Thursday 5 March 2015

ஆசையின்றி ஓர் கடிதம்

அம்மாவின் வார்த்தையை மீற முடியாமல் தாலி கட்டி விட்டதாகவும், அறிமுகப்படுத்தும் அளவுக்கு அழகுடையவள் இல்லை என்றும் திருமண வரவேற்பில் தன் காது பட நண்பர்களிடம் வெளிப்படையாக கணவன் பிரபு கூறியதைக் கேட்டு வருத்தப்பட்டாலும் அதில் இருந்த எதார்த்தத்தை உணர்ந்தவளாய் அவனோடு குடும்பம் நடத்துகிறாள் சந்திரிகா. தன் மீதான வெறுப்பை வன்மமாய் குழந்தையின் மீது அவன் காட்டிய  போதும் சகித்துக் கொள்கிறாள். பொய்த்துப் போன எதிர்பார்ப்புகளோடு மட்டுமேயான வாழ்க்கையிலும் தன் கணவனை மனதார நேசிக்கும் சந்திரிகா அவனின் பொய்யான வார்த்தைகளால் எடுக்கும் முடிவை மனித இயல்புகளின் மெல்லிய உணர்வுகளோடு கடிதம் வடிவில் சொல்லும் கதைஆசையின்றி ஒர் கடிதம்”. உத்தம சோழனின்மனிதத் தீவுகள்என்ற தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது

நான் உங்களுக்குப் பிடிக்காதவள் தான். ஆனாலும் நானும் ஒரு மனுஷி தானே. எனக்கென்றும் ஒரு மனசு….அதற்கென்றும் சில ஆசைகள் இருக்கும் தானே….அதைப்பற்றி எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா?” என்ற சந்திரிகாவின் வரிகளின் மூலம் அவளுக்கும், அவள் கணவனுக்குமான இடைவெளியையும், பல குடும்பங்களில் மனைவி என்ற நிலையில் இருக்கும் பெண்களின் மனவலியையும் ஆசிரியர் சமதளத்தில் காட்டி விடுகிறார்.

சுய சம்பாத்தியம் இருந்தும் தன்னை வெறுத்து, உதாசீனப்படுத்தும் பிரபு போன்ற மனநிலை கொண்ட கணவனை அவனின் மன நேர்மைக்காக மட்டுமே சகித்துக் கொள்ளும் சந்திரிகாவின் மனம் பெண்களுக்கு மட்டுமேயானது!

பிறரின் சூழ்ச்சியால் கணவனின் நேர்மைக்கு இழுக்கு ஏற்பட்ட போது அதிலிருந்து அவனை மீட்க வக்கீல் பாரியுடன் செலவிட்ட தருணங்களைத் தவறான நோக்கத்தில் புரிந்து கொண்டும், அவளுடைய செயல்பாடுகளின் நேர்த்தியை அவன் விகற்பமின்றி எதார்த்தமாய் சிலாகித்ததை வைத்தும் சந்திரிகாவின் கைப்பைக்குள் கணவன் பிரபு எழுதி வைக்கும் சிறு கடிதம் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

பத்தாண்டுகாலமாக தன்னோடு வாழும் நிலையை மறந்தும், மறைத்தும் அக்கடிதத்தில்நீ என் உயிர் என்றும்”, ”நீயின்றி என்னால் இருக்க முடியாதுஎன்றும் அவன் எழுதியிருந்த பொய்கள் அதுவரை அவனை அவள் நேசிக்கக் காரணமாக இருந்த நேர்மையையும், அவன் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையையும் பொய்யாக்கி விடுகிறது. தன் சந்தேகத்தால் எழுந்த பயத்தை மறைக்க அவன் எழுதிய அந்தக் கடிதத்தால் சந்திரிகா எடுக்கும் முடிவு எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் அதன் பிந்தைய நிலையை வாசிப்பவர்களிடமே ஆசிரியர் விட்டு விடுகிறார்.

ஒரே வீட்டிற்குள் வசிக்கும் தம்பதிகளுக்கிடையே நிகழும் கடித வடிவிலான கதைக்கு நீரோட்டமாக வாழ்வின் எதார்த்தங்களை, சிறிய எதிர்பார்ப்புகளை, புறக்கணிப்புகளை பயன்படுத்திய விதம் பழைய கதைக்கருவை  புதிய பரிணாமம் பெறச் செய்கிறது.

ஆசிரியர்  :  உத்தம சோழன்

    கதை   :  ஆசையின்றி ஓர் கடிதம்

வெளியீடுதிருவரசு புத்தக நிலையம்