Saturday 7 May 2016

பிரிவிலிருந்து!

விசாரிப்புகளோடும், கைகுலுக்களோடும்

துளிர்க்கத் துவங்கியிருந்த நட்பை

தகர்த்தெறிந்ததது முள்ளாய் நீண்ட முரண்.

 

முள்ளின் முனை முறிக்கச் செய்த முயற்சிகள்

காற்றுக் குமிழிகளாய்

தன்னைத் தானே மாய்த்துக் கொண்டன.

 

புன்னகைகளும் பார்வைகளும்

அரிதாரமிட்டுக் கொண்டதில்

உவப்பற்றுப் போயின பிந்தைய சந்திப்புகள்.

 

அயர்ந்த மனம் விட்டு விலகிட எத்தனிக்கையில்

இன்னொரு முனையின் நெகிழ்வை

கொண்டு வந்து சேர்த்தது அலைபேசி.

 

பரலோக தேவனாய் உயிர்தெழுந்த நட்பு

பிரிவிலிருந்து தொடங்கியிருந்தது

தனக்கான ஆரம்பப் பாதச்சுவட்டை!

நன்றி : பதாகை இணைய இதழ்