Thursday, 5 March 2015

ஆசையின்றி ஓர் கடிதம்

அம்மாவின் வார்த்தையை மீற முடியாமல் தாலி கட்டி விட்டதாகவும், அறிமுகப்படுத்தும் அளவுக்கு அழகுடையவள் இல்லை என்றும் திருமண வரவேற்பில் தன் காது பட நண்பர்களிடம் வெளிப்படையாக கணவன் பிரபு கூறியதைக் கேட்டு வருத்தப்பட்டாலும் அதில் இருந்த எதார்த்தத்தை உணர்ந்தவளாய் அவனோடு குடும்பம் நடத்துகிறாள் சந்திரிகா. தன் மீதான வெறுப்பை வன்மமாய் குழந்தையின் மீது அவன் காட்டிய  போதும் சகித்துக் கொள்கிறாள். பொய்த்துப் போன எதிர்பார்ப்புகளோடு மட்டுமேயான வாழ்க்கையிலும் தன் கணவனை மனதார நேசிக்கும் சந்திரிகா அவனின் பொய்யான வார்த்தைகளால் எடுக்கும் முடிவை மனித இயல்புகளின் மெல்லிய உணர்வுகளோடு கடிதம் வடிவில் சொல்லும் கதைஆசையின்றி ஒர் கடிதம்”. உத்தம சோழனின்மனிதத் தீவுகள்என்ற தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது

நான் உங்களுக்குப் பிடிக்காதவள் தான். ஆனாலும் நானும் ஒரு மனுஷி தானே. எனக்கென்றும் ஒரு மனசு….அதற்கென்றும் சில ஆசைகள் இருக்கும் தானே….அதைப்பற்றி எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா?” என்ற சந்திரிகாவின் வரிகளின் மூலம் அவளுக்கும், அவள் கணவனுக்குமான இடைவெளியையும், பல குடும்பங்களில் மனைவி என்ற நிலையில் இருக்கும் பெண்களின் மனவலியையும் ஆசிரியர் சமதளத்தில் காட்டி விடுகிறார்.

Wednesday, 4 March 2015

நிஜத்தைத் தேடி

பிணத்தை எடுக்கப் பணம் இல்லாததால் உதவி கேட்டு வந்திருப்பதாகவும் வாசலில் தட்டைக் கையில் ஏந்தியபடி நிற்கும் ஒருவன் சொல்லும் உண்மைத்தன்மை மீது கணவன், மனைவிக்கிடையே நிகழும் உரையாடல் தான்நிஜத்தைத்தேடிகதை. இக்கதையின் ஆசிரியர் சுஜாதா.

கல்யாணமாகி ஒன்பது வருசத்திற்குப் பின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் கணவன், மனைவிக்கிடையே இருக்கும்பழக்கப்பட்ட மெளனம்என்ற ஆரம்ப வரிகளிலேயே நகர வாழ்வின் நிஜத்தைச் சொல்லி நேரடியாக கதைக்குள் ஆசிரியர் அழைத்து வந்து விடுகிறார்.

உதவி கேட்டு வந்து நிற்பவனிடம் கேள்விகளால் துளைத்தெடுக்கும் கிருஷ்ணமூர்த்தி மூலம் ஆண்களின் மனநிலையும்-

Tuesday, 3 March 2015

காலப் பெருவெளி

மரபு மயங்கி நிற்க புதுக்கவிதை, நவீனக்கவிதை, பின் நவீனக் கவிதை எனக் கவிதையின் குழம்படிகள் வேறு, வேறு ஓசைகளை எழுப்பிய படியே வேகம் கொள்ளும் இத்தருணத்தில் வாசிப்பாளனோடு படைப்பவனும் தன்னுடைய படைப்பை அந்தந்தத் தளத்தில் கொண்டு நிறுத்த வேண்டியது இன்றைக்கு அவசியமாகிறது. அப்படி இல்லாது போகும் போது அந்தப் படைப்பு அதன் வெளியை முழுமையாக எட்டாமல் ஒரு அடைப்புக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைச் சந்திக்க நேரும். இந்தச் சூழலில் புதியதாக கவிதைப் பரப்பிற்குள் நுழைபவன் தன்னுடைய படைப்பை தொகுப்பாக்கி முன்னெடுத்துச் செல்வதற்குச் சாதகமாக கவிதைகளுக்கான விற்பனைக் கேந்திரம் இல்லாத நிலையில் துணிந்து இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் தங்கமீன் பதிப்பகத்துக்கும், அதன் பதிப்பாளருக்கும் வாழ்த்துகள்.

Monday, 2 March 2015

ரசிக்க – சிந்திக்க – 6

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி. அதுவரையிலும் இந்தியப்பிரதமராக ஆண்களே இருந்து வந்ததால் பிரதமரின் அலுவலக அதிகாரிகள் பிரதமராக இருந்தவர்களைமிஸ்டர் பிரைம் மினிஸ்டர்என்றழைத்து வந்தனர். அதுவே மரபாகவும் இருந்து வந்தது. இந்திராகாந்தி பிரதமர் பதவி ஏற்றதும் அந்த மரபிற்கு சோதனை வந்தது. பெண்பிரதமர் என்பதால் அவரை எப்படி அழைப்பது? என்ற குழப்பம் பிரதம அலுவலக அதிகாரிகளுக்கு வர அவர்களின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட இந்திரா சொன்னார். என்னையும்மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்என்றே அழையுங்கள்