ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் அதனைச் செய்வதற்கான வழிமுறைகளுக்காகத் தரப்படுபவைகள் ஆலோசனைகளும், அறிவுரைகளும். அந்தச் செயலைச் செய்து முடித்த பின் தரப்படுபவைகள் விமர்சனங்கள். இவைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்றையொன்று குழப்பிக் கொள்கிறோம்.
விமர்சனங்களுக்கு உள்ளாகி விடுவோமோ? என்ற பயத்தில் நம்மை நோக்கி வரும் நல்ல வாய்ப்புகளைக் கூட விட்டு விடுகிறோம். வசதியானவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் மட்டுமே வாய்ப்புகள் அமைவதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல! வாய்ப்புகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் பலமுறை வந்து செல்கின்றன. வாசல் கதவைத் தட்டிப் போகின்றன. ஆனால், அதன் பொருட்டு வரும், வரப்போகும் விமர்சனங்களுக்குப் பயந்து அவைகளை ஏற்காமல் நின்று விடுகிறோம். இதனால் தான் ”வாழ்க்கையே ஒரு வாய்ப்பு” என்றார் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.