ஓவியங்கள் வரைவதில் மகனுக்கு ஈர்ப்பு இருந்தது. உள்ளூரில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கு கொண்டு வந்தான். அந்த ஈர்ப்பை ஈடுபாட்டுடன் கூடியதாய் மாற்ற சில முயற்சிகளை அவ்வப்போது செய்து வந்தேன். அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம் எனச் சொன்னபோது பிரசுரமாகுமா? என எதிர் கேள்வியை சந்தேகமாய் கேட்டான்.
அனுப்புவோம். பிரசுரமாவதைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்? எனச் சொன்னேன்.
நான்கு படங்கள், நான்கு பத்திரிக்கைகள் என முடிவு செய்தோம். நான்கு படங்களை வரைந்து தந்தான்.
அனுப்பி வைத்து விட்டு வாரம் தவறாது பிரசுரமாகி இருக்கிறதா? எனத் தேடத் தொடங்கினேன். அதுவே ஒரு பிரசவ வலியாய் இருந்தது. அவனோ, அது பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. நேரம் கிடைக்கும் போது ஓரிரண்டு படங்களைத் தொடர்ந்து வரைந்து தந்து கொண்டிருந்தான்.