Monday 19 December 2016

ஒரு நாள் பயிற்சிப் பட்டறை!

          நான் - செந்தில் குமார் - கில்லர்ஜி

மழைக்குக் கூட பொறியியல் கல்லூரிகளின் பக்கம் ஒதுங்கியதில்லை. நேற்று நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரிக்குள் இருந்தேன். புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழ் பயிற்சி முகாமிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை அங்கு தான் வைத்திருந்தார்கள்.

புதுக்கோட்டைக்கு வந்து சேரவும், அங்கிருந்து வெளியேறவும் மட்டுமே உங்கள் செலவு, மற்ற எல்லாச் செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்வதைப் போல அருமையான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். பயிற்சிப்பட்டறை நடத்த இடம் தந்த கல்லூரி நிர்வாகமே மதிய உணவு, சிற்றுண்டி, தேநீர் உள்ளீட்டவைகளோடு கல்லூரிப் பேருந்தையும் கொடுத்திருந்தார்கள். இப்படி உதவும் கரங்கள் இருக்கும் வரை எத்தனை பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தத் துணியலாம்!

வலைப்பக்கம், விக்கிப்பீடியா, யூடியூப், அலைபேசியில் ஆப்ஸை தரவிறக்கம் செய்து பயன்பாட்டுக்கு உள்ளாக்குவது என நான்கு நிலைகளில் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் தரப்பட்டன. எனக்குப் போல் பலருக்கும் அந்தத் தகவல்கள் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்பலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை! பயிற்சி வகுப்புக்கு நான் செல்ல இருப்பதை அறிந்திருந்த நண்பன் இதை எல்லாம் கத்துக்கிட்டு எழுதினால் காசு ஏதும் கிடைக்குமா? என்றான். சுத்தமா கிடைக்காது என்றேன். காசை மட்டும் மையமாக வைத்து எதையும் செய்யும் மன நிலை உடையவர்களுக்கு இத்தகைய பயிற்சி வகுப்புகளால் பயன் ஏதுமில்லை. தமிழ் வாழ்க என வெற்று கோஷமிடுவதை விடவும் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான இது போன்ற முயற்சிகளில் முடிந்த வரை நம்மை ஒப்புக் கொடுக்கலாம். கொடுக்காது போனாலும் தமிழ் மாய்ந்து விடாது!

ஒரே நாளில் அத்தனை நுணுக்கங்களையும் கற்று விட முடியாது என்ற போதும் அவசியமான அடிப்படையான விசயங்களைப் பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். நண்பனின் தூண்டுதலில் வலைப்பக்கம் எழுத ஆரம்பித்தேன். நேற்றைய பயிற்சி வகுப்பிற்குப் பின் விக்கிபீடியாவிலும் எழுத வேண்டும் என்ற தூண்டல் கிடைத்திருக்கிறது. எத்தனை தூரம் துலங்குகிறது என்பது போகப் போகத் தான் தெரியும்.

வலைப்பக்க எழுத்துக்களின் வழி வாசித்திருந்த நண்பர்களை ஒரு சேர சந்திக்க முடிந்தது. ”தினம் ஒரு தகவல்என்ற தலைப்பில் தினத்தந்தியில் எழுதும் செந்தில் குமார் இதுவரையிலும் நாலாயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்ட தகவல்களை எழுதி இருப்பதாய் சொன்னார். நான்கு தகவல்களை எடுத்து நான்கு வாரத்திற்கு ஒரு முறை எழுதுவதற்கே எனக்கெல்லாம் நாக்குத் தள்ளி விடுகிறது. அவரோ தினமும் ஒரு தகவலைத் தேடிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கில்லர்ஜியைச் சந்தித்த சந்தோசத்தில் என்னுடையமெளன அழுகையைக் கொடுத்தேன். முன்னெச்சரிக்கையாக அவரிடம் தரும் போதேகவிதைப் புத்தகம்என்றேன். பதறாமல் வாங்கிக் கொண்டார். கூடவே 1997 ல் உங்களின் முதல் கவிதை புத்தகத்தின் வழி உங்களைத் தெரியும் என்றவர் அதில் இடம் பெற்றிருந்த நான்கு வரிகளைச் சொல்லி இப்போது மட்டுமல்ல எப்போதும் என் நினைவில் அந்த வரிகள் நிற்கும் என்றார். இப்படியாக அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடைக்கும் நம்பிக்கைகள் தான் கவிதை எழுதும் துணிவை இன்னும் துரத்தாமல் வைத்திருக்கிறது.

நிகழ்வு முடிந்ததும் கல்லூரி பெயரில் வழவழப்பான தாளில் அச்சிடப்பட்ட நாள்காட்டியினைத் தந்தார்கள். எனக்கு முன் வாங்கியவர் எந்த வருசத்துக்கான காலண்டர்? என்றார். கேட்டவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். கொடுத்தவருக்கு வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். அந்த இளைஞன் அவரை ஓங்கி ஒரு அப்பு அப்பி விடுவான் என்றே நினைத்தேன். அவன் பார்த்த பார்வை அப்படி! பொறுமை காத்தான். இப்படியான குசும்புக்கு எங்க ஊர் பக்கம்ஊமக்குசும்புன்னு பெயர். உங்க ஊர் பக்கம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.


10 comments:

  1. தமிழ் வாழ்க என வெற்று கோஷமிடுவதை விடவும் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான இது போன்ற முயற்சிகளில் முடிந்த வரை நம்மை ஒப்புக் கொடுக்கலாம்.// உண்மை தான். நிகழ்வுகளை தொகுத்த விதம் அருமை.

    ReplyDelete
  2. மறக்க முடியாத இனிமையான சந்திப்பு...

    ஐ... கருத்துரைப்பெட்டி...! நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்கள் ஆலோசனை தான் அண்ணா.....

      Delete
  3. after reading your page I realised how much I missed that.

    ReplyDelete
  4. புதிய நண்பர்களைச் சந்தித்தில் மகிழ்ச்சி. அனுபவப்பகிர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete