Tuesday 19 August 2014

துன்பத்திற்கு காரணம் ஆசையா?!

காதுக்கு மாட்டும் வளையம் தொடங்கி தோளில் மாட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் போகும் பேக் வரை தனக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்களையும், அவைகள் சார்ந்து அவள் கொண்டிருந்த விருப்பங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த மகளிடம் சில நெறிபடுத்தல்களை சொன்ன பின் மேதாவித்தனமாய் என்னை நினைத்துக் கொண்டு, நீ இதையெல்லாம் விரும்புவதற்கு ஆசை தான் காரணம்! அதுனாலதான் ஆசையே துன்பத்திற்கு காரணம்னு புத்தர் சொல்லி இருக்காருன்னு சொன்னேன்.

"நான் நல்லா படிக்கனும். அப்படி வரனும், இப்படி இருக்கனும்னு நீங்க ஆசைபடுறதா எப்பவும் சொல்றீங்களே" அது உங்களுக்கு துன்பமா? என்றாள்.

எனக்கு வந்த சோதனையான்னு நினைச்சுக்கிட்டு, "அது வேற, இது வேற" என்றேன்.

அதெப்படி எனக்குனா துன்பத்துக்கு ஆசை காரணமாகும். உங்களுக்குனா ஆகாம போகும் டாடி? என்றாள். இப்ப புத்தர் சொன்ன போதனையை விட என்னிடம் நீ கேட்ட இந்த கேள்வி தான் பெரிய துன்(ம்)பமா இருக்குன்னு நினைச்சுக்கிட்டு சரிம்மா………..நளைக்கு பேசலாம் என்றேன்.

வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்றதுன்னு படிச்சது பளிச்சுனு நினைவுக்கு வந்து போனது