Tuesday, 29 June 2021

ரோஷாக்னி – தேர்ந்த நெசவு!

இந்த தொகுப்பு ஒரு விமர்சனப் போட்டிக்கான பரிசாக எனக்கு வந்தது. அச்சமயத்தில் அதை வாசித்திருந்த போதும் வாசிப்பு மராத்தானுக்காக மீள் வாசிப்பு செய்து கொண்டிருந்தேன். அதைக் கவனித்த நண்பர் எந்த மகாமகத்துல வந்த புத்தகம் இது. இப்ப வாசிச்சிக்கிட்டு இருக்க? என்றார். அவர் சொன்னதன் உண்மையான உள்ளர்த்தம் என்ன? எனத் தெரியாத போதும் இத்தனை காலமாகியும் இந்த தொகுப்பை வாசிக்காமலா இருந்தாய்? என்றே அவரின் கேள்வியை நான் புரிந்து கொண்டேன். அதை அவருக்கு விளக்க அவசியம் ஏற்படவில்லை.

இப்படியான தொகுப்பு நூல்கள் எப்பொழுதும் வாசிப்புக்கு சுவராசியமானவை என்பேன். வேறுபட்ட கதைக்களம், பலதரப்பட்ட வட்டார வழக்கு, மாறுபட்ட கதைமாந்தர்கள் என தனிப்பட்ட கதாசிரியரின் தொகுப்பு நூலில் சாத்தியமாகாத விசயங்கள் இப்படியான தொகுப்பில் கிடைப்பது அதற்கு ஒரு முக்கிய காரணம். ரோஷாக்னி என்ற இத்தொகுப்பு 1998 ம் ஆண்டு இலக்கிய சிந்தனை பரிசுபெற்ற 12 கதைகளின் தொகுப்பு. வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பத்திரக்கோட்டைக்கு பஸ் வந்த விபரம், அதன்பின் அவ்வூரும், அம்மக்களும் தங்கள் வாழ்வியலை மாற்றிக் கொண்ட விதம், மீண்டும் வழக்க நிலைக்கு அவ்வூரைக் கொண்டு வந்த சூழல் என்ற மூன்றையும் பிசிறு தட்டாமல் சொல்லிச் செல்லும் கதை கவுரவம். உன்னிடம் நான் சமாதானமாகிப் போவதை விட பழைய வாழ்வையே வாழ்ப் பழகிக் கொள்கிறேன் என இரண்டு கிராம மக்கள் ஏற்கும் வெட்டி கவுரவத்தின் மைய இழையில் கதை நகர்கிறது.

Monday, 28 June 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 11

அத்தியாயம் – 11  

 (ஒரே ஒரு பூங்கொத்து)

அரசியாரைக் காணத் திரளும் கூட்டத்தினால் ஏற்படும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத்துறையினர் எடுக்கும் நடவடிக்கையின் வழி தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சூனியன் தயாராகிறான். அரசியார் வருகை குறித்து இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தகவலை கசிய விடுகிறான். ஆனால், விதியோ சூனியன் விசயத்தில் சதிராட்டத்தை ஆரம்பிக்கிறது. அவனுக்குத் தரப்பட்ட வேலையை முழுமையாக செய்ய இயலாமல் போவதால் குற்றவாளியாக்கப்படுகிறான். மரண கப்பலுக்கு ஏற்றப்படுகிறான். சில அத்தியாயங்களுக்கு முன் நின்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.

கோவிந்தசாமிக்காக கரையும் நிழல் வெண்பலகையில் சாகரிகா எழுதுவது கட்டுக்கதை என்பதை எப்படியும் இந்நகர மக்களுக்குச் சொல்ல சூனியனிடம் உதவி கேட்கிறது. அது சாத்தியமில்லை எனக் கூறும் சூனியன், சாகரிகா எழுதுவதெல்லாம் பொய். குறிப்பாக தன் குஞ்சு மேட்டர் குறித்து எழுதியதெல்லாம் அபாண்டம் எனக் கடுமையான மறுப்பை கோவிந்தசாமியே எழுதியதைப் போல வெண்பலகையில் வெளியிட வைக்கிறான். நீலநகர மொழி தெரியாமல் எங்கோ ஒரு பூங்காவில் கிடக்கும் கோவிந்தசாமி பெயரில் எப்படி வெளியிட முடியும்? அதற்கு சூனியன் செய்த தந்திரம் என்ன? என்பது புது திருப்பம். கோவிந்தசாமி, அவன் நிழல் நிகழ்த்தப்போகும் நிகழ்வுகள் வரும் அத்தியாயங்களை சுவராசியமாக்கும் என நினைக்கிறேன்.

Sunday, 27 June 2021

இதுக்குமா?

மருந்துச் சீட்டை மருந்தகத்தில் கொடுத்தேன். ஒரு மருந்துக் குப்பியின் விலை இருநூறு ரூபாய் என்று சொல்லி தொகையைப் பெற்றுக் கொண்ட அந்த ஊழியர் கொடுத்த கவரில் இரண்டு குப்பிகள் இருந்தது.

எனக்குத் தரப்பட்ட பில்லை சரி பார்த்தேன். அதில் ஒரு குப்பி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

தவறுதலாக கொடுத்து விட்டாரோ? என்ற ஐயத்தோடு அந்த ஊழியரிடம் கேட்டேன்.

அவரோ, "ஒன்னுக்கு ஒன்னு ஃப்ரி" என்றார் கூலாக!

குப்பை வாளிக்கு தான் ஒன்னுக்கு ஒன்னுன்னு ஃப்ரீ கொடுத்தீங்க. நோய் தீர்க்கும் மருந்துக்குமா?

இந்தியா முன்னேறலைன்னு யாருலா சொன்னது?