Showing posts with label வல்லமை.காம். Show all posts
Showing posts with label வல்லமை.காம். Show all posts

Friday, 13 November 2015

இறைவனை அடையும் மார்க்கம்

 

திண்ணன் என்ற வேடவ குலத்தைச் சேர்ந்த இளைஞன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற இடத்தில் மலையின் மீது இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளம் உருகிப் போனான். யாருமில்லாத இந்தக் காட்டில் உறைந்திருக்கும் இறைவனை யார் பாதுகாப்பது? உணவு தருவது? என்று நினைத்தவன் தானே அவ்விரு காரியங்களையும் செய்ய முடிவெடுத்தான்.

இறைவனை அபிஷேகம் செய்வதற்கு வேண்டிய நீரை வாயிலும், அழகிய மலர்களைத் தலையிலும், தன் நண்பர்களோடு சமைத்த பன்றி இறைச்சியைக் கையிலும் ஏந்தி வந்து இறைவனுக்குப் படைத்தான். இரவெல்லாம் கண் விழித்து காவல் இருந்தவன் காலையில் நீராடச் சென்றான். தினந்தோறும் பூஜை செய்ய வரும் சிவகோசரியார் இறைவனுக்கு இறைச்சி படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அபச்சாரம்….அபச்சாரம் எனக் கூறிக் கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து அபிஷேகம் செய்து விட்டு இல்லம் திரும்பினார் மறுநாளும் அப்படி இருப்பதைக் கண்டு இதைச் செய்தவர் யார்? எனக் காட்டும் படி இறைவனிடம் முறையிட்டார்.

Thursday, 17 September 2015

கலியுகத்தில் சிக்கிக் கொண்ட கடவுள்!

காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த சூரபத்மன் வரங்கள் வேண்டி சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவத்தை மேற்கொண்டான். ஆண்டுகள் பலவாகியும் சிவபெருமான் காட்சி தராததால் கடுப்பானவன் தன் உடல் உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறுத்து யாக குண்டத்தில் போட்டு எரித்துக் கொண்டு தானும் அதிலேயே விழுந்தான். அவனின் தம்பிகளான சிங்கமுகன், தாரகன் ஆகியோரும் அவ்வாறே செய்ய சிவபெருமான் அவர்களுக்குக் காட்சியளித்ததோடு தேவர்களுக்கெல்லாம் தலைவனாக வேண்டும். எத்திசையும் செல்ல இந்திரஞாலத் தேர் வேண்டும். அழியாத யாக்கை வேண்டும் என சூரபத்மன் கேட்ட வரங்களையும் கொடுத்தார்.

 வரம் வாங்கியதும் கடலுக்குள் தனக்கான தலைநகரான வீரமகேந்திரபுரத்தை அமைத்தான். தேவலோகத்தின் மீது படையெடுத்து வென்றான். அவனிடமிருந்து தப்பிய தேவலோகத் தலைவனான இந்திரன் தன் மனைவியோடு சீர்காழிக்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு நந்தவனத்தை அமைத்து மூங்கில் மரத்தில் மறைந்து வாழ்ந்த படியே தன்னைக் காத்தருளுமாறு தன் பதவிக்கே வேட்டு வைத்த சிவபெருமானை வேண்டி நின்றான்.

Saturday, 5 September 2015

பழுதாகி வரும் "பட்டிமன்றங்கள்"

பண்டிகைகள் தோறும் ஒரு பட்டிமன்றத்தை அரங்கேற்றி விட வேண்டும் என்பதை எழுதா விதியாகக் கொண்டிருக்கும் எல்லாத் தொலைக்காட்சி சேனல்களும் தயவு செய்து அதை மறுபரிசீலணை செய்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மின்னல் கீற்றைப் போல ஒரு கருத்தை, சிந்தனையை கலகலப்பு என்ற இரசவாதத்திற்குள் வைத்து கவிதையும், கதையும், இலக்கியமும், இன்னபிறவுமாய் இழைத்துச் செவிகளில் அரங்கேற்றி விசேச நாட்களை விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களாய் மாற்றிக் கொடுத்த பட்டிமன்றங்கள் இன்றைக்கு அரிதாகி வருகின்றன. பழுது பார்க்க வேண்டிய நிலையில் அவைகள் இருக்கின்றன.

பழந்தமிழர் காலத்தில் பொது இடங்களில், பலர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட கருத்துப் போர் தான் இன்றைய பட்டிமன்றங்களுக்கான முதல் வித்து எனலாம். இந்த வித்தின் தடங்கள் சங்ககால நூல்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் உறைந்து கிடக்கிறது. ”பட்டிமண்டபம்என்ற இலக்கிய வழக்கின் சொல் வடிவமானபட்டிமன்றங்கள்ஆரம்ப காலத்தில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்து நடைபெற்றன. குறிப்பாக கம்பன் கழகங்கள் கம்பராமாயணம் சாந்து அதிக அளவில் பட்டிமன்றங்களை முன்னெடுத்தன. இலக்கியங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றங்களில் சங்க இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், காப்பியங்களின் களிநடையில் தோய்ந்தவர்கள் தங்களின் வாதங்களால் மக்களுக்குச் செய்திகளோடு சேர்த்து இலக்கியங்களையும் கொண்டு சேர்த்தனர். மக்களின் புரிதலுக்கும், அறிதலுக்கும் ஏற்பப் பந்திவைத்தனர்.