Monday 9 November 2015

"சுப்புடு" மேடைக் கச்சேரி செய்தால்!

தொடர், தொடர்பற்ற வேலைகளால் இம்மாதம் நண்பர்கள் அழைத்த நிகழ்வுகளுக்குச் செல்ல இயலாமல் போன நிலையில் நேற்று (08-11-2015) நடைபெற்ற தங்கமீன் வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்விற்குச் சென்றிருந்தேன்.

சில புதிய முகங்களின் அறிமுகத்தோடும் முகநூலில் பார்த்தவர்களை நேரில் பார்த்த சந்தோசத்தோடும் தொடங்கிய நிகழ்வுகளை இந்த மாத வாசகரான நண்பர் கீழை .கதிர்வேல் அவர்கள் நெறியாள்கை செய்தார். தன்னுடைய நாற்பது ஆண்டு கால பத்திரிக்கை அனுபவத்தின் அடிப்படையில் இதழ்களில் படைப்புகளின் மூலம் பங்களிப்பது குறித்தான தகவல்களை நெறியாள்கையில் சிறு, சிறு துணுக்குகளாக அவர் தந்திருக்கலாம். ஏமாற்றி விட்டார். அவருக்கே உரிய நகைச்சுவை நெறியாள்கையைச் சிறப்பாக்கியது.  

படித்ததில் பிடித்தது அங்கத்தில் நிறைய படைப்புகள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட போதும் அதன் வழி சம்பந்தப்பட்ட படைப்பை நோக்கிச் செல்லும் மனநிலையை அது தரவில்லை, ஒரு படைப்பை அணுகும் தன்மை, அதன் மூலம் புரிந்து கொண்ட முறை என்ற அடிப்படை நிலையில் இருந்து விலகிப் போனதால் அறிமுகம் செய்யப்பட்டப் படைப்புகளை மனதில் நிறுத்தி வைக்க முடியவில்லை.

நான் விரும்பி இரசிக்கும் நாடகபாணி கதை வாசிப்பு அங்கம் அத்தனை நீர்த்துப் போகும் என நினைக்கவில்லை, கதைத் தேர்வில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும்வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்என்ற மனநிலை இல்லாததும், இன்னும் அணுக்கமான முன் தயாரிப்பு இல்லாததும் அதைச் சுவராசியமற்றதாக்கி விட்டது. அதில் நானும் பங்கேற்றிருந்ததால் ஒன்றைச் செய்த பின் அதன் சாதக, பாதக அம்சங்களில் என் பங்களிப்பு என்ன? என்று துழாவிக் கொண்டே இருக்கும் மனநிலை சுழன்று கொண்டே இருந்தது. என் பங்களிப்பு குறித்த என் சுயமதிப்பீட்டைஎதிர் வரிசையில் அமர்ந்து இசை விமர்சனம் செய்து கொண்டிருந்தசுப்புடுவைத் தூக்கி மேடையில் உட்கார வைத்துக் கச்சேரி செய்யச் சொன்னால் என்ன ஆகும்? அப்படித்தான் அந்த அங்கத்தில் என் பங்களிப்பு இருந்ததுஎன என் நாட்குறிப்பில் எழுதி வைத்தேன். சக நண்பர்களாய் வந்து எதிரில் அமர்ந்திருப்பவர்களை அதிர்ச்சியடைய வைக்கும் இது போன்ற பரிசோதணைகளில் தவறியும் தலை காட்டி விடக் கூடாது என நினைத்துக் கொண்டேன்

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த எம்.ஜி.சுரேஷ் பின் நவீனத்துவம் பற்றி நிறைய விசயங்களைச் சொன்னார். நவீனத்துவம் பற்றியே இன்னும் ஓரு தெளிவில்லாது இருக்கும் நிலையில் பின் நவீனத்துவம் பற்றி அவர் சொன்ன விசயங்கள் பீதியைக் கிளப்பியது, மனநிலைக்கு மாற்று வேணும் என்கின்ற சமயங்களில் நான் வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் சில எழுத்தாளர்களின் படைப்புகள் பின் நவீனத்துவ வரிசையில் வந்து நிற்பவைகள்; நிற்க முனைபவவைகள்  என்று அவர் சொன்னதும் பின் நவீனத்துவத்தைச் சட்டெனப் புரிதலில் இருக்கும் சிக்கல் தெரிந்து விட்டது. நான் புரிந்து கொண்டதை இங்கு பதியலாமா என்ற நினைப்பு இன்னும் பீதியடைய வைக்கிறது, இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தனியே எழுதலாம்.

 

இந்த வருட தங்கமுனைப் பேனா விருதாளர்களுக்கு பாராட்டு விழா அங்கமும் நிகழ்வில் இடம் பெற்றது, வரலாறு முக்கியம் என்பதால் அவர்களுக்குப் பின் வரிசையில் நின்று ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு வாழ்த்துகளைக் கை மாற்றிக் கொடுத்ததில் சந்தோசம். நேற்றைய நிகழ்வில் எனக்கு நெருக்கமாய்  கவிதை இரசனை அங்கம் இருந்தது. முன்பே வாசித்திருந்த கவிதைகள் என்ற போதும் அதை எப்படியெல்லாம் பார்க்கலாம் என்பதைப் பலரின் அணுகுதல் வழி அறிய முடிந்தது.

குறும்பட திரையிடலை விடவும் கவிதை, கதை விமர்சனம் இல்லாமல் போனதில் மிகுந்த வருத்தம்,. முதன் முதலாக நிகழ்விற்கு வந்து கதைக்காகப் பரிசையும் பெற்ற நண்பர் ஜெயன் நாதன் என் கதைக்கான விமர்சனத்தை எப்படிப் பெறுவது? என என்னிடம் கேட்டபோது யான் பெற்ற இன்பம் பெறுக என சந்தோசம் கொள்ள முடியவில்லை. அதனால் காரணங்களின் வழி இந்த அங்கத்தைப் பலி கொடுத்து விடாமல் இருந்தால் சந்தோசமாக இருக்கும்.

ஆறு அதன் போக்கில் போகும் போது பெரிதாய் கண்டு கொள்ள மாட்டார்கள். அதுவே கொஞ்சம் நழுவிப் பாய ஆரம்பித்தால் உடனே சுதாரித்து கரையைப் பலப்படுத்தி அதன் போக்கை இன்னும் சீராக்கி விடுவார்கள். அப்படிச் சீராக்கி விடப்பட்ட ஆற்றின் ஓட்டமாய் அடுத்தடுத்த நிகழ்வுகள் அமையட்டும்

பட உதவி : தங்கமீன் வாசகர் வட்டம்