அவருக்கு அது ஒன்றும் அற்புதமான, வியக்கத்தக்க காட்சியல்ல. ஆனால், செங்கல்களாலும், சிமெண்ட் கலவையாலும் எழுந்து வரும் அந்தக் கட்டத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் அவருக்குள் ஒரு ஆத்ம திருப்தியை அளித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர்கள் கிளம்பிய பின் இரவு நேரக் காவலுக்காக கட்டிடத்திற்கு வரும் பெரியவரை எதிர்பார்த்து இருக்கையில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தார்
ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த இராமலிங்கத்திற்கு மனைவியின் ஊரான இந்தக் கிராமமும், இங்கிருக்கும் உறவினர்களும் கற்றுக் கொடுத்த விசயங்கள் அவரின் வாழ்நாளில் மறக்க முடியாதவைகள்.