யாவரும் பப்ளிஷர்ஸ் மூலம் வெளிவந்திருக்கும் “கடலெனும் வசீகர மீன் தொட்டி” சுபா செந்தில்குமாரின் முதல் கவிதைத் தொகுப்பு. முற்றிலும் மாறுபட்ட பார்வையை நமக்குள் விரித்து விரவும் இத்தொகுப்பின் அநேகக் கவிதைகள் காதல், காமம், தனித்திருத்தல், எதார்த்தம் என நான்கு அடுக்குகளில் துளிர்த்தும், தனித்த அவலத்தின் சாயல் தரித்தும் நிற்கின்றன.
வாசிப்பவனின் தடம் பற்றி நிமிரும் கவிதைகள் அவனைத் தன் நிழலில் நிறுத்தும் போது அந்தக் கவிதைக்குள் தழும்பி நிற்கும் துயரம், சந்தோசம், தனிமை, கோபம், எள்ளல், காதல், காமக், கழிவிரக்கம் என எதுவொன்றையும் தனக்கானதாய் மாற்றிக் கொண்டு அடிக்கும், நுனிக்குமாய் ஊடு பாய்கின்றான். அதன் குளிர்ச்சியில் எப்பொழுதும் தன்னைப் பதப்படுத்திக் கொள்கின்றான். இத்தொகுப்பின் தலைப்புக் கவிதையான “கடலெனும் வசீகர மீன்தொட்டி” அப்படியான ஊடுபாய்தலையும், தன் பதப்படுத்தலையும் தந்தபடியே இருக்கிறது. மீனின் வழியே பிரிந்திருப்பவனின் மீந்து வழியும் காமத்தை நமக்குள் கொண்டு செலுத்த கவிஞர் சுபா கட்டமைத்திருக்கும் / பளபளப்பானதொரு தூண்டில் முள்ளில் / ஆண் வாசனையைச் சுமந்து வரும் இரை / ரகசியமாய் உதடுகள் குவித்து நீந்துகின்றன / ஈரமில்லாமல் வந்து சேர்ந்த முத்தங்கள் / வலதும் இடதுமாய் அலைந்து திரும்புகிறது / பகிர்ந்து கொள்ளப்படாத காமம் / இப்படியான ஒற்றை வரிகள் அந்தத் துயரின் அளவிடமுடியாத அடர்த்தியை உணரச் செய்து விடுகிறது.