Thursday, 29 August 2013

கலியுக மணிமேகலை

பிச்சை பாத்திரத்தில் 
அன்னம் ஏந்தி வந்தாள் 
சமண மணிமேகலை
பிள்ளை ஏந்தி வருகிறாள் 
கலியுக மணிமேகலை

நன்றி : வார்ப்பு

நம்பிக்கை

வில்லும் ,கல்லும் 
வனமும், கவிதையும் 
வந்து கொண்டே இருக்கின்றன
ஒரு இராமனாவது 
வாழ்வான் என்ற நம்பிக்கையில்

நன்றி : வார்ப்பு

Saturday, 24 August 2013

எப்பொழுது?

மழை இறங்கும் தருணமெல்லாம்
கவிதைக்காக வார்த்தைகள் தேடி
அலைந்து திரிகின்றாய்.
எப்பொழுது
இறங்கும் மழையில் இறங்கி
மழையாகப் போகிறாய்?

நன்றி தமிழ்முரசு நாளிதழ்

Sunday, 18 August 2013

வசைச்சொல்

எவரிடமும்
பறித்து உண்ணாது
எதன் பொருட்டும்
வாய்ச்சவடால் செய்யாது
துருத்தித் தெரியாத
பாவங்களைச் சுமக்காது
தன் சுகமென்பது கூட
தன்னை லயிப்பதே
என்றிருப்பவனை நோக்கி
எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம்
பைத்தியம்என்ற வசைச்சொல்லை.

நன்றி : திண்ணை

Friday, 16 August 2013

நம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை



தினபூமி நாளிதழின் வெளியீடான தினபூமி - மாணவர்பூமி மற்றும் ஹெர்குலிஸ் மாத இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளோடு கூடுதல் கட்டுரைகள் இணைந்து வெளிவந்திருக்கும் தொகுப்பு

48 சிறு தலைப்புகளாக 12 பெரிய தலைப்புகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்நூலின் எந்த ஒரு தலைப்பிலிருந்தும், எந்த ஒரு பக்கத்திலிருந்தும், முற்றுப்பெற்ற எந்த ஒரு வாக்கியத்தில் இருந்தும் வெற்றிப்பயணத்திற்கான, சுய முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்களை உங்களால் பெறமுடியும்
       
   

Thursday, 15 August 2013

உருமாறும் வசவுகள்

பத்தாண்டாகியும்
பாலூட்ட வக்கத்தவளென
சபித்தவர்களின் வசவுகள்
மலராப் பூக்களாய்
மலர்ந்த மலர்களாய்
உவந்த வார்த்தைகளாய்
உறை நீங்கா வாழ்த்துகளாய்
வருடந்தோறும் உருமாறி
முகம் பார்க்க வந்துவிடுகிறது
எவ்வித குற்றவுணர்வுமின்றி
என் திருமண தினத்தில்.

நன்றி : பதிவுகள்

Thursday, 1 August 2013

தடம்

புறநகரின்
மனைகள் தோறும்
புதைந்து கிடக்கிறது.

உழுது விதைத்து
உயிர் வளர்க்க
உணவு தந்தவனின்
வறுமை  தடவிய 
வியர்வை ரேகைகள்.

நன்றி : முத்துக்கமலம்

சாமி மரம்

அதுவரையிலும்
பிள்ளையாரோடு
சாமி மரமாய் இருந்தது.

ஓரிரவில்
பிள்ளையார் களவு போக
சாலை விஸ்தரிப்புக்காய்
சாமிமரம் வீழ்ந்தது விறகாய்!

நன்றி : முத்துக்கமலம்