Sunday 22 December 2019

அபிப்ராயங்களுக்கு அப்பாற்பட்ட குழந்தைகள் உலகம்!

குழந்தைகளுக்கு துணிகள் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தேன். பணம் செலுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். மகனும், மகளும் கடைக்கு உள் பகுதியில் இருக்கும் பணம் செலுத்தும் இடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு கூட்டம் குறைவாக இருக்கிறதா எனப் பார்க்கப் போகிறார்களோ? என்று நினைத்தேன்.  

 

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவர்கள், "டாடி………….அந்தக் கவுண்டருக்குப் பக்கத்துல ஒரு சின்ன பாக்ஸ் இருக்கு. அதுல ஆதரவற்றவங்களுக்கு டொனேஷன் போட்டிருக்காங்க. நாங்களும் அதுல காசு போடணும். சில்லரை கொடுங்கள்என்றார்கள். ஆளுக்கு ஒரு பத்து ரூபாய் தாளைக் கொடுத்தேன். அவ்வளவு வேண்டாம். இருவருக்கும் சேர்த்து பத்து ரூபாய் தாருங்கள் போதும் என்றார்கள்.

"ஆளுக்கு பத்து ரூபாயா போடலாம்ல?" என்றேன்.

"வேண்டாம்" என பிடிவாதமாய் நின்றவர்கள் ஆளுக்கொரு ஐந்து ரூபாய் காயினை மட்டும் வாங்கிச் சென்றார்கள். அப்பொழுது காரணம் புரியவில்லை. நானும் அவர்களை விடவில்லை. தொடர்ந்து பேசியதில் வழக்கமாக பள்ளிக் கூடம் செல்லும் போது திண்பண்டம் வாங்குவதற்காக என்னிடமிருந்து வாங்கிச் செல்லும் பத்து ரூபாயை பள்ளிக்குச் செல்லும் போது வாங்கிச் சென்றிருக்கவில்லை. அதை வாங்கி அந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி சேகரிப்புப்பெட்டியில் போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது.  

 
குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே நம் அபிப்ராயங்களுக்கு அப்பாற்பட்டே நிற்கிறது! 

No comments:

Post a Comment