Friday 28 December 2018

கூடாதவை தவிர்ப்போம் !

துளசிதேவி விநாயகரை மணம் புரிய விரும்பி வெகுகாலம் தவமிருந்தாள். விநாயகரோ, நீ திருமாலுக்கு மனைவியாக வேண்டியவள். மதி கெட்டு என்னை மணம் புரிய விரும்பாதே என எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஆனால் துளசிதேவி விநாயகரை மணம் செய்து கொள்வதில் பிடிவாதமாய் இருந்தாள். அவளின் பிடிவாதம் கண்டு வெகுண்டெழுந்தவர், ”நீ செடி வடிவம் பெறுவாயாக என்றும், என்னுடைய தினசரி வழிபாட்டிற்கும், பூஜைக்கும் நீ அருகதையற்றவளாவாய் என்றும் சாபமிட்டார்”.

துளசிதேவியைப் போல சிவனின் வழிபாட்டிற்குத் தாழம்பூ உகந்ததல்ல. இதை சிவபெருமானே சொல்லி இருக்கிறார். தன்னுடைய முடியையும், அடியையும் காணும் போட்டியில் பிரம்மனோடு சேர்ந்து பிராடுத் தனம் செய்ததால் தாழம்பூவுக்கு இந்தத் தண்டனை கிடைத்தது. இப்படி இறைவன் தனக்கு உகந்தவை அல்ல என விலக்கியதை நாம் அத்தெய்வங்களின் வழிபாட்டிற்கு வாங்கிச் செல்லக்கூடாது.

வழிபாட்டிற்கும், தெய்வத்திற்கும் உகந்தவைகளுடன் ஆலயம் வந்தபின் நம் கையில் இருந்து அர்ச்சனைத் தட்டை வாங்கியதும் குருக்கள் கேட்கும் முதல் கேள்வி, ”யார் பெயருக்கு அர்ச்சனை?”. அப்படிக் கேட்டதுமே வீட்டில் உள்ளவர்கள், உறவுக்காரர்கள், குழந்தைகள் என எல்லோர் பெயரும் நம் நினைவில் வந்து குழப்பியடிக்க ஆரம்பித்து விடும். யார் பெயரைச் சொல்வது என் முடிவு செய்ய முடியாமல்சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள்எனச் சொல்லி விடுவோம். ஜீவாத்மாவாகிய நமக்குத் தான் நோய்கள், தோஷங்கள், தொல்லைகள் என எல்லாமும் உண்டு. அதன் பொருட்டே துன்பக் கடலில் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றோம். அதிலிருந்து காக்க வேண்டியே பரமாத்வாகிய இறைவனை நாடி ஆலயம் வருக்கின்றோம். அப்படி இருக்க தெய்வத்தின் பெயரில் அர்ச்சனை செய்வது அசட்டுத்தனமில்லையா? இறைவனுக்காக இறைவனிடமே கேட்பது பைத்தியக்காரத் தனமில்லையா? பலவீனமான ஜீவாத்மாவாகிய நமக்குத் தான் பலமான பரமாத்மாவின் ஆசியும், அருளும் வேண்டும். இதை நமக்கு சூசகமாய் சொல்வதற்காகவேயார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்என ஆலயங்களில் கேட்கிறார்கள். சமயத்தில் இப்படிக் கேட்ட புரோகிதருக்கும் அதன் உள்ளர்த்தம் புரியாமல் இறைவனின் பெயருக்கே அவர் அர்ச்சனை செய்து தரும் அட்டூழியங்களும் ஆலயங்களில் உண்டு.

வழிபாட்டை முடித்துக் கொண்டு ஆலயவலத்திற்கு வரும் போது பிரகார தளத்தில் கோபுரம், கொடி மரத்தின் நிழல் விழுந்திருந்தால் நிழலின் முனைப் பகுதியில் இருந்து அதன் அடிப்பாகம் வரையிலான நீளத்தை தோராயமாக ஐந்து பங்காக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிற்கு முனைப்பகுதியில் இருந்து இரண்டு பங்கு அளவிலேயே நடந்து வர வேண்டும். அப்படி நடந்து வருவதைக் கூட எதிரும், புதிருமாய் இஷ்டப்படி அதாவது அப்பிரதட்சணமாக வலம் வரக்கூடாது. குழப்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே அப்படி வலம் வருவார்கள். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விச அக்கினியில் இருந்து தங்களைக் காத்தருளுமாறு சிவபெருமானிடம் உதவி கேட்டு ஓடி வந்தனர். அவர்கள் வந்த பாதையில் விசபுகையானது சூழ்ந்து கொண்டதால் அவர்கள் எதிர் திசையில் ஓடிச் சென்று சிவனைச் சந்தித்து முறையிட்டனர். தேவர்களைப் போல நமக்கு குழப்பமோ, பயமோ இல்லை. நம்முடைய அமைதிக்காகவும், ஆத்ம சுத்திக்காகவும் மட்டுமே ஆலயத்தை வலம் வருகின்றோம். வழிபடுகின்றோம். எனவே பிரதோஷ வழிபாடு வேளை தவிர மற்ற சமயங்களில் அப்பிரதட்சனமாக வலம் வரக்கூடாது. வலம் வரும் சமயத்தில் அவசர வேலையாகச் செல்பவர்களைப் போல வேக வேகமாக ஓடவும் கூடாது.

விழுந்து வணங்குதல் நம் தமிழ் மரபோடு ஆலய மரபாகவும் தொன்று தொட்டு பின்பற்றப்படுகிறது. ஆலயத்தை வலம் வந்த பிறகு மும்மூர்த்திகளின் அடையாளமாய் விளங்கும் கொடி மரத்தின் பக்கத்தில் மட்டுமே விழுந்து வணங்குதல் வேண்டும். வேறு எந்த சந்நிதியிலும், எவர் காலிலும் ஆலய வளாகத்திற்குள் விழுந்து வணங்குதல் கூடாது. பெண்கள் முழு உடம்பும் பூமியில் படும் படியாக விழுந்து வணங்கக் கூடாது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில்ஆள்பாதி; ஆடைபாதிஎன்பதன் அர்த்தமே மாறி விட்ட நிலையில் எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒருமித்து தெய்வ சிந்தனையிலேயே இருக்க வேண்டும் என்பதாலயே பெண்கள் ஆலயத்தில் அஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்குதல் கூடாது என்றனர். அவ்வாறே இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கியும், தோப்புக் கர்ணம் போட்டும் ஆலயத்தில் பெண்கள் தெய்வங்களை வழிபடக்கூடாது. ஆணில் பாதி அவள் என உலகிற்கே உய்த்துக் காட்டிய இறைவனின் சந்நிதியில் வழிபட பெண்களுக்கு இத்தனை கட்டுப்பாடா? இதெல்லாம் பெண்களுக்கு எதிரான ஆணின் அடக்குமுறையில்லையா? எனக் கேள்விகள் எழலாம். ஆனால், காரணமின்றி நம் முன்னோர்கள் காரியங்களை மட்டுமல்ல கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை

பெண்களின் ஸ்தனங்களையும், தொப்புள் பிரதேசங்களையும் பார்த்து மதி மயங்கி காம விகாரமடையாதே. இது வெறும் மாமிச பிண்டம். சதை, கொழுப்பு, ஆகியவைகளின் மாறுபட்ட விகாரங்களே அவைகள் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்என்று ஆதிசங்கரர் நமக்குச் சொன்ன ஸ்தோத்திரம்கூடாதுஎன்பதற்கான காரணத்தைத் தெள்வுபடுத்தும்.

அவ்வாறே குளித்து முடித்து தண்ணீர் சொட்டும் ஈரத் தலையுடனோ, தலை முடியை விரித்துப் போட்டுக் கொண்டோ, வெற்றிலை போட்டுக் கொண்டோ, வெறும் கையை வீசிக் கொண்டோ ஆலயங்களுக்குள் வரக்கூடாது என்பது இருபாலருக்கும் பொருந்தும். அவரவர் வரைமுறை மீறாது இறைவனை வணங்கும் போது ஆத்மா லயிக்கும் இடமாக ஆலயம் மாறும். அங்கிருந்து திரும்பும் போது மனம் சுத்திகரணம் பெற்றுத் திகழும்.

நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்




No comments:

Post a Comment