Thursday 24 January 2019

உள் கடந்தால் கடவுள்!

நான் தேர்வில் பாஸ் ஆக வேண்டும். நான் முதல் ரேங்க் எடுக்க வேண்டும். எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும். எனக்கு நல்ல கணவர் மட்டுமல்ல என் பேச்சைக் கேட்கின்ற மாமியாரும், நாத்தனாரும் வேண்டும்; எனக்குக் குழந்தை வேண்டும் அதுவும் ஆண்குழந்தை என்றால் நிரம்ப சந்தோசம் என தொடர் கதையாய் நீளும் இவையெல்லாம் ஆத்ம சுத்திக்காக ஆலயம் வரும் நாம் சுயநலத்தோடு இறைவனிடம் கேட்கும் சங்கதிகள்! ஆலயத்திற்கு வெளியில் அமர்ந்து கொண்டு நம்மிடம் தனக்காக உதவி கேட்பவர்களைபிச்சைக் காரர்கள்என ஏளனம் செய்கின்றோம். அதே காரியத்தை ஆலயத்திற்குள் இருந்து கொண்டு செய்யும் நம்மை எப்படி அழைத்து ஏளனம் செய்து கொள்வது?

கேட்பதை எல்லாம் உடனே நிறைவேற்றித் தரும் அலாவுதீனின் அற்புத விளக்காக இறைவனை நினைத்துக் கொண்டு எழுதப்படாத ஒப்பந்தங்களை இறைவனிடம் செய்து கொள்ள முயல்கிறோம். பத்திரமில்லாத பங்குதாரராக ஆக்கிக் கொள்ளப் பார்க்கின்றோம். தேவர்கள் விரும்பிக் கேட்ட போதும் கூட மூன்றுக்கு மேல் வேண்டாம் எனச் சொன்ன விநாயகருக்கு நூறு தோப்புக் கரணம் போடுவதாய் வேண்டிக் கொள்வதை என்னவென்பது? தன் பொருட்டு எவரும்  துயரங்களை அனுபவிக்க வேண்டும் என இறைவன் விரும்புவதில்லை. அப்படி இறைவன் விரும்பாத பல விசயங்களையே நாம் இறைவனின் பெயரில் செய்து கொண்டிருக்கிறோம்.

தனக்கே வேண்டும் என்ற வெறித்தனமான ஆசையாலும், சுயநலத்தாலும் இறை வழிபாட்டிற்குள் ஒவ்வாத விசயங்களுக்குள் சிக்கிக் கொள்கின்றோம். இதனால் இறைவனையும், இறை வழிபாட்டின் மூலம் உணர வேண்டிய உன்னதங்களையும் இழந்து பயத்தின் பெயரில் பக்தியைக் காசாக்கும் கூட்டங்களில் சிக்கிக் கொள்கின்றோம். ஆன்மிகத்தின் அடிப்படையை அரைகுறையாய் அறிந்த அரைவேக்காடு மதகுருமார்களின் காலடியிலும், சமயத்தின் மூலம் வயிறு வளர்க்கும் குறி சொல்லிகள், பூசாரிகளின் காலடியிலும் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்

இறைவனின் பிரதிநிதிகளாகத் சொல்லிக் கொள்ளும் இவர்கள் தங்களின் சக்திக்கேற்ப பத்திரிக்கைகளிலும், மீடியாக்களிலும் விளம்பரங்களைத் தேடிக் கொள்கின்றனர். மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை அடைந்ததும், “நானே இறைவன் என்றும், கலியுக அவதாரம்என்றும் கூச்சமின்றி அறிவித்துக் கொள்கின்றனர். இவர்களின் அறிவிப்புகளை அப்படியே நம்பும் நம் நம்பிக்கை அவர்களுக்குப் பலம். நம் மத்தத்துக்கு பலவீனம். இறைவனுக்கு அவமானம்.

இறைவனிடம் சுய நல நோக்கோடு ஒப்பந்தங்களை நாமே செய்து கொள்வதும், இறைவனின் பிரதிநிதி என தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்களின் பின்னே ஓடுவதும் இறைவனை நெருங்கும் முறையல்ல. என் பின்னால் வந்தால் இறைவனைக் காட்டுகிறேன் என விளம்பரம் செய்து கொள்ளும் இவர்களால் இறைவனை மட்டுமல்ல அவன் நிழலைக் கூட காட்ட முடியாது! ஆளானப்பட்ட இராமகிருஷ்ண பரமஹம்சராலயே விவேகானந்தருக்கு இறைவனைக் காட்ட முடியவில்லை. உணர வைக்க மட்டுமே முடிந்தது என்றால் இவர்கள் எல்லாம் எம்மாத்திரம்? இறைவனைக் காட்ட முடியாது என்ற சத்தியத்தை மழுப்பாமல் உள்ளபடியே உணர்த்தியதால் மட்டுமே இராமகிருஷ்ண பரமஹம்சரை இறைவனைத் தேடி அலைந்து கொண்டிருந்த விவேகானந்தர் குருவாக ஏற்றார்

ஊரே மதித்துப் போற்றிய ஞானி ஒருவரை மட்டம் தட்ட நினைத்த இளைஞன், “இறைவனை எனக்குக் காட்ட முடியுமா?” என அவரிடம் கேட்டான். அவனுடைய கேள்விக்கு ஞானி எந்த பதிலும் சொல்லவில்லை. இளைஞனும் விடுவதாய் இல்லை. தினமும் ஞானியைச் சந்தித்து அவன் இதே கேள்வியைக் கேட்பதும், அவர் பதில் சொல்லாமலிருப்பதும் சில தினங்களாகத் தொடர்ந்த படியே இருந்ததுஇதைக் கண்ட ஞானியின் சீடர்கள், “எல்லாம் அறிந்த நம் குரு இந்த இளைஞனின் கேள்விக்கு மட்டும் ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார். ஒருவேளை, ”இறைவனைக் காட்ட நம் குருவால் முடியாதோ?” எனச் சந்தேகம் அடைந்தனர். வழக்கம் போலவே அன்றும் ஞானியைச் சந்தித்த அந்த இளைஞன், “இறைவனைக் காட்ட முடியுமா?” எனக் கேட்ட அடுத்த விநாடி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். அறை வாங்கிய இளைஞன் ஞானியைஅரைக்கிறுக்கன்எனச் சொல்லி விட்டு வந்த வழியே ஓடிப் போனான். ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த சீடர்கள் ஞானியின் இந்தச் செயலால் மேலும் குழம்பிப் போனார்கள். மற்ற சீடர்கள் எல்லாம் தயங்கி நிற்க ஒரு சீடன் மட்டும் துணிச்சலாக, “குருவே…..….எல்லோருடைய சந்தேகங்களையும் எளிதாய், எளிமையாய் தீர்த்து வைக்கின்ற நீங்கள் அந்த இளைஞனின் கேள்விக்கு மட்டும் ஏன் விடை சொல்லாமல் கன்னத்தில் அறைந்தீர்கள்?” என்றான்.

ஞானி அனைதியாக, “எனக்கு வேறு வழி தெரியவில்லை, அவனையே அவனுக்குக் காட்டச் சொல்லி எத்தனை நாளைக்கு என்னிடம் கேட்பான். அதனால் அறைந்தேன்என்றார். சந்தேகம் நீங்கப் பெற்ற அவருடைய சீடர்கள் ஞானம் பெற்றனர். இறைவனிடம் இறுதியில் சென்று சேரக் கூடியஇறைவனுக்குரிய ஆத்மா நமக்குள்ளேயே இருக்கிறது. அப்படியானால் இறைவன் நமக்குள்ளேயே இருக்கிறான். இதைத் தான் ஞானி தன் சீடர்களுக்கு உணர்த்தினார். இறைவனின் பிரதிநிதியாய் நீங்கள் நம்பும் எந்த மத குருவாது, சாமியாராது உங்களுக்குள் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையைச் சொல்லி உங்களை உணர வைத்திருக்கிறாரா? அப்படி யாரேனும் உங்களை உணர வைத்திருந்தால் அவரே மிகச் சரியான் குரு. வழிகாட்டி! அவர் பாதம் பணிந்து அவரின் சீடராகத் தொடருங்கள். உங்களுக்கும் ஒரு இராமகிருஷ்ண பரமஹம்சர் கிடைத்து விட்டார் என பெருமிதம் கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட குரு கிடைக்காவிட்டால் அதற்காகக் கவலைப் படாதீர்கள். எங்கும் அவரைத் தேடி அலையாதீர்கள். குருவைத் தேடித் திரியும் குருட்டு முயற்சிகளோடு, தனக்கென மட்டுமே என்ற நோக்கோடு இறைவனிடம் வேண்டும் சுயநல எண்ணத்தையும் தூக்கி ஓரம் வைத்து விட்டு நீங்கள் நீங்களாக மட்டுமே ஆலயம் வாருங்கள். அங்கு இறைவனே குருவாய் மாறி அவனை அறியும், அடையும் வித்தைகளை, பக்தி செலுத்தும் வழிகளை வழிபாட்டின் மூலம் கற்றுத் தருவான். மாணவன் தயாராய் இருந்தால் குரு தானே தோன்றுவார் என்பது இந்த விசயத்தில் முற்றிலும் உண்மை!

நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்


No comments:

Post a Comment