Tuesday 6 March 2018

பிள்ளைப்பேறு அருளும் பர்வதவர்த்தினி

மூன்றாம் திருச்சுற்றை முடித்து இரண்டாம் திருச்சுற்றுக்குள் வந்தால் பத்து கைகளும், துதிக்கையும் கொண்டு மேற்கு நோக்கிய நிலையில் அபூர்வ பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். இந்த பிள்ளையாருக்கு தெற்கே சக்கர தீர்த்தம் உள்ளது.

310 அடி நீளமும், 59.5 அடி அகலமும், 18.5 அடி உயரமும் கொண்டு விளங்கும் இரண்டாம் திருச்சுற்றின் வட கிழக்கில் சங்கு தீர்த்தம், பிரம்மஹத்தி தீர்த்தம், சூரிய புஷ்கரினி தீர்த்தன், சந்திர தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம் என எட்டு தீர்த்தக் கிணறுகள் உள்ளன. வடமேற்கில்கோடி தீர்த்தம்அமைந்துள்ளது. இராமர் வில் நுனியால் குத்தி ஊற்று உண்டாக்கி நீர் எடுத்து லிங்கத்திற்கு முழுக்கு செய்த இந்த கோடி தீர்த்தத்தோடு இரண்டாம் திருச்சுற்று முடிவடைகிறது.

இரண்டாம் திருச்சுற்று முடிந்து உள்ளே நுழையும் போது அதைக் கடக்கும் மண்டபத்தின் வடபுறம் சிறிய குளம் போல சிவதீர்த்தம் அமைந்துள்ளது. இதைக் கடந்து சென்றால் நவசக்தி மண்டபம் வரவேற்கும். அதன் தென்கிழக்கே கல்யாண சுந்தரர் காட்சி தருகிறார். தென்மேற்கு மூலையில் சாத்தியாமிர்த தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்துள்ளது.

கருவறை இராமநாதருக்கு வலப்புறம் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு தனிச்சன்னிதி உள்ளது. பர்வதவர்த்தினி மீது தாயுமானவர்மலைவளர் காதலிஎன்ற பதிகத்தை தமிழில் பாடியுள்ளார். இவை அம்பாள் சன்னிதியின் தென்புற சுவரில் வெள்ளைச் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.

அம்பாளின் உருவம் அடி முதல் முடி வரை நேரியதாய் நெளிவின்றை அமைந்திருக்கிறது. இதைநிர்பங்க வடிவம்என்றழைப்பார்கள். அம்பாள் சன்னிதிக்கு கிழக்கு மூலையில் கண்ணாடியாலான மாடத்தைக் கொண்ட பள்ளியறை அமைந்துள்ளது. இங்கு இராமநாதரும், அம்பாளும் இரவில் திருப்பள்ளி கொள்வதையும், காலையில் திருப்பள்ளி எழுச்சி பெற்று மீள்வதையும் பூஜையாகவே தினமும் கொண்டாடுகின்றனர். பள்ளியறை நாயகியின் அழகை தாயுமானவர்

 தெட்டிலே வலியமட மாந்தர்வாய் வெட்டிலே

 சிற்றிடையிலே நடையிலே

 சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே

 சிறுபிறை நுதற்கீற்றிலே

 பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த

 பொடியிலே அடியிலே மேற்

 பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே

 புந்திதனை நுழையவிட்டு

 நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே

 நின்னடியர் கூட்டத்திலே

 நிலை பெற்ற அன்பிலே மலைவற்ற மெஞ்ஞான

 நேயத்திலே உன் இருதாள்

 மட்டிலே மனது செல நினதருளும் அருள்வையோ

 வளமருவு தேவையரசே!

 வரை ராசனுக்கு இரு கண்மணியா யுதித்த மலை

 வளர் காதலிப் பெண் உமையே!

எனப்பாடி உள்ளார்.

அம்பாளின் காலுக்கு பாஸ்கர சேதுபதி மன்னர் காணிக்கையாக கொடுத்த வைரக் கொலுசு அணிவிக்கப்படுகிறது. ஒருமுறை பாஸ்கர சேதுபதி தன் மகளுக்கு வைரக்கொலுசு அணிவித்து இக்கோவிலுக்கு அழைத்து வந்தாராம். அன்று கனவில் மலைவளர் காதலி சேதுபதியிடம், “உன் மகளுக்கு மட்டும் தான் கொலுசா?” என்று கேட்டிருக்கிறாள். தான் கடவுளுக்கு வைரக்கொலுசு பூண வேண்டும் என விரும்பியது தான் கனவாக வந்துள்ளது என சேதுபதி முதலில் நினைத்தாராம். ஆனால் மறுநாள் காலையில் தன் மகள் தடுக்கி விழுந்ததைக் கண்டதும் தன்னிடம் மலைவளர் காதலி தான் கனவில் வந்து கேட்டிருக்கிறாள் என முடிவு செய்து தன் மகளுக்கு அணிவித்த வைரக்கொலுசையே சேதுபதி காணிக்கையாக கொடுத்து விட்டாராம்.

இந்த அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இன்றும் நம்பிக்கையாக உள்ளது. இராமநாதருக்கு வலப்புறம் பர்வதவர்த்தினி இருப்பதைப் போல இடப்புறம் அன்னை விசாலாட்சி இருக்கிறாள். இந்த இருலிங்க கோவில் இங்கு மட்டும் என்பது சிறப்பு.

அம்பாளின் சன்னிதியில் உள்ள ஸ்ரீ சக்கரத்தை தரிசித்து ஆசிபெற்று கருவறை நோக்கி வரும் வழியில் நந்தி மண்டபம் உள்ளது. சிவதீர்த்தம் வழியாகவும் வரலாம். எல்லா சிவாலாயங்களிலும் நந்தி கருங்கல்லினால் அமைக்கப்படிருக்கும். ஆனால், இங்கு உள்ள 22 அடி நீளமும், 12 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட நந்தி செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் ஆனது. வாயிலிருந்து நாக்கு எழுந்து சுழன்று வரும் தோற்றத்தில் நந்தியின் சிற்பம் அமைந்துள்ளது.

மதுரை விசுவநாத நாயக்கர் காலத்து குறுநில மன்னராக இருந்த உடையான் சேதுபதி கட்டத்தேவர் இந்த நந்தி மண்டபத்திற்கான திருப்பணியைச் செய்தார். விசுவநாத நாயக்கரும், கிருஷ்ணப்ப நாயக்கரும் உருவ வடிவில் நந்தியின் இருபுறமும் நின்று இராமநாதரையும், விசுவநாதரையும் வணங்குகின்றனர்.

நந்தி மண்டபத்திற்கு எதிர்புற வாயிலின் தென்புறம் மகா கணபதி பெரிய உருவில் இருக்கிறார். நந்திக்கு குறுக்கே புகுந்து செல்லக் கூடாது. சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அப்படி சுற்றி வந்தால் வடக்கே முருகன் கோவிலும், கிழக்கே நவக்கிரக சலவைக்கல் மேடையும் உள்ளது. கோவிலுக்கும், நவக்கிரக மேடைக்கும் இடையே ஒரு மேடையில் பெரிய எண்ணெய் கொப்பரை சட்டி உள்ளது. நரக வேதனைய தவிர்க்கும் பொறுப்பு முருகனுக்கு உரியதாய் அவன் முன் வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்

4 comments:

  1. எந்த ஊரில் உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலுக்குள் இருக்கிறது.

      Delete
    2. நன்றிகள் அண்ணா

      Delete