ஆலய வாயில் கடந்ததும் கருவறைக்குச் செல்வதற்கு முன் ஆலயங்களுக்குள் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். எல்லா தண்ணீரையும் “தீர்த்தம்” என்று சொல்வதில்லை. கோவிலின் கருவறையில் உள்ள இறைவனுக்கு படைத்து பூஜிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே “தீர்த்தம்” என்போம். அத்தகைய போற்றுதலுக்குரிய தீர்த்தங்கள் இராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைய இருந்திருக்கிறது. இருக்கிறது. அதனாலயே சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது இத்தலத்தின் சிறப்பாக போற்றப்படுகிறது.
பூர்வ, புண்னிய பாவங்களை போக்கிக் கொள்ளவும், இறந்தவர்களுக்கு பிதுர் காரியங்கள் செய்யவும் மட்டும் இந்த தீர்த்தங்களுக்கு வந்து மக்கள் நீராடுவதில்லை. மக்கட்பேறு கிடைக்க வேண்டியும் இங்கு வந்து தீர்த்தமாடுகின்றனர். நீண்டகாலமாக குழந்தை இல்லாமலிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர் வங்கத்தில் இருந்து நடந்து வந்து இங்கு தீர்த்தமாடிய பின்பு தான் குழந்தை பிறந்ததாம்! இன்றும் இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடினால் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.