ஊக்குவிப்பவன் இருந்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான் – என்பது மறைந்த கவிஞர் வாலியின் வரி. இப்படியான ஊக்குவித்தல் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது. மற்றவர்களை விடுங்கள். பெற்றோரிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான பிள்ளைகளின் பதிலாக இருக்கிறது. முதல் தேர்வில் நாற்பது மதிப்பெண்கள் வாங்கிய குழந்தை அடுத்த தேர்வில் அறுபது மதிப்பெண்கள் வாங்கி வந்து ஆர்வத்துடன் சொல்லும் போது, “அடடே…… இப்ப உன்னால் இவ்வளவு எடுக்க முடியுதுன்னா இன்னும் நல்லா படிச்சா உன்னால இதைவிடவும் கூடுதல் மதிப்பெண் வாங்க முடியும்னு நினைக்கிறேன்” என ஒரு பாராட்டை உற்சாகமாக எத்தனை பெற்றோர்கள் கொடுக்கிறார்கள். இப்படி கொடுப்பதற்கு பதிலாக ”அறுபதெல்லாம் ஒரு மார்க்கா? ஒழுங்கா படிச்சு இன்னும் நல்ல மார்க் வாங்கப் பாரு” என கடிந்து கொள்வதோடு பக்கத்து வீட்டில் அவனோடு படிக்கும் பையனையும் ஒப்பீட்டுக்காக துணைக்கு வைத்துக் கொள்வார்கள். அப்புறம் எப்படி அந்த குழந்தைக்கு அறுபதைக் கடந்து விட வேண்டும் என்ற வேகம் வரும்? வேதனை தான் வரும்!