Wednesday 8 April 2015

இராமருக்கு அருளிய ஆதிஜெகன்னாதர்

புதிதாக வீடு கட்டும் போது கட்டிட சாமான்களை போட்டு வைப்பதற்காக தற்காலிக குடிசை ஒன்றை வீடு கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அமைப்பது நம்முடைய வழக்கம். அப்படி அமைக்கும் போது அந்த இடத்திற்கு உரியவரிடம் அதற்கான அனுமதியை கேட்போம் இல்லையா? அதுபோல சீதையை மீட்க கடலின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த இராமர் கடலரசனிடம் கடல் அலைகலின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் காத்திருந்தார். அவனுக்கென்ன வேலையோ? மூன்று நாட்களாக இராமரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமலிருந்தான். இராமரோ அங்கிருந்த தர்ப்பையை ஆசனமாக கொண்டு சயனித்தபடியே காத்திருந்தார். அப்படி இராமர் சயனித்திருந்த தலம்திருப்புல்லணைஎன அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மருவிதிருப்புல்லாணிஎன்று பேச்சு வழக்கானது. வடமொழியில் இவ்வூர்தர்ப்பசயனம்என்றழைக்கப்படுகிறது. தர்ப்பம்புல்; சயனம்உறங்குதல்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருப்பவர் ஆதி ஜெகன்னாத பெருமாள். பஞ்சதரிசன தலமான பூரியில் இடுப்பு உயர அளவில் மட்டுமே வீற்றிருந்து காட்சி தரும் ஜெகன்னாதர் இங்கு முழுமையாக காட்சி தருவதால் இத்தலம்தட்சிண ஜெகன்னாதம்என்று அழைக்கப்படுகிறது.

72 சதுர் யுகங்களுக்கு முன் புல்லவர், காலவர், கண்ணவர் என்ற மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பி இருந்த இத்தலத்தில் அமர்ந்து கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அக மகிழ்ந்த பெருமாள் அரசமரமாக அவர்கள் முன் காட்சி கொடுத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அம்மகரிஷிகள் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும் படி வேண்ட அவர்களின் விருப்பத்தை ஏற்று அசுவத்த நாராயணனாய் அமர்ந்து காட்சி கொடுத்தார். அதனால் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள்ஆதி பெருமாள்என்றழைக்கப்படுகிறார்.

சீதையை மீட்கச் சென்ற இராமர் தனக்கு அருளும் படி இப்பெருமாளை வேண்டி நிற்க அவரின் யோசனைப்படியே வருணன் மூலம் கடலை வற்றச் செய்வதை விட சேது பந்தனம் (சேது அணை) அமைப்பது மேல் என முடிவு செய்து கட்டப்பட்டது. அதோடு, அப்பொழுது அவர் அளித்த ஒரு பாணம் (வில்) மூலம் தான் இராமர் இராவணனை அழித்தார். இப்படி இராமருக்கு வெற்றி தேடி கொடுத்த ஜெகன்னாதரை வேண்டி செய்யும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பதால் இவருக்குவெற்றி பெருமாள்என்ற பெயரும், இராமர் வணங்கி வழிபட்டதால்பெரிய பெருமாள்என்ற பெயரும் உண்டு. தவிர, இத்தலத்தில் உள்ள பெருமாளும், அவருடைய தேவியாரும், ஆலயத்தின் விமானமும் கல்யாணம் எனும் மங்கலத் திருப்பெயரை தாங்கி இருப்பதால் இவருக்குஸ்ரீ கல்யான ஜெகன்னாதர்என்ற சிறப்பு பெயருமுண்டு.

மரங்களில் நான் அரசமரமாய் இருக்கிறேன் என கண்ணன் கூறியதைப் போல இத்தலத்தில் உள்ள விருட்சம் அரசமரம் (அஸ்வத்த விருட்சம்). இத்தலமரத்திற்கு வடக்கே சற்று தூரத்தில் நாக சிலைகளுடன் கூடிய பெரிய மேடை அமைந்துள்ளது. ஆரம்பத்தில் தலமரம் இங்கு தான் இருந்ததாகவும் பின் தானாகவே கிளைகளை தாழ்த்தி மண்ணில் புதைத்து தற்போது இருக்கும் இடத்திற்கு நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது. புத்திரபாக்கியம் வேண்டி வந்த தசரதர் இத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி அந்த யாககுண்டலத்திலிருந்து வந்த பாயசத்தை தன் மனைவியருக்கு வழங்க அவர்கள் கருவுற்றனர் என்பது ஐதீகம். புத்திரபாக்கியத்திற்கான மூல மந்திரத்தை பெருமாள் தசரதனுக்கு உபதேசித்த தலமான இங்கு தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் உள்ளது. இத்தலத்தில் நாகலிங்க பிரதிஷ்டை செய்து நிவேதனம் செய்த பால் பாயாசத்தை அருந்தினால் புத்திரபேறு கிடைக்கும் என்ற ஐதீகம் இன்றும் பகதர்களால் பின்பற்றப்படுகிறது.

தலபுராணமோ தலமரத்திற்கு வேறு கதை சொல்கிறது. தொடக்க காலத்தில் படைப்புத் தொழிலை பரந்தாமனே செய்து வந்தாராம். அவரே முதன் முதலில் பிரம்மா, நவ பிரஜாபதிகள், இந்திரன் ஆகியோரை படைத்து பின் படைப்புத் தொழிலை பிரம்மாவிடம் அளித்தாராம். பிரம்மா தன் படைப்புத் தொழிலை செய்வதற்காக தென்திசை நோக்கி வருகையில் பேரொளி பிழம்பு ஒன்று தோன்றி அதே நொடியிலேயே மறைவதைக் கண்டு அது பற்றி கேட்டபோது அதுபோத ஸ்வரூபமான மரம்”. அதாவது அரச மரம். அதன் நிழலில் தான் ஜெகன்னாதர் தங்கி வருகிறார் என அசரிரி வழி பதில் கிடைத்ததாம்.


இத்தலத்தில் அமர்ந்த கோலம் (ஆதிஜெகன்னாதர்), சயனக்கோலம் (ஸ்ரீ தர்ப்பசயன இராமர்), நின்ற கோலம் (ஸ்ரீ பட்டாபி இராமர்) என்ற மூன்று கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். மூலவர்கள் மூவருக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன. மூலவர் ஜெகன்னாதர்  கல்யாணவல்லி, பதமாசனித் தாயாருடன் காட்சி தருகிறார். ஸ்வஸ்திக விமானம், கல்யாண விமானம், புஷ்பக விமானம் என விமானங்களால் சிறந்து விளங்கும் இத்தலத்தில் புராதான கோயில்களில் மட்டும் காணக்கூடிய வகையில் மகாலட்சுமியை மடியில் இருத்தி நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கு பக்தர்கள் சந்தன காப்பிட்டு வழிபடுகின்றனர். நாகத்தின் மீது நடனமாடும் ஸ்ரீ சந்தான கண்ணன் இன்னுமொரு சிறப்பு.

இத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் இராமேஸ்வர யாத்திரையில் முக்கியமானசேதுக்கரைஎன்ற தலம் அமைந்துள்ளது சேது என்றால் அணை என்று பொருள். அணை கட்டிய இடத்தில் உள்ள ஊர் என்பதால் சேதுக்கரை என பெயர் பெற்றதுஇங்கு அணைகட்டும் சமயத்தில் தான் தனக்கு கைங்கர்யம் செய்த அணில்களுக்கு முதுகில் இராமர் தன் திருக்கைகளினால் தடவி பாராட்டினாராம். முன்பு இராமேஸ்வரத்தோடு இணைந்திருந்த இப்பகுதி பின் கடல் கோளால் அதிலிருந்து பிரிக்கப்பட்டதுஇத்தலத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள தீர்த்தம்ரத்னாகர தீர்த்தம்என்றழைக்கப்படுகிறது. ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என்ற மூன்று நீர் பெருமைகளை ஒருங்கே கொண்டிருப்பது இத்தலத்தின் மற்றும் ஒரு சிறப்பாகும்.  

சேதுவின் கரையைக் கொண்ட பிரதேசத்தை ஆண்ட இப்பகுதி மன்னர்கள் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சி செய்த போது பரராஜசேகர மன்னர் காலத்தில் தான் ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அதன் காலம் சரியாக அறியப்படவில்லை. அதன் பின் 17 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கிழவன் சேதுபதி மற்றும் விஜயரகுநாத சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி ஆகியோரால் இக்கோயிலுக்கென ஊர்களும், உதவிகளும் வழங்கப்பட்டன. இக்கோயிலுக்கென பல உப்பளங்கள் உள்ளன. மன்னார் வளைகுடாவில் மூழ்கி எடுக்கப்படும் முத்துகுளியலில் ஒரு பங்கு இவ்வாலயத்திற்கு உரியது.

திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்திற்கு வந்து 20 பாசுரங்களை எம் பெருமான் மீது பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துச்சாமி ஆகியோர் கீர்த்தனைகளிலும், திருஞான சம்பந்தர், அப்பர் ஆகியோர் தத்தமது தேவார பதிகங்களிலும் இத்தலத்தை பாடியுள்ளனர். ஆண்டாளும், திருமாழிசையில் சேதுவை பாடி உள்ளார்.

108 திவ்ய தேசங்களில் 96 வது திவ்ய தேசமாகவும், பாண்டி நாட்டு திருப்பதிகளில் நான்காவது திவ்ய தேசமாகவும் திகழும் இத்தலம் தீர்த்தம், மூர்த்தி, தளம் ஆகிய முப்பெருமைகளை உடையது இராமபிரானின் திருவடிகளில் தன் மனைவியோடு கடலரசனும், அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வரோடு வீடணனும், இராவணனால் வேவு பார்க்க அனுப்பப்பட்ட சுகன், சாரணன ஆகியோரும் சரணடைந்த தலம் என்பதால் இத்தலம் சரணாகதி தலமாகவும் திகழ்கிறது. நாமும் இவர்களைப் போல சரணடைந்து இராமனுக்கு அருளிய ஆதிஜெகன்னாதரை வேண்டி துன்பங்கள் நீங்கி வெற்றி பெற ஒருமுறை இத்தலத்திற்கு சென்று வரலாமே!

நன்றி : நிலாச்சாரல்.காம்