Thursday 31 October 2013

புறம் பாய்ந்த நகல்

இப்போது அது நிகழச் சாத்தியமற்ற நினைவு
ஒரு காலத்தில் அதுவே
நிஜத்தின் நகலாய் நடமாடிக் கொண்டிருந்தது

ஒரு மழைக்கால இரவில்
மையல் கொண்டிருந்த அமைதியை
சூழ் கொண்ட அந்த நினைவு
சர்ப்பத்தின் புனைவாய் மேல்நோக்கி
எழும்பி ஆட ஆரம்பித்தது

வரிசைக்கிரகமாய்
தேர்வு செய்து தேர்வு செய்து
தேர்வெழுதும் மாணவனாய்
எல்லாவற்றையும் செருகிக் கொண்டே வந்தேன்

பனிக்கட்டிகளோடு உள்ளிறங்கும் மதுவாய்
மனதையும் உடலையும் நனைத்துப் போன நினைவு
உள்ளிறங்கி லயிக்க ஆரம்பித்த கணம்
திடீரென முகத்தில் அறைந்த காற்றாய்
பால் கூப்பனுக்கு காசு என்று
அறைக்கதவை தட தடக்க வைத்தாள் மனைவி

அம்மாவுக்கு தெரியலையாம்
நீ சொல்லிக்கொடு என
கணக்கு நோட்டோடு பாய்ந்தாள் மகள்

புணர்நிலையில் நின்ற நினைவு
கழட்டி எறியப்பட்ட ஆடையாய்
மருண்டு உருண்டோடியது

அடுத்த முறையாவது
அந்த நினைவு ரசத்தை பருக
முழுதாய் ஓரிரவை
ஒதுக்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு
மூடியிருந்த போர்வையை அகற்ற
விடியலின் புறம் பாய்ந்த நிஜ கதிர்கள்
வெளிச்சம் பாய்ச்சி போனது என் முகம் நோக்கி.

நன்றி : மலைகள்