
கர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் அரசியல் பிரவேசம் மற்றும் அதன் விளைவுகளையும் அலசுகிறது இந்த நூல்.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவரை எந்த இடத்திலும் குறை சொல்லமுடியாது மற்றும் பலருக்கும் தெரியாத விஷயத்தைச் சேர்ப்பது. இந்த நூலிலும் பல விஷயங்கள் ஏற்கெனவே பல பத்திரிகைகளிலும், பல பேச்சாளர்கள் பேச்சிலும், முகநூலிலும் வந்த சில செய்திகள் வந்துள்ளன. இதைத் தவிர்த்துப் பார்த்தால் காமராஜரைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள பல விஷயங்கள் இதில் உள்ளன.
காமராஜரின் பாட்டி அவருக்கு வைத்த பெயர் “காமாட்சி”. அவர் அம்மா வைத்த பெயர் “ராஜா”. இந்த இரண்டும் இணைந்து வந்ததுதான் “காமராஜர்” என்பது புதுத் தகவல். இதுபோல பல சிறு சிறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் பரவிக்கிடக்கிறது.