Saturday 22 December 2018

கல்லை இறைவனாக்கும் பெருஞ்சாந்தி !

நமது உடம்பு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இதில் ஆகாயம் தவிர்த்து மற்ற மூன்றும் நிலத்தில் இருந்தே தோன்றுகிறது

இன்னும் சொல்லப்போனால் தொலைவானம் பூமியை (நிலத்தை) தொட்டுக் கொண்டிருப்பது போலவே நமக்குத் தெரிகிறது. நாம் நிலைத்து நிற்க உதவும் நிலத்தில் இருந்து எல்லாமே தோன்றுகிறது என்பதாலயே பரம் பொருளின் அடையாளத்தையும் நிலத்தின் ஒரு கூறாக இறுகிப் போய் இருக்கும் கற்களில் வடித்தனர். சில ஆலயங்களில் செம்பில் விக்கிரகங்களை வடிவமைத்துப் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். செம்பு எளிதில் மின்சாரத்தைக் கடத்த வல்லது. அந்த மின்கடத்தியில் விக்கிரகத்தை அமைத்து அதை இறைநிலைக்கு மாற்றம் செய்யும் போது அந்த சக்தியானது இறைவனிடமிருந்து நமக்கும் எளிதில் கடத்தப்படுகிறது

கல்லோ, செம்போ அது இறைநிலையை அடைவதற்கு கும்பாபிஷேகம் என்னும் பெருஞ்சாந்தி என்னும் சடங்கு அவசியம். அதனால் தான் கும்பாபிஷேகம் காண்பது புண்ணியம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் கும்பம் மிகவும் முக்கியம். கும்பத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயை தலையாகவும், மாவிலையை கையாகவும், அதைச்சுற்றிக் கட்டப்படும் துணியை தோலாகவும், கும்பத்தின் மேல் பூசப்படும் செம்மண்னை இரத்தமாகவும், கும்பத்தினுள் வைக்கப்படும் தீர்த்தத்தை (நீரை) சதைப்பகுதியாகவும், தருப்பை புல்லை எலும்பாகவும், கும்பத்தைச் சுற்றிக் கட்டப்படும் நூலை நரம்பாகவும், கும்பத்தின் அடியில் பரப்பப்படும் நவதானியங்களை ஆசனமாகவும் பாவித்து உருவ வடிவில் இறைவனாய் இருக்கின்ற பிம்பத்தை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். இதற்குஆவாஹனம்என்று பெயர்.

கருவுற்றிருக்கும் பெண்னை பிரசவ நேரத்தில் பொது வார்டில் இருந்து பிரசவ வார்டிற்கு மாற்றுவதைப் போல ஆவாஹனம் செய்யப்பட்ட கும்பத்தை இறை தன்மை பெற வைப்பதற்காக யாகசாலைக்குக் கொண்டு வருவார்கள். வாழை, மாவிழை தோரணங்கள், ஒலி மற்றும் ஒளி மூலம் திருமண வீட்டை வருபவர்களுக்கு அடையாளம் காட்டுவதைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இறைவன் இறங்கி வந்து அருள் புரிய வேண்டிய யாகசாலையை அடையாளம் காட்டுவதற்காக வேதவிற்ப்பனர்கள் யாகசாலையைத் தனியே அமைத்து அக்னி புகையுடன் வேத ஒளி, சிவகாம ஒலி, தமிழ் மறை ஒலி முதலியவைகளை முழங்குகின்றனர்.

திருமண வீட்டிற்கு வருகின்றவர்களை பன்னீர் தெளித்து வரவேற்பதைப் போல யாகசாலைக்குள் வருகின்ற இறைவனை வரவேற்கும் நிகழ்வு யாகம். “வழிபடுதல்என்ற பொருள் கொண்டயஜ்என்ற சொல்லில் இருந்து வந்தயக்ஞம்என்பதே யாகம் என்று அழைக்கப்படுகிறது. இதை வேள்வி, ஹோமம் என்று அழைப்பர். மற்ற மதங்கள் உருவங்களை வைத்து வழிபட்ட போதும் அந்த மதங்களில் எல்லாம் இல்லாத வழிபாட்டு முறையான யாகம் இந்து மதத்தில் மட்டுமே இருப்பது சிறப்பு.

நீக்கமற நிறைந்து எங்கும் வியாபித்திருக்கின்ற பரம் பொருளான இறைவன் யாகசாலையில் வேத விற்பனர்களால் உச்சரிக்கப்படும் வேதமந்திரங்களில் காற்று வழியாக இறங்குகிறான் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு உரமிடும் வகையில் யாகசாலையில் வேதங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்கள் கூடி உரக்க சப்தமிட்டு வேதமந்திரங்களை முழங்குகின்றனர்.

காற்றில் இறங்கிய இறைவன் அங்கிருந்து யாக குண்டங்களில் வளர்க்கப்படும் அக்கினியில் இறங்குகிறான். யாகத்தில் அக்னி தான் பிரதானம். ஏனெனில், தன்னிடம் தரப்படுகின்ற கடிதங்களைச் சரியான முறையில் கொண்டு போய் சேர்க்கின்ற தபால் ஊழியரைப் போல ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய மந்திரங்களைச் சொல்லித் தன்னுள் இடப்படுகின்ற அவிர் பாகத்தை உரிய தேவர்களிடம் அக்கினி தான் கொண்டு போய் சேர்க்கின்றான். அதனால் தான் 36 தத்துவ வடிவமாகிய யாக சாலையில் முக்கோணம், நாற் கோணம், அரிச்சந்திர வடிவம் போன்ற ஒன்பது வடிவங்களில் யாக குண்டங்களை அமைத்து ஒன்பது அக்கினியை வளர்க்கின்றனர்.

மரக்குச்சிகளில் உள்ள அக்கினி ஹோம குண்ட அக்கினியுடன் கலந்து விழுவதைப் போல நம் உடலை இயங்கச் செய்கின்ற ஆத்மா பரம் பொருளுடன் சேரும் நிலையை அடைய வேண்டும் என்பதன் அடையாளமாக யாக குண்டங்களைச் சுற்றிலும் பசுந்தர்ப்பைகளை பரப்பி ஆல், அரசு முதலிய விறகின் சுள்ளிகளை இடுகின்றனர்.

பாலை தயிராகவும், தயிரை வெண்ணெய் ஆகவும் மாற்றாமல் பாலில் மறைந்திருக்கும் நெய்யைப் பெற முடியாது. அதுபோல நம்மில் ஊறிப்போய் நிற்கின்ற அஞ்ஞானங்களை மாற்றிக் கொண்டால் மட்டுமே நமக்குள் மறைந்து வாழ்கின்ற சத்தியத்தைக் காணமுடியும் என்பதன் அடையாளமாக சத்தியத்தின் உருவகப் பொருளான நெய்யை யாக குண்டத்தில் இடுகின்றனர்

பின்னர் ஸ்ருத் (சுருக்கு), ஸ்வரம் (சுருவம்) என்றழைக்கப்படும் ஹோம கரண்டிகளின் மேல் ஹோம திரவியங்களை ஒரு தட்டில் வைத்து மனதாலும், சொல்லாலும், செயலாலும், கைகளாலும், கால்களாலும் வயிற்றினாலும், மற்ற புலன்களாலும் நினைத்த, செய்த, சொன்ன எல்லாவற்றையும்தானே பேசிய பேச்சுஎன்னும் பொருளில்ஸ்வாஹாஎன்று சொல்லி அக்கினியில் இறங்கிய இறைவனுக்கு அர்ப்பணம் செய்து மாவிலை, தர்ப்பையின் உதவியால் இறையருளை கும்பத்தில் உள்ள நீருக்கு மாற்றுவார்கள்.

இறையருள் ஏறிய கும்பத்தில் எந்த இறைவனை பிரதிஷ்டை செய்ய வேண்டுமோ அந்த தெய்வத்திற்குரிய ஆவாஹன மந்திரங்களால் சக்தியூட்டப்பட்ட நீர் இருக்கும். நீர் வடிவமற்றது. எதில் அதை வைக்கின்றோமோ அந்த வடிவில் மாறும் இயல்புடையது. வடிவமற்ற நீரைப் போன்ற பரம் பொருளுக்கு வடிவத்தை தருவதற்காக தான் கும்பத்தில் நீரை வைக்கின்றனர். தொடர்ந்து கும்பத்திற்குப் பூஜைகள் செய்தும் வேத மந்திரங்களால் உருவேற்றியும் அதைத் தெய்வீக சக்தி நிரம்பியதாக்குகின்றனர்.

கும்பத்தில் உள்ள இறையருளை மீண்டும் ஆலயத்தில் உள்ள பிம்பத்திற்கு தருப்பைக் கயிற்றின் மூலம் செலுத்தி கும்பத்தில் உள்ள நீரினால் பிம்பத்திலும், கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வார்கள். இதுவே கும்பாபிஷேகம் என்றழைக்கப்படும். இப்படி இறை சக்தியைப் பெறும் கர்ப்பகிரகத்துக் கல்லை இறைவன் விசேஷமாக இருக்கும் இடம் என்ற பொருளில்விக்கிரகம்என்று அழைத்து வணங்கி வழிபடுகின்றோம். விக்கிரகத்தில் இருக்கும் இறை சக்தியை நாம் நம்முடைய கைகளில் இருக்கும் காந்த சக்தி மூலம் ஈர்த்துக் கொள்ள முடியும் என்பதாலயேஆலயம் தொழுதல் சாலவும் நன்றுஎன்றனர். மூத்தோர் மொழிகளின் நிதர்சனத்தை உணர்ந்தவர்கள் இறையருளை எளிதில் பெறுகின்றனர். மாறாக மூத்தோர் மொழிகளை புறந்தள்ளிப் போகிறவர்கள் இறைவனிடமிருந்தும் விலகியே  நிற்கிறார்கள்.

நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்



No comments:

Post a Comment