Wednesday 26 December 2018

தூய்மையில் தொடங்கும் பக்தி!

பக்தி செலுத்துவதற்குரிய வழிகளில் ஒன்றான வழிபாட்டின் போது பின்பற்ற வேண்டிய சில வரைமுறைகளை நம் முன்னோர்கள் காரணங்களோடு சொல்லித் தந்திருந்தனர். முறையான இறைவழிபாட்டை மறந்ததைப் போல இவைகளையும் மறந்து போனோம். மறந்ததை நினைவூட்டிக் கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாத வேக வாழ்க்கையில் சம்பிரதாயம் என்ற பெயரில் வழிபாட்டை மட்டுமாவாது தொடந்து செய்து வருகின்றோம். அந்த மட்டும் சந்தோசப்பட்டுக் கொண்டாலும் காரணம் அறிந்து காரியம் செய்யும் போது அதில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடு பக்திக்கு அடிப்படை

ஆலய வழிபாட்டின் ஆரம்பம் சுகாதரத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. எல்லா ஆலயங்களின் வெளிப்புறத்தில் கிணறோ, தண்ணீர் குழாய்களோ அமைத்திருப்பார்கள். சில ஆலயங்களில், “கால்களைக் கழுவிய பின் உள்ளே வரவும்என எழுதிப் போட்டிருப்பார்கள். நம் கால்களின் சுத்தம் நமக்குத் தெரியும், அப்படியிருக்க ஏன் கால்களைக் கழுவ வேண்டும்? என நாம் யோசிப்பதையே முன்னோர்கள் வேறு விதமாக அதாவது சுத்தத்தை விட சுகாதாரத்தைப் பற்றி யோசித்தார்கள். கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கால்களில் எளிதில் தொற்றிக் கொள்ளும். அப்படியே ஆலயங்களுக்குள் நுழையும் போது அங்கு வந்திருக்கின்ற குழந்தைகள், வயதில் மூத்தவர்களை கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். அதனால் கால்களைக் கழுவிய பின்னே உள்ளே வர வேண்டும் என வரையறுத்தார்கள். அப்படிச் செய்யாத போது சனிபகவான் நம்மை பிடித்துக் கொள்வான் எனப் பீடிகை போட்டு வைத்தார்கள்.

சும்மா சொன்னால் எதையும் செய்ய மறுப்பது மனித இயல்புஅதனாலயே இருளைக் காட்டிக் குழந்தைகளை பயமுறுத்திச் சாப்பிட வைப்பதைப் போல சனீஸ்வரரைக் காட்டி நம்மைச் செய்ய வைத்தார்கள். கால்களைச் சுத்தம் செய்த பிறகு வாசல் திறந்திருக்கிறது என்பதற்காக உள்ளே பாய்ந்து விடக்கூடாது. ஆலய வாயிலின் இருபுறமும் வாயில் காவலர்களாக இருக்கக்கூடிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்ற பின்பே உள்ளே செல்ல வேண்டும். திருமாலையும், மகாலட்சுமியையும் வைகுண்டத்தில் எந்நேரமும் சந்திக்க பிரம்மாவின் புதல்வர்களான சனகர், சனந்தர், சனத்குமாரர் அகியோர் அனுமதி பெற்றிருந்தனர். அப்படியிருந்தும் அவர்கள் அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் துவாரபாலகர்களின் அனுமதி பெற்ற பின்பே வைகுண்டத்தின் உள்ளே சென்று வந்தனர். “உத்தரவு பெற்று உள்ளே செல்லவும்என்பது பிறர் வீட்டிற்குள் நுழைய மட்டுமல்ல. ஆலயத்திற்குள் நுழைவதற்கும் தான்!

வாயில் தாண்டி உள்ளே நுழைந்ததும் நம் முதுகுத் தண்டைக் குறிக்கக்கூடியதுவஜஸ்தம்பம்என்றழைக்கப்படும் கொடிமரம் இருக்கும். இதன் அடிப்பாகம் படைப்பை உணர்த்தும் பிரம்மாவின் பாகமாகும், அதன் மேல் அமைந்திருக்கும் எண்கோண வடிவிலான பாகம் காத்தலைக் குறிக்கும் திருமாலின் பாகமாகும். அதற்கு மேல் நம் முதுகுத் தண்டில் உள்ள 32 கட்டுகளைக் குறிக்கும் வகையில் 32 வளையங்களுடன் அமைந்திருக்கும் பாகம் அழித்தலைச் சுட்டும் சிவனின் பாகமாகும். முத்தொழிலைச் செய்யும் மூம்மூர்த்திகளை வணங்கிச் செல்லும் முகமாக கொடிமரத்தை வணங்கிச் செல்ல வேண்டும்.

எல்லா ஆலயங்களிலும் வாசலின் ஓரத்தில் விநாயகர் வீற்றிருப்பார். அவரை வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும், ஆலய வழிபாட்டில் கூட விநாயகருக்கு வழிபாடு நடந்த பிறகே மற்ற தெய்வங்களுக்கு வழிபாடு நடக்கும். இந்த ஐதீகம் வடகயிலையில் தொடங்கித் தென் இலங்கை வரை நடைமுறையில் இருக்கிறது. இந்த ஐதீகத்திற்கு ஒரு கதை உண்டு.

வேதங்களை வகைப்படுத்திய வியாசர் பதினெண் புராணங்களை செய்யுள் வடிவமாக்க முயன்ற போது அதன் பொருள் புரியாமல் குழம்பிப் போனார். தன் குழப்பத்திற்கான காரணம் அறிய பிரம்மனிடம் வந்தார். நடந்தவைகளைக் கேட்டறிந்த பிரம்மன், “வேதவிற்பனரே, அண்டமாக, அவனியாக, முழு முதற்கடவுளாக இருக்கின்ற விநாயரின் பாதம் பணியாது இந்தக் காரியத்தை ஆரம்பித்துள்ளீர்கள். அதனால் தான் ஆரம்பமே குழப்பமாகி விட்டது. உம்மைப் போன்றே விநாயகரை மனதில் நினைக்காததாலயே கருடன் திருமாலின் வாகனமாகவும், அனுமன் ஸ்ரீஇராமரின் வாகனமாகவும் இன்னும் முக்தி பெறாமலே இருக்கின்றனர். அந்த இராமபிரானே கூட விநாயகரை மனதில் நினைக்காததாலயே வாலியை நேர் நின்று கொல்லும் சகதியற்றவரானார். இதனாலயே வேதத்தைச் சொல்லத் தொடங்கிய சிவபெருமான்ஓம்என்கின்ற ஓங்கார மந்திரத்தை முதலில் அமைத்தே வேதத்தை அருளினார். சிவபெருமான் மட்டுமல்ல நான், இந்திரன், திருமால் உள்ளிட்டோரும் விநாயகரை துதித்த பின்பே எங்கள் பணியைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். அவ்வாறே நீங்களும் விநாயகரை வணங்கி உங்கள் காரியத்தைச் செய்ய ஆரம்பியுங்கள்என ஆலோசனை வழங்கினார். ஆலோசனையும், ஆசியும் பெற்று வந்த வியாசர் விநாயகரைத் துதித்துக் காரியத்தை ஆரம்பித்தார். நினைத்தபடியே பதினெண்புராணங்களைச் செய்யுள் வடிவமாக்கி முடித்தார். இப்படி இறைவனுக்கெல்லாம் இறைவனாய் விநாயகர் இருப்பதாலயேகணபதி பூஜைசெய்தும், “பிளளையார் சுழிபோட்டும் செயல்களை ஆரம்பிக்கின்றோம்

சிவன் ஆலயங்களில் சிவனை வழி படுவதற்கு முன் அவரின் உதவியாளர் நந்தி தேவரிடம் அனுமதி பெற வேண்டும். அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைத் தேவர்கள் கடைந்த போது ஏற்பட்ட விசத்தில் இருந்து தங்களைக் காக்க சிவனிடம் சென்று முறையிட்டனர். அப்படிச் சென்ற அவசரத்திலும் கூட அவர்கள் நந்தியிடம் அனுமதி பெற்றே சென்றனர். தேவர்கள் வகுத்துக் கொடுத்த மரபைப் பின்பற்றி  இறைவனை வழிபட்ட பின் நந்தியிடம் நம் வேண்டுதலை இரகசியமாய் சொல்லி விட்டு வர வேண்டும். அப்படிச் சொல்லி விட்டு வந்தால் அதை அவர் நேரம் வாய்க்கும் போது இறைவனின் நினைவூட்டலுக்குக் கொண்டு வருவார் எனபது நம்பிக்கை. நம்பிக்கை தானே வாழ்க்கை!

வாயில் காப்பாளரான துவார பாலகர்களிடம் அனுமதி பெற்று ஆலயத்திற்குள் சென்றதைப் போல வெளியேறும் போது ஆலயக் காப்பாளரான சண்டிகேஸ்வரரிடம் சொல்லி விட்டு வர வேண்டும். அவர் எப்பொழுதும் சிவ தியானத்தில் இருப்பவர். தியான நிஷ்டையின் மூலம் தன் முன் வந்து நிற்பவர்களை அவர் அறிந்து கொள்வார். அவர் முன் வந்து நின்றுஇந்த ஆலயத்தில் இருந்து நான் எதையும் எடுத்துச் செல்லவில்லைஎன்பதன் அடையாளமாக இரண்டு கைகளையும் விரித்து மட்டும் காட்ட வேண்டும். நாமோ, கைகளை விரித்துக் காட்டுவதற்குப் பதில் கை தட்டியும், சொடக்குப் போட்டும் சண்டிகேஸ்வரரின் தியானத்தைக் கலைத்து விடுகிறோம். கூடவே புது ஆடை கிடைக்கும் எனச் சொல்லிக் கொண்டு அணிந்திருக்கும் ஆடைகளில் உள்ள நூல்களை உருவி அவர் மீது வீசி அவருடைய இருப்பிடத்தையும் பஞ்சு மில் கூடாரமாக்கி விடுகின்றோம். புது ஆடை வாங்கித் தருவது சண்டிகேஸ்வரரின் வேலை அல்ல. அது அவரவர் பெற்றோரின் கடமை என உணர்ந்தால் அது ஆலயத் தூய்மைக்கான ஆரம்பமாக இருக்கும்.

நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்



No comments:

Post a Comment