Monday 17 June 2013

குறுங்கவிதைகள்

வெளிக்கொணர முடியா
இரகசியங்களாய்
பூங்காக்கள் தோறும்
இறைந்து கிடக்கிறது
சிலரின் ஏமாறுதல்களும்
பலரின் பரிமாறல்களும்!
----------------------------------------
செயற்கையை
தனக்குள் வாங்கி
உந்தி எழுந்த நீர்த்திவலை
இயற்கையோடு
கைகோர்த்து புணர்ந்த கணத்தில்
அடங்கி மறைந்தது
மீண்டும் நீர்க்குமிழியாய்!
-----------------------------------------
ஆதிமனுஷியின் அருவமாய்
ஊருக்கு மத்தியில்
உருவம் தாங்கி நின்றாள்
இடுப்புச் சேலையை
கை விரித்து பறக்க விட்டபடி
விளம்பரப்பெண்.
--------------------------------------
பின்வாசல் கிழிசல்களை
முன் வாசலில்
திரையாய் மாற்றும்
உன் கைங்கர்யத்தை
உற்றுநோக்கி நிற்கின்றேன்
உன் கிழிசல்களின் வழியே!
--------------------------------------

நன்றி : மலைகள்