Wednesday 24 February 2016

”பெண்டுல” மனசு

தவிர்த்திருக்கக் கூடிய

சாத்தியங்கள் இருந்தும்

தர்க்க ரீதியாய் ஏற்றுக் கொண்ட

சுவடுகளில் குதித்து ஓடுகிறது காலம்.

 

ஆண்டுகளைத் தின்று

செரித்துப் புதைந்த பாதத்தின்

ஆறாம் விரல்களின் வெற்றிடத்தை

மறைத்து நிற்கின்றன கரையோரப் புற்கள்.

 

குழுமைக்குள் விட்டு வந்தவைகளில்

மக்கி உளுத்தது போக

உள்ளங்கைகளில் உறைந்தவைகள்

காலத்திற்கு ஒவ்வாதவைகளாகின.

 

தன் வேரடியின் மீது

தடம் பதித்த பேருந்தின் கூரையில்

கிளை உதறிய மலராய்

இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.

 

புலப்பட்டு பயணித்த புள்ளிக்கும்

கானலாகி எழும் புள்ளிக்கும் இடையே

முட்களின் முனங்களோடு நகரும்

பெண்டுலமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசு!

 

நன்றி : பதாகை.காம்