Saturday 29 December 2018

அர்ச்சனை எனும் அர்ப்பணிப்பு !

வழிபாட்டின் ஒரு அங்கம் அர்ச்சனைஅர்ச்சனை என்பதற்குஅர்ப்பணித்தல்என்று பொருள். இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ச்சனை மூலம் அர்ப்பணித்து விடுகின்றோம். அதனால் தான் அர்ச்சனைக்காக கொண்டு வந்த எந்தப் பொருளையும் கொண்டு வந்த படியே திருப்பி எடுத்துச் செல்வதில்லை

எந்த ஆலய வழிபாட்டிற்குச் சென்றாலும் வாங்கிச் செல்லக்கூடிய அர்ச்சனைப் பொருட்களில் அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூக்களைத் தவிர தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம், விபூதி, குங்குமம் ஆகியவைகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவைகள் மட்டும் அப்படி என்ன உசத்தி? இப்படி கேள்வி கேட்பீர்களேயானால் அது தவறில்லை. அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்கப்படும் இது போன்ற கேள்விகளே ஆரோக்கியமான ஆன்மிக வளர்ச்சி பெறுவதற்கு உரிய சரியான அணுகுமுறை. இறைவன் இருக்கின்றான் என்றால் அவனை எனக்குக் காட்ட முடியுமா? என்ற கேள்வி நரேந்திரனை விவேகானந்தராக்கியது. அறிவின் எழுச்சியில் பிறக்கும் இது போன்ற கேள்விகளுக்கான பதில்களில் ஆன்மிகத்தின் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன

வெளியே பளபளப்பான மேல் தோலையும், உள்ளே பிசிறு பிடித்த நார் பகுதியையும் கொண்ட தேங்காய் நம் உடம்பைக் குறிக்கும். தேங்காயில் உள்ள மட்டையை உரித்து விட்டு ஆலயத்திற்குக் கொண்டு வருவதைப் போல நம் மனதில் உள்ள அழுக்குகளை எல்லாம் வெளியிலேயே உரித்தெறிந்து விட்டு ஆலயத்திற்கு வர வேண்டும்.

அர்ர்ச்சனை தட்டை நம்மிடமிருந்து வாங்கிய ஆலய குருக்கள் தேங்காயை இரண்டாக உடைத்து உள்ளே இருக்கும் நீரை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார். தேங்காயில் இருக்கும் நீர் நமது வினைகளைக் குறிக்கும். தேங்காயில் உள்ள நீரை வெளியேற்றி விட்டு அதை இறைவனுக்கு அர்ப்பணிப்பதைப் போல நமது வினைகளையும், ஆசாபாசங்களையும், எல்லா சிந்தனைகளையும் நீக்கி விட்டு நம்மை இறைவனிடம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்ய வைப்பதன் மூலம் இறைவன் நமக்கு ஞானத்தை அளித்து அறிவுக் கண்ணைத் திறந்து விடுகின்றான். மூன்றாம் கண்ணைத் திறந்து விடுவதன் அடையாளம் தேங்காயை உடைத்த பின் அதில் உள்ள சிறுகுடுமியை பிய்த்து விட்டு முக்கண் தெரியும் படியாகச் செய்வது! தேங்காயை முதலில் உடைப்பதற்கு ஒரு கதை உண்டு.

விநாயகர் தன் தந்தை சிவபெருமானிடம் அவரின் தலையைப் பரிசாகக் கேட்டாராம். எல்லாவற்றிலும் எது உயர்ந்ததோ அதைக் கொடுப்பதற்குப் பெயரே அர்ப்பணம். அதனால், தலையேயானாலும் அர்ப்பணமாய் தருவதற்குத் தயார் என்பதன் அடையாளமாகத் தன்னைப் போலவே மூன்று கண்களை உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அதை விநாயகருக்கு அர்ப்பணம் செய்யக் கொடுத்தார். பக்தனாய் விநாயகர் கேட்க இறைவனாய் சிவபெருமான் அர்ப்பணமாக முதலில் கொடுத்தது தேங்காய். இதன் மூலம் இறைவன் நமக்கு உணர்த்திக் காட்டிய அர்ப்பணத்தின் அர்த்தம் புரிய வேண்டுமானால் அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும். அதனாலயே வழிபாட்டின் ஆரம்பத்தில் தேங்காய் உடைக்கப்படுகிறது.

அர்ப்பணித்தலின் இன்னொரு வடிவம்தியாகம்”. அதற்கு மிகச் சரியான உதாரணம் வாழை. இந்தக் காலத்திம் மட்டுமல்ல எந்தக் காலத்திற்கும் அதுவே உதாரணம் என்பதாலயேவாழையடி வாழைஎன்ற வழக்குச் சொல் வந்தது. தன் அடிமுதல் நுனிவரை எல்லாவற்றையும் பிறருடைய பயன் பாட்டிற்குத் தருவதன் மூலம் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது வாழை நமக்கு நடத்தும் பாடம். இந்தப் பாடத்தை நினைவில் கொள்ளும் விதமாகவே அபிஷேகத்திற்கும், அர்ச்சனைக்கும் வழைப்பழத்தைக் கொண்டு செல்கின்றோம்.

முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை அவநம்பிக்கை. இறைவனை அடைவதற்கு முட்டுக்கட்டைநான்என்ற அகந்தை! அகந்தை இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. அன்பில்லாத இடத்தில் இறைவன் இருக்க மாட்டான். அதனால் தான் அன்பே சிவமானது. அகந்தையானது நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளால் உருவாகிறது. இவ்விரண்டையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால் அகந்தை அகன்று விடும். இதை உணர்த்த நல்வினைக்கு ஒன்று, தீவினைக்கு ஒன்று என இரண்டு பழங்கள் அர்ச்சனையில் இடம் பெறுகிறது.

நம்முடைய வினைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்க மனமானது கனிந்திருக்க வேண்டும். அப்படிக் கனிந்திருப்பதாலயே வாழைப்பழம் இறைவனுக்குரியதாய் ஆனது. நாமும் இறைவனுக்குரியவராய் மாற கனிந்திருக்கப் பழக வேண்டும். அப்படிக் கனிந்திருக்காததாலயே வாழைக்காயை அபிஷேகத்திற்கும், அர்ச்சனைக்கும் பயன்படுத்துவதில்லை. காய் அகந்தையின் அடையாள நிலை. பழம் அகந்தை இழந்ததன் அடையாள நிலை.

தேங்காய், பழம் இரண்டையும் அர்ப்பணம் செய்த பின் ஆலய குருக்கள் வெற்றிலை, பாக்கை எடுத்து இறைவனின் சந்நிதானத்தில் எடுத்து வைப்பார். வெற்றிலை என்பது நம் உடம்பின் மீது நாம் வைத்திருக்கின்ற பற்றுதலைக் குறிக்கும். ஸ்தூல உடம்பு என்ற காணக்கூடியதும், சூட்சும உடம்பு என்ற காணமுடியாததுமான இவ்விரு உடம்பின் மீதான பற்றுதலை விட்டு விட வேண்டும் உடம்பின் மீதான பற்றை வெற்றிலை குறிப்பதைப் போல செல்வங்களின் மீதான பற்றை பாக்கு குறிக்கும். இவ்விரு பற்றையும் விட்டால் மட்டுமே பற்றற்ற பரம் பொருளை அடையும் விமோசனம் கிடைக்கும் என்பதை உணர்த்துவதற்காக அர்ச்சனையில் இரண்டு வெற்றிலைகளும், பாக்கும் இடம் பெறுகிறது.

இப்படியாக நம்மிடமிருந்து விலக்கி விட்ட, விட்டு விட்ட வினைகளையும், உடல் மற்றும் செல்வங்களின் மீதான பற்றுகளையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் என்பது இதயப் பூர்வமாக நிகழ வேண்டும். அதை நமக்குச் சொல்லாமல் சொல்லும் முகமாக நாம் அர்ச்சனைக்காகக் கொண்டு செல்லும் மலர்களையும், மாலைகளையும் இறைவனின் மார்பில் (இதயத்தில்) சாத்துகின்றனர்.

தன்னையே எரித்து அழித்துக் கொண்ட நிலையிலும் பிறருக்கு மனமகிழ்வையும், இன்பத்தையும் தரும் பத்தி தியாகத்தின் இன்னொரு அடையாளம். “பத்தி வழி நின்றால் பரம் பொருளை அடையாளம்என்பது பக்திமான்களின் மொழி. பத்தியைப் பற்ற வைத்ததும் அதை உடனே அருகில் இருக்கும் வாழைப்பழத்தில் செருகி வைப்பார்கள். ஸ்டாண்ட் இல்லாததால் இப்படிச் செருகி வைக்கிறார்கள் என இதைக் கண்டு நாத்திகம் நக்கலடிக்கிறது. ஆத்திகமோ அதற்குச் சொல்லும் காரணம் அற்புதமானது.

ஆலய அர்ச்சனைக்குக் கொண்டு வந்த பொருட்களை திருப்பி எடுத்துச் செல்லும் போது எல்லாப் பொருட்களும் நாம் கொண்டு வந்த நிலையிலேயே இருக்காது. தேங்காய் உடைந்திருக்கும். மாலை, குங்குமம், விபூதி ஆகியவைகள் வேறு ஒருவருடைய தட்டில் இருந்து நம் தட்டுக்குத் தாவி இருக்கும். பத்தியும், சூடமும் பஸ்பமாகி இருக்கும், ஆனால், வாழைப்பழம் மட்டும் அப்படியே இருக்கும். அதையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டதன் அடையாளமாகவே வாழைப்பழத்தில் பத்தியைச் செருகி அதன் நிலையில் மாற்றத்தைச் செய்து தருகின்றனர்.

இப்படியெல்லாம் நம்மை அர்ப்பணித்தல் மூலமாக இறைவனை அடைந்து விட முடியுமா? என்றால் முடியாது. அர்ப்பணித்தல் என்பது இறைவனை அடைவதற்கான வழிமுறைகள் மட்டுமே! இறைவனை நெருங்க வேண்டும் என்றால் அதற்கு இறை வழிபாட்டின் உன்னதங்களை உணர வேண்டும். இதை உணர்வதன் வாயிலாகவே இறைவனை உணர முடியும்.

நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்

No comments:

Post a Comment