Thursday 12 July 2018

வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு!

ஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு கஷ்ட்டப்படுவதைக் கண்டு, “எப்ப செஞ்ச பாவமோ இப்பக் கெடந்து அனுபவிக்கிறான்என்போம்.  அதேபோல, ஞானிகள், யோகிகள், முனிவர்கள் தவநிலையில் இருப்பதைக் கண்டுஇனி ஒரு பிறவி வேண்டாம் என இறைவனை வேண்டி தவமிருக்கிறான்என்போம். மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? இந்தப் பிறவிக்கு முன் எப்படி இருந்தோம்? இந்தப் பிறவிக்குப் பின் எப்படி இருப்போம்? என்ற கேள்விகளுக்கான பதிலில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றாலும் ஆத்மாவானது பல நிலைகளில் பிறவி எடுக்கிறது என்பதில் ஒத்த கருத்துடன் தான் இருக்கிறோம்.

பிறவிநிலைகள் ஏழு எனச் சொல்லப்பட்டாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மூன்று வகை பிறவிகளில் முற்பிறவி என்பது கடந்தகாலம். அதாவது கல்லறை. கல்லறையில் பெரிதாக மாற்றம் செய்ய எதுவுமில்லை. செய்யவும் முடியாது. அப்படியே செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. அது வேண்டாத வேலை! அதேசமயம், இந்தப்பிறவி என்பது நாம் கட்டிக் கொண்டிருக்கின்ற வீடு போன்றது. இழைத்து, இழைத்து நம் கற்பனைக்கேற்ப, வசதிக்கேற்ப அதைக் கட்டலாம். சில பகுதிகளைக் கட்டி முடித்திருந்தாலும் அதில் ரெனவேஷன் செய்து கொள்ள முடியும். வீட்டை மெருகூட்டுவதைப் போல இப்பிறவியின் எஞ்சிய காலத்தை சிறப்பாக்கிக் கொண்டு வாழவும், வாழ்ந்து கழிந்த நாட்களில் செய்த தவறுகளைச் சரி செய்து கொள்ளவும் சில கர்மாக்களைச் செய்ய வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் கர்மாக்களை நித்தியக் கர்மா, நைமித்திகக் கர்மா, காம்ய கர்மா என மூன்றாகப் பிரித்து அதைச் செய்வதற்கான வழியாகபக்தியைஉருவாக்கினர்.

இறைவனிடம் செலுத்துகின்ற அன்பே பக்தி. அதைப் பாசுரங்களாக நாயன்மார்கள், காதலாக ஆண்டாள், தியாகமாகக் கண்ணப்ப நாயனார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இறைவனிடம் செலுத்தி வழிபட்டனர். ஆனால், இப்படி அன்பு செலுத்த எல்லோராலும் முடியாது. அதற்கு மிகுந்த மனமுதிர்ச்சி வேண்டும். பண முதிர்ச்சியே மட்டுமே வாழ்க்கையாய் வாழப்பழகி விட்ட நம்மால் மனமுதிர்ச்சியோடு மேலே கூறியபடி எல்லாம் அன்பு செலுத்துவது எளிதான செயல் அல்ல. அப்படியானால் நாமெல்லாம் இறைவனிடம் எப்படி பக்தி செலுத்துவது? பரம்பொருளை அடையும் பக்கியத்தை எப்படிப் பெறுவது?

ஒரு ஊருக்குச் செல்ல பல வழிகள் இருப்பதைப் போல இறைவனிடம் பக்தி செலுத்தவும் பல வழிகள் இருக்கின்றன. அத்தகைய வழிகளில் நம்மைப் போன்றவர்களுக்கு ஏற்ற, எளிய வழிவழிபாடு”. பாசுரங்களால், காதலால், மிதமிஞ்சிய பாசத்தால், தியாகத்தால் இறைவனிடம் பக்தி செலுத்தி அவன் அருளைப் பெற்ற நாயன்மார்கள், ஆண்டாள்சிறுத்தொண்ட நாயனார், கண்ணப்ப நாயனார் ஆகியோரைப் போலவழிபாடுஎன்ற எளிய முறையின் மூலம்  நாமும் இறைவனை நாடிச் செல்ல முடியும் என்று நிருபித்துக் காட்டியதோடு அந்த முறையிலேயே இறையருளைப் பெற்று விளங்கியவர்கள் இராமகிருஷ்ண பரமஹம்சரும், இரமணரும்!

எளிமையான அதேசமயம் உயர்வான உன்னதங்களையும், அர்த்தங்களையும் கொண்ட வழிபாட்டின் மூலம் இறைவனிடம் பக்தி செலுத்துவதை திருவிழாக்களைப் போல குறிப்பிட்ட காலங்களில் அல்லது நாம் நினைத்த நேரத்தில் செய்யக்கூடாது. அதில் எந்தப் பயனுமில்லை. இறைவனிடம் பக்தி செலுத்துவது நம் வாழ்க்கை முறையோடு ஒன்றியதாக இருக்க வேண்டும். அதனாலயே வழிபாட்டை ஐந்துவகை உபசாரங்களாக பாகுபடுத்தி ஆறுகால பூஜைகளாக ஆலயங்களில் செய்தனர். கூடவே, வழிபாட்டை மையப்படுத்திக் கொண்டாடக்கூடிய பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் போன்றவைகளை வருடம் முழுவதும் வைத்தனர்.

பக்தி இரு வகைப்படும். ஒன்று மரியாதை. மற்றொன்று நம்பிக்கை. ஒரு மாணவன் தன் குருவின் மீதும், குழந்தைகள் பெற்றோர் மீதும், வேலையாட்கள் தன் எஜமானார் மீதும் வைக்கும் பக்தி மரியாதை பக்தி. இது ஜீவாத்மாக்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்ளும் பக்தியாகும். இதில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு இருக்கும். அது பலவித அளவுகோள்களோடு வெளிப்படும். ஆனால், உலக ஜீவாத்மாக்கள் எல்லாம் இறைவன் மீது வைக்கும் பக்தி நம்பிக்கை பக்தி. இதில் எந்த வித பாகுபாடும் இருக்காது. இறைவனிடம் செலுத்தும் நம்பிக்கை பக்தியானதுசரணடைதல்என்ற அளவுகோளோடு மட்டுமே வெளிப்படும். வழிபாட்டின் முக்கிய அம்சமே சரணாகதியடைதல் தான்!

ஒவரிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்போது மட்டுமே நாம் அவரிடம் சரணடைய சம்மதிக்கின்றோம். அப்படியான நம்பிக்கையை நமக்குத் தருவதாக இறைவன் இருப்பதாலயே அவனுக்குரிய வழிபாட்டில் என்றுமே நம்பிக்கைக்கு முதல் இடம். “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்என்பது கற்பனையல்ல!

முழுமையாகத் தன்னை நம்பி சரணாகதியடையும் வரை இறைவன் நம்மை சோதித்துக் கொண்டே இருப்பான். அவனை அவன் தாழ் பணிந்து என முழுச் சரணாகதிக்குப் பின்பே துன்பங்களில் இருந்தும், துயரங்களில் இருந்தும் அவன் தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கின்றான். தன்னைச் சரணடைந்தவர்களின் நம்பிக்கையை இறைவன் எப்பொழுதும் ஏமாற்றுவதில்லை.

ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து கணவன்மார்கள் கம்பீரமாய் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய மானத்தை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என பாஞ்சாலி நம்பிய வரையிலும் இறைவன் (கண்ணன்) வரவில்லை. தன் கணவன்மார்களின் மீது இருந்த நம்பிக்கை நசிந்து போய் இறைவனிடம் அவள் முழுமையாகச் சரணடைந்த அந்த நொடியிலேயே வந்து நின்றான். அவளின் மானத்தைக் காப்பாற்றினான்.

இதையே பிரகலாதன் வழியாகவும் நமக்கெல்லாம் இறைவன் நிகழ்த்திக் காட்டினான். தன்னையே முழுமையாக நம்பி இருந்த பிரகலாதனைச் சட்டென இறைவன் காக்கவில்லை. இரணியகசிபு ஒரு கட்டத்தில் தன் மகன் பிரகலநாதனின் இறை நம்பிக்கையை ஏளனம் செய்யத் துவங்கினான். அப்பொழுதும் கூட இறைவன் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையில் பிரகலாதன் உறுதியாக இருந்தான்அந்த உறுதி இறைவனை நரசிம்மமாய் அவதாரம் எடுக்க வைத்தது. எள் முனையளவும் சந்தேகமற்ற இறை நம்பிக்கையே பக்தியின் முதல் படி!

பாஞ்சாலிக்கும், பிரகலநாதனுக்கும் உதவியதைப் போல தன்னை வழிபட்டு பக்தி செலுத்துபவர்களுக்கு ஏதோ ஒரு உருவில், வழியில் இறைவன் உதவிக் கொண்டே இருக்கின்றான். நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் எதிர்பாராத வகையில் யாராவது வந்து உதவி செய்தால் கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள். உதவி செய்தீர்கள்என்று சொல்கின்றோம். எதிர்பாராமல் எதையும் தருபவன் இறைவன் மட்டுமே! அப்படி எதிர்பாராமல் ஒருவர் மூலம் கிடைத்த உதவி என்பதாலயே கடவுள் மாதிரி என்கின்றோம். நிதானமாக யோசித்துப் பாருங்கள். நித்தமும் கடவுள் ஏதோ ஒரு உருவில், வடிவில் நமக்கெல்லாம் உதவுவதும், நம்மைச் சந்திப்பதும் தெரியும்.

உடம்பு என்ற பூதப்பொருளும், ஆத்மா (உயிர்) என்ற அறிவுப்பொருளும் தனித்திருந்தால் அது சவம். அதுவே சேர்ந்திருந்தால் ஜீவாத்மா. அதாவது நாம்! உடம்பாகிய பூதப்பொருள் எடை, வடிவம், அளவு ஆகியவைகளைக் கொண்டதாக இருந்தாலும்  அதை இயக்க வைக்கும் அறிவுப் பொருளாக ஆத்மா இருக்கிறது. அத்தகைய ஆத்மா சென்று சேருமிடம் என்ற பொருளில் அவைகள் லயித்து (விரும்பி) இருக்கக்கூடிய இடத்தைஆலயம்என்றழைத்தனர்.

ஆத்மா லயிக்கும் இடம் என ஆலயத்தைச் சொன்னார்களேயொழிய ஜீவாத்மா லயிக்கும் இடம் எனச் சொல்லவில்லை, ஏனெனில் ஜீவாத்மாவாகிய நாம் லயித்து செல்லக்கூடிய இடமாக எந்த ஆலயமும் இல்லை. எந்த ஆலயத்திற்குள்ளாவது நம்மால் குழப்பமின்றி நுழையமுடிகிறதா? நிம்மதி தேடி ஆலயம் நுழைந்தால் - செருப்பை எங்கு மறைவாய் வைப்பது? அர்ச்சனையை யார் பெயருக்குச் செய்வது? தட்டோடு நிற்பவர்களுக்குத் தர எவ்வளவு சில்லரை இருக்கிறது? என்ற கேள்விகளே முதலில் நிற்கிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடித் தந்து உடம்பு என்ற பூதப்பொருளை ஆத்மா என்ற அறிவுப் பொருள் அழைத்துச் செல்கிறது. அதனாலயே ஆத்மாக்கள் லயிக்கும் இடமாக ஆலயங்களைச் சொன்னார்கள்.

சிறுகுழந்தைகள் பெற்றோர்களை விட அவர்களின் தாத்தா, பாட்டியிடம் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். காரணம், அந்தக் குழந்த்கைகளின் விருப்பத்தை, ஆதங்கத்தை, கோபத்தை மறுப்பின்றி, சலிப்பின்றி அவர்கள் கேட்கத் தயாராக இருப்பார்கள். ஆனால் வேகம், வேகம் என எதையோ தேடி ஓடும் வேக வாழ்க்கையில் பெற்றோர்களால் குழந்தைகளிடம் அப்படி இருக்க முடிவதில்லை.   சிறுகுழந்தைகளைப் போல ஆத்மாவும் இன்றைய வாழ்க்கை நெருக்கடிகளில் இருந்து மீள, துயரங்களைப் பகிர்ந்து கொள்ள யாராவது கிடைக்கமாட்டார்களா? என ஏங்குகிறது. ஆனால், பக்கத்து வீட்டில் இருப்பவரைக் கூட அறிந்து வைத்துக் கொள்ள முடியாத அவசர வாழ்க்கை முறையில் காது கொடுத்துக் கேட்க எவரும் தயாராய் இருப்பதில்லை. அப்படியே ஒருவர் கிடைத்தாலும் ஒருமுறை, இரண்டு முறை வேண்டுமானால் நம் ஆதங்கங்களை, பிரச்சனைகளைக் கேட்பார். அடுத்த முறை அவரிடம் சென்றால், “இவனுக்கு வேற வேலையே இல்ல. எப்பப் பாரு ஏதாவது பிரச்சனைன்னு வந்து பிராணனை வாங்குறான். என் பிரச்சனையே இங்க பெரிசாயிருக்கு. இதுல இவன் கதை வேறஎன முனங்க ஆரம்பித்து விடுவார். இப்படியெல்லாம் இல்லாமல் எத்தனை முறை போய்ச்  சொன்னாலும் தாத்தா, பாட்டி மாதிரி நம் விருப்பத்தை, ஆதங்கத்தை, கோபத்தை ஒருவர் கேட்பதாக இருந்தால் அதன் மூலம் நம் மனச்சுமை குறைந்து சந்தோசம் ஏற்படுவதாக உணர்ந்தால் அந்த இடத்தை நோக்கியே ஒடுவோம். இப்படி விரும்பி ஓடிவரும் ஆலயத்திற்குள் தாத்தா, பாட்டி மாதிரி நம் மனச்சுமைகளை பகிர்ந்துகொள்ள, அதன் மூலம் சந்தோச உணர்வுகளைத் தர உதவுபவராக இருப்பவர் காவித் துண்டு கட்டிய பூசாரிகள் என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் அலயத்திற்குள் வந்த பின்பும் இறைவனிடம் முறையிட்டுப் பெற வேண்டிய மனநிம்மதியை, ஆறுதலை, திருப்தியை பூசாரிகளிடம் முறையிட்டு ஆருடமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தட்டில் விழும் பணத்திற்கேற்ப விசாரிப்புகளையும், பூஜைக்கான நேரத்தையும், மந்திர உச்சரிப்புகளின் நீளத்தையும் நீட்டி முழங்கி காசுக்காக காக்காய் பிடிப்பவர்களாலும், பணத்தைக் கொடுத்தும், அதிகாரத்தை நீட்டி முழக்கியும் முதல் வரிசையில் போய் நின்று விட்டால் இறைவனின் அருள் கிடைத்து விடும் என நினைப்பவர்களாலும் ஆலயங்களுக்குள் அடிக்கப்படும் கூத்துக்களை இறைவன் ஒரு போதும் ஏற்பதில்லை. தன்னை நோக்கி வருபவர்களை எந்தப் பாகுபாடுமின்றி ஒரே வாசல் வழியே வரவைப்பதைப் போல தன்னை நாடி வருபவர்களிடமும் இறைவன் எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை.

அனைத்து மதக் கருத்துகளையும், இறை தத்துவங்களையும் ஆராய்ந்த பின்னர்கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்என்று ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் உணர்ந்து சொன்ன உண்மையை உணராத பதுமைகளை இறைவன் எப்பொழுதும் புறந்தள்ளி விடுகிறான். தன்னை நோக்கி வரும் எல்லா ஆத்மாக்களிடம் நெருக்கம் கொண்டவனாகவே இருக்கின்றான். அந்த நெருக்கத்தாலயே நாம் சொல்கின்ற எல்லா விசயத்தையும் முரண்படாமல், எதிர்வாதம் புரியாமல் அவனால் கேட்டுக் கொள்ள முடிகிறது. தன்னிடம் வந்து வருந்தி நிற்பவனிடம் பேசிப் பேசியே அவனுடைய பலவீனத்தை அதிகப்படுத்தி விடுகின்ற மதவாதிகள், பூசாரிகள், அரசியல்வாதிகளின் வேலையை இறைவன் ஒருபோதும் செய்வதில்லை.

கல்லாய் இருப்பதால் இறைவன் மெளனமாய் இருப்பதில்லை. அது அவனின் மொழி. “மெளனம் சம்மதம்என்பது காதலும், கல்யாணமுமாய் வாழுபவர்களின் மொழியாய் இருப்பதைப் போலமெளனம்இறைவனின் மொழியாய் இருக்கிறது. இதை அறிந்தவர்கள் ஞானிகள், தீர்க்கதரிசிகள் என்று போற்றப்பட்டனர். தன்னுடைய  மொழியை அறிந்த இத்தகைய ஞானிகள், தீர்க்கதரிசிகள் மூலம் இறைவன் நமக்கு உணர்த்திய உன்னதங்கள் தான் எத்தனை…….எத்தனை! இரமணரின் வாக்கும், இரமகிருஷ்ணரின் வாழ்வும் கற்றுத் தராத விசயங்கள் ஏதுமுண்டா?

ஒருவேளை இறைவன் நம்மிடம் எதிர்வாதம் புரிகின்றான் என வைத்துக் கொள்வோம். உடனே நாமென்ன செய்வோம்? தர்க்கம் செய்ய ஆரம்பித்து விடுவோம். “நான்என்ற அகந்தையோடு இறைவனை ஆதிக்கம் செய்ய முயல்வோம். உதாரணம் புராணங்கள்! இப்படி தர்க்கமும், அகந்தையும் நிலவும் இடத்தில் வெறும் சபதங்களும், குழப்பங்களும் மட்டுமே மிஞ்சும். ஆத்ம சுத்திக்கு அடிப்படையாக இருக்கக்கூடியதன்னை அறிதல்என்பது காணாமலே போய்விடும்.

தன்னை அறியும் போது மட்டுமே மனம் அமைதியடைகிறது. மனம் அமைதியாகும் போது தெளிவு பிறக்கிறது. தெளிவு மாற்றங்களை உருவாக்குகிறது. மாற்றம் மனிதனாகிய ஜீவாத்மாவை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை சுத்தம் செய்கிறது. சுத்தமடைந்த ஆத்மா சந்தோச உணர்வைப் பெறுகிறது. இப்படித் தன்னை அறிதல் மூலம் சந்தோச உணர்வைப் பெறுவதற்கு அமைதி முக்கியம். அந்த அமைதி ஆலயத்தில் நிரம்பி வழிவதால் தான் இறைவன் நீக்கமற நிறைந்திருந்தாலும் ஆலயத்திற்கு வந்து வழிபடுகின்றோம்.

நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்




No comments:

Post a Comment